Search

அப்பா காண்டம் – குழப்பத்திலிருந்து தெளிவு

Appaa kaandam

யூட்யூப் திரைவிமர்சகர் ஜாக்கிசேகர் நடிப்பில் ஆர்வா இயக்கத்தில் சமீபத்தில் யூட்யூபில் வலையேற்றப்பட்ட அப்பா காண்டம் திரைப்படம் ஐந்து நாட்களில் 5 இலட்சம் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. இயக்குநர் ஆர்வா-விற்கு இந்தக் குறும்படம் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்ஸ்டுடியோ தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆர்வா, இதற்கு முன் நிறைய தொலைகாட்சி தொடர்களில் பணிபுரிந்த அனுபவத்தின் வாயிலாக இந்தத் திரைப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கின்றார். இந்தத் திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரத்தில் பிரபல திரைப்பட விமர்சகர் ஜாக்கிசேகரும் ஹரிஷ் ரவிச்சந்திரனும் நடித்துள்ளனர்.

இதில் மகனாக நடித்த ஹரிஷ் ரவிச்சந்திரன் சில குறும்படங்களில் நடித்தவர். அப்பாவாக நடித்த திரைவிமர்சகர் ஜாக்கிசேகர், ‘சிகரம் தொடு’ திரைப்படத்தில் சின்ன வேடத்தில் நடித்து இருந்தாலும் முழு நீள குறும்படத்தில் பக்கம் பக்கமாக வசனம் பேசி நடித்தது இதுவே முதல் முறை.

இந்தத் திரைப்படம் பொறுப்புள்ள நவீன கால அப்பா, பாதை மாறும் பையனுக்கு எவ்விதமாக ஆலோசனைகள் வழங்குகின்றார் என்பதே இந்தத் திரைப்படத்தின் மையக்கரு

இந்தத் திரைப்படம் யூட்யூபில் கடந்த சனிக்கிழமை காலை பத்து மணிக்கு 70 வது குடியரசு தினத்தன்று வெளியானது. 26 நிமிஷம் ஓடும் இந்த குறும்படமானது வலையேற்றிய ஐந்து நாட்களில் 5 இலட்சம் பார்வையாளர்களைப் பெற்றதோடு, மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பாஸிட்டிவ் கமெண்டுகளைப் பெற்றுள்ளது. எதிர்கருத்துக்கள் குறைவாகவே காணப்படுகின்றன.

இதுபற்றி இயக்குனர் ஆர்வாவிடம் கேட்டபோது, “எனது முதல்படம் 5 அயிரம் பேர் பார்த்தால் பெரிய விஷயம் என்று நினைத்தேன். ஆனால் 5 லட்சம்+பார்வையாளார்கள் எனும் போது நான் சரியாகப் பயணித்திருப்பதாகவே எண்ணுகிறேன். பாஸிட்டிவ் கமெண்டுகளை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் நெகட்டிவ் கமெண்டுகளையும் ஏற்றுக்கொள்கிறோம்” என்றார்.

காண்டம் என்றால் நிறைய பேர் கருத்தடை சாதனம் என்று நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால் இது தமிழ் காண்டம் என்பதை குறிக்கும். உதாரணத்திற்கு சுந்தர காண்டம், ஆரண்ய காண்டம் போல இது அப்பா காண்டம். பொதுவாக காண்டம் என்றால் ஒரு குழப்பமான சூழ்நிலையில் இருந்து தெளிவான ஒரு மனநிலைக்கு வரும் படலத்தைத்தான் காண்டம் என்று கூறுவார்கள். இதில் அப்பாவிற்கும் அப்படி ஒரு மனக்குழப்பம்தான் ஏற்படுகிறது. அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதுதான் மையக்கதை என்று இயக்குனர் ஆர்வா, காண்டத்திற்கான விளக்கத்தை தெரிவிக்கிறார்.

சாம் இமயவனின் ஒளிப்பதிவு இந்தத் திரைப்படத்திற்கு கூடுதல் பலத்தைச் சேர்த்த அதே வேளையில் ஏ.ஆர்.ரனோஜின் இசையும் பின்னனி இசையும் இந்தக் குறும்படத்துக்கு மெருகூட்டின என்றால் மிகையாகாது. படத்தொகுப்பாளர் பிரதிப் காட்சிகளை கோர்வையாக்கி இந்தத் திரைப்படத்தை ரசிக்க வைத்து இருக்கின்றார். மக்கள் தொடர்பு பணிகளை பி.ஆர்.ஓ. தியாகராஜன் கவனித்துக் கொள்ள, ‘ரெட் ஸ்டுடியோ’ தயாரிப்பு மேற்பார்வை பணிகளை நெல்சன் பாபு மற்றும் பாபு மாதேவ் செய்து முடித்துள்ளனர். விஷ்ணுகுமார் மற்றும் பிரதாப் இணைந்து அப்பா காண்டம் குறும்படத்தைத் தயாரித்து வழங்கியுள்ளார்கள்.

இந்தத் திரைப்படத்துக்கு தயாரிப்பு செலவாக சுமார் இரண்டரை லட்சம் செலவு செய்து இந்தக் குறும்படத்தை வெளியிட்டு இருக்கின்றார்கள். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மூன்று நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது மேலும் ரெட் ஸ்டுடியோ சார்பில் நிறைய குறும்படங்களைத் தயாரிக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.