
சிம்புதேவன் இயக்கம் என்ற எதிர்பார்ப்புடன் செல்பவர்களை ஏமாற்றாமல், தனது நேர்த்தியான திரைக்கதையால் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்துள்ளார் இயக்குநர்.
நேரத்துக்கும் விதிக்கும் தொடர்புள்ளதா என நாரதருக்கு ஒரு சின்ன சந்தேகம். உலகின் மக்கள் தொகைப் பெருக்கத்தால் பிஸியாகிட்டேன் எனச் சொல்லும் பிரம்மா, தன் வேலையெல்லாம் விட்டுவிட்டு சிவபெருமானிடம் அந்தக் கேள்வியைக் கொண்டு செல்கிறார். நேரத்துக்கும் விதிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என நாரதருக்கு சிவபெருமான் ‘லைவ் ஷோ’ காட்டி விளக்குவதுதான் படத்தின் கதை.
இசபெல்லாவை, அவளது திருமணத்தன்று கடத்த திட்டமிடுகிறான் தமிழ். அவன் வீட்டை விட்டு காலை 08:59க்குக் கிளம்பினால் என்னாகும், பின் ஒரு நிமிடம் கழித்து 09:00க்கும், இரண்டு நிமிடம் கழித்து 09:01க்கும் கிளம்பினால் என்னாகும் என்பதுதான் சிவன் நாரதருக்கு காட்டும் டெமோ!
மூன்று களவாணிகளாக அருள்நிதி, பிந்து மாதவி, பகவதிபெருமாள் ஆகியோர் நடித்துள்ளனர். கன்னி இசபெல்லாவாக அர்ஷிதா ஷெட்டி. தமிழாக அருள்நிதி கச்சிதமாகப் பொருந்தியுள்ளார். பிந்து மாதவிதான் படத்தின் நாயகி. தமிழின் தோழியாக படம் முழுவதும் வலம் வருகிறார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் கலக்கிய பக்ஸ் (எ) பகவதிபெருமாள், இப்படத்திலும் அசத்துகிறார். முக்கியமாக ஷேரில் வேறெவரும் வந்துவிடக் கூடாதென அவர் பரிதவிப்பதைச் சொல்லலாம்.
கதைக்குள் காமெடி ட்ராக்காக ஓர் உபக்கதை வருகிறது. வடபழனி கோயிலில் இரண்டு மாநிலத்தவர்களுக்கு ஓர் அயர்ன்காரர் கல்யாணம் பண்ணி வைக்கிறார். அவரது தங்கையோ, தனக்கான மணமகனைத் தானாகத் தேடிக் கொண்டு சென்று விடுகிறார். இந்தக் கதையை வம்பு பேசும் பாண்டு மூலமாகவும், பாதிக்கப்பட்டு விட்டதாக நினைத்துக் கொள்ளும் அயர்ன்காரர் மூலமாகவும், மகிழ்ச்சியாக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் மூலமாகவும் பகுதி பகுதியாகக் கதையைச் சொல்லி ரசிக்க வைக்கிறார் இயக்குநர் சிம்புதேவன். ஆட்கள் மாறினாலும், அவ்விடத்தில் 200 ரூபாயை நாயகன் பறிக் கொடுப்பது மட்டும் மாறாது என்பதுதான் இயக்குநர் சொல்லும் விதி போலும்.
படத்தில் எண்ணற்ற சுவாரசியங்கள் வந்துவந்து போகின்றன. முக்கியமாக டீக்கடை காட்சிகளைச் சொல்ல வேண்டும். சிறுவர்மலர் கேட்கும் காவல்துறை அதிகாரி ‘ஆடுகளம்’ நரேன், வஞ்சனையின்றி வளர்ந்திருக்கும் பெரிய வில்லன், மனோபாலா என மூவரும் அந்தக் காட்சிகளை ரசிக்க வைக்கின்றனர். படத்தின் மொத்த கலகலப்புமே டீக்கடை காட்சிகளில்தான் அடங்கியுள்ளது. இதன் தாக்கம்தான் படம் முழுவதும் பிரதிபலிக்கிறது.
ட்ராஃபிக் போலீசாக வரும் அருள்தாஸ், முதல்முறை, பக்ஸிடம் இரைந்து விட்டு நாயகனிடம் குழையும் பொழுது மட்டும் ரசிக்க வைக்கிறார். துப்பாக்கி வாங்க உதவும் கார்த்திக் சபேஷ் கொஞ்ச நேரம்தான் வந்தாலும் நிறைவாக திரையில் தோன்றுகிறார். வெள்ளை வெளேரென ‘ஹிப்பி லஹரி’யாக வரும் நாசரும், கொஞ்ச நேரம் வந்தாலும் வழக்கம்போல் ஈர்க்கிறார்.
வி.எஸ்.ராகவன் இல்லாமல் சிம்புதேவன் படமா? சிவன் காட்டும் டெமோவை, இவர் வசனம் பேசித்தான் நிற்க வைக்கிறார். சர்ச்க்குள் இருக்கும் பொழுது வாக்கிங் ஸ்டிக் இல்லாமலும், வெளியில் வாக்கிங் ஸ்டிக்குடடும் உள்ளார். சீரியல் நாரதர் கூட, மூச்சுக்கு முப்பது முறை ‘நாராயண.. நாராயண’ எனச் சொல்வார்கள். ஆனால் இந்தப் படத்திலோ மருந்துக்குக்கூட ஒருமுறை ‘நாராயண’ எனச் சொல்ல மாட்டேங்கிறார் நாரதர். அது சரி, விதி வந்தால் நாரதரும் நாராயணனை மறந்து விடுவாராட்டிருக்கு. பிரம்மன் தாமரை பூவில் அழகாக வீற்றிருக்கிறார். ஆனால், சிவபெருமானுக்கே விதி சதி செய்து, கைலாயத்தை விட்டுத் துரத்தி செம்பருத்தி மேல் அமர வைத்துவிட்டதுதான் கொடுமை. விதிக்கு கடவுளும் தப்ப மாட்டார்கள் எனச் சொல்லாமல் சொல்கிறார் போல சிம்புதேவன். ஆனால் எறும்புக்கும் படியளிப்பவரான ஈசன், ஐந்து உயிர்களின் இறப்பை ட்விஸ்ட்டாக தனது ‘டெமோ’வில் வைப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.