Search

சிரார்த்த கிரியைகள்

இந்து வேதங்கள், சிரார்த்த கிரியைகள் மூதாதையர்களின் ஆவிகளின் ஷேமத்துக்காக செய்யப்படுவதையும் அவைகளுக்கு உணவு பானம் முதலியன படைக்கப்படுவதையும் விவரிக்கின்றன. இந்த வழக்கங்கள் இந்துக்கள் மத்தியில் மாத்திரமன்றி, கிரேக்கர்கள், யூதர்கள், ஆஃப்ரிக்க ஆதிவாசிகள், பிரித்தானியர்கள் போன்ற வேறு பல இனமக்கள் மத்தியிலும் காணப்பட்டன. ஆங்கிலத்தில் இவ்வழக்கத்தை Libation என்று கூறுகிறார்கள்.

இறந்தவரை நினைத்து அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று பிரார்த்திப்பதும் அவருடைய நினைவாக ஏழைகளுக்குத் தானம் வழங்குவது போன்ற புண்ணிய கருமங்களைச் செய்வதும் இறந்தவருக்கு நன்மை பயக்கும் காரியங்களாகும். இறந்தவர் புதிய பிறப்பொன்றை எடுத்துவிட்ட பின்னரும் அவருடைய மனோசரீரத்தில் சிரார்த்தக் கிரியைகளால் நல்விளைவுகள் ஏற்படுகின்றன. 

மனிதனின் மனதில் இருந்து எழும் சிந்தனை அலைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. பிறர் நலம் பேணும் நற்சிந்தனைகளும் இறைவன் பால் செலுத்தப்படும் அன்பும் கனிவும் நிறைந்த சிந்தனைகளும் ஒருமுகப்படுத்தப்படும் பொழுது மிகப்பலம் பொருந்தியவையாகவும் அதகி தூரம் செல்லக் கூடியவையாகவும் அமைகின்றன.

ஒரு மனிதனைப் பற்றி இன்னொரு மனிதன் சிந்திக்கும் பொழுது இருவருக்குமிடையே உள்ள ஆகாசத்தில் (ஈதரிதல்) அதிர்வுகள் ஏற்பட்டு ஒரு காந்தத் தொடர்பு ஏற்படுகின்றது. அச்சிந்தனை தொடர்ச்சியாக இருக்குமாயின் அது இறுக்கமடைந்து அந்தக் காந்தப் பாறையினால் ஒருவருடைய சிந்தனையானகது மற்றவரால் ஈர்க்கப்படுகிறது.

இதே அடிப்படையில் தான் இறந்தவருடன் நமக்கு சிந்தனைத் தொடர்பு ஏற்படுகிறது. உணவு, பானம் படைப்பதுபோன்ற காரியங்கள் அன்பையும் பாசத்தையும் தூண்டுகின்ற சம்பிரதாயங்கள்.

உயிர்களின் பிறப்புக்களுக்கெல்லாம் காரணமாயிருப்பது அன்பு. உலகமக்கள் ஒருவரோடு ஒருவர் இணங்கி வாழ்வதற்கு அடிப்படையாயிருப்பது அன்பு. மக்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளுக்கெல்லாம் கத்தியின்றி இரத்தமின்றி தீர்வு காணப்படவேண்டுமாயின் அதற்கு ஏதுவாயிருப்பது அன்பு. இறைவனிடம் நாம் செலுத்துவது அன்பு. இறைவன் எவ்வித பாகுபாடுமின்றி எம்மீது அன்பு செலுத்துவதால்தான் நாம் அவன் திட்டப்படி பல்வேறு பிறப்புகள் பிறந்து படிப்படியாக ஆன்மீக வளர்ச்சி பெற்று ஈற்றில் அவனுடன் கலந்து விடுகிறோம்.

இறைவன் மீது நாம் அன்பு செலுத்தவதால் எவ்வாறு மேலும் மேலும் அவனிடமே ஈர்க்கப்படுகிறோமோ அதேபோன்று நாம் எவர் மீதாவது தூய அன்பு செலுத்தினால் மறுபிறப்பில் அவருடன் இணைந்து கொள்ளும் சந்தர்ப்பம் நமக்குத் தரப்படுகிறது. இப்பிறப்பில் இணைபிரியாத கணவன் மனைவியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கடந்து போன ஏதோவொரு பிறப்பில் அன்புப் பிணைப்பில் திகழ்ந்தவர்கள். பின்னால் வரும் பிறப்புகளிலும் ஏதோவொரு வகையில் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பை அவர்களுக்கு இயற்கை வழங்கிவிடுகிறது. குழந்தையை இழந்த தாய், அக்குழந்தையின் மீது செலுத்திய அபரிமிதமான அன்பு காரணமாக, மறுதடவை கர்ப்பந்தரிக்கும்பொழுது, அக்குழந்தையே வந்து பிறந்துவிடுவதை உணர்கிறாள்.




Leave a Reply