Search

தில்லுக்கு துட்டு விமர்சனம்

Dhillukku dhuddu thirai vimarsanam

சேட்டு வீட்டுப் பெண்ணான காஜலைக் காதலிக்கிறான் லோக்கல் பையனான குமார். அது பிடிக்காத காஜலின் தந்தை, ஒரு பங்களாவில் வைத்து குமாரைக் கொல்ல நினைக்கிறார். அந்தப் பங்களாவிலோ இரண்டு பேய்கள் உள்ளன. அங்கு நடக்கும் சுவையான சம்பவங்கள்தான் படத்தின் கதை.

கொஞ்சம் ரெஸ்ட் கொடுத்தால் தேவலை என நினைக்கும் அளவுக்குச் சலிக்கச் சலிக்க பேய்ப் படத்தை வழங்கி வருகிறது தமிழ்ப் திரையுலகம். ஆச்சரியம் ஏற்படுத்தும் விதமாக சந்தானமும் அந்தக் கோதாவில் குதித்துள்ளார். முருக பக்தன் குமாராக ஆடல் பாடலுடன் அமர்க்களமாய் அறிமுகமாகிறார். குடித்து விட்டு, கருணாசுடன் பேசும் காட்சியில் மட்டும் பழைய சந்தானம் தெரிகிறார். விழுந்து விழுந்து நடனம் புரிவதாகட்டும், மிக ஸ்டைலிஷாகச் சண்டை போடுவதாகட்டும் சந்தானம் புதிய பரிமானத்துக்கு மிகவும் முயன்றுள்ளார். அவற்றை எல்லாம் சோதித்துப் பார்த்து விட்டு, இரண்டாம் பாதியில் தான் பேய் பங்களாவுக்குள் நுழைகிறார் சந்தானம்.

தொய்வுறும் சமயங்களில் எல்லாம் தமிழ் சினிமா சந்தானத்தைக் கொண்டு சமாளித்து வந்த காலம் போய், இப்பொழுது ‘நான் கடவுள்’ இராஜேந்திரனைக் கொண்டு சமாளித்து வருகிறது தமிழ்த் திரையுலகம். சந்தானம் நாயகன் நடிக்கும் படமும் அதற்கு விதிவிலக்கில்லை. இவரில்லா விட்டால் இப்படமே இல்லை. இரண்டாம் பாதி முழுவதும் சிரிப்பொலியில் முழுகத் தனியொருவராகப் பொறுப்பேற்கிறார்.

காஜலாக ஷனன்யா நடித்துள்ளார். ஒரு பீர் கொடுத்து, திருடனை ஷனன்யா போலீஸிடம் மாட்டி விடும் காட்சி அருமை. காஜலின் தந்தையாக நடித்திருக்கும் செளரப் சுக்லா மிகக் கச்சிதமாகக் கதாபாத்திரத்திற்குப் பொருந்துகிறார். ‘ராமரானாலும் பாபரானாலும்’ என ஹே ராம் படத்தில் கமலுடன் இணைந்து இவர் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஞ்சனா பாணியில், சாமியைத் துணைக்கு இழுத்துக் கொண்டுள்ளார் இயக்குநர் ராம்பாலா. இவர் விஜய் டி.வி.யில் வந்த ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியினை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தில் புதுமையென ஏதுமில்லா விட்டாலும், ‘நான் கடவுள்’ ராஜேந்திரனைக் கொண்டு நன்றாகச் சிரிக்க வைத்துள்ளார் ராம்பாலா.