
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பெரிய திரைக்கு வரும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடனம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பெரும் பெயர் பெற்ற ஜாக்குலின் பிரகாஷ் தான் இப்போதைய புதிய வரவு.
இணையதளங்களில் டீஸர் மூலம் பெரும் வரவேற்புப் பெற்றுள்ள ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் ஜாக்குலின். ”இந்தப் படத்தின் கதாநாயகி தேர்வு சற்றுக் கடினமாக தான் இருந்தது. வெவ்வேறு பருவங்களில் மூன்று வித்தியாசமான பரிமாணங்களில் தோன்றும் பெண்தான் என் கதையின் நாயகி. எதைப் பற்றியும் கவலைபடாத ஒரு இளம் பெண், பிரசவ வேதனை இடையே சமுதாயத்துக்கும், பொருளாதாரத்துக்கும் இடையே சிக்கித் தவிக்கும் இளம் மனைவி, உயிரோடு இருக்கும் நோயுற்ற மகன் மற்றும் ஆவியாய் பழி வாங்க சுற்றும் மகள் ஆகியோர் இடையே பரிதவிக்கும் இளம் தாய் என்ற ஒரு தேர்ந்த நடிகைக்கே சவால் விடும் பாத்திரப் படைப்பு இது. இதைச் சிறப்பாக செய்த ஜாக்குலினுக்கு நிச்சயம் நல்ல நடிகை எனப் பெயர் கிட்டும்’ என கூறினார் இயக்குநர் ஸ்ரீநாத் ராமிலிங்கம்.
கதாநாயகி ஜாக்குலின் கூறும்போது, “இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் கூட இரவில் எனக்கு எங்கோ தொலை தூரத்தில் குழந்தை ஒன்று அழுவதைப் போல் காதில் கேட்கும். யாரிடமும் பகிர்ந்து கொள்ளவும் எனக்கு அச்சம். பத்திரிகைகளில் மற்ற நடிகைகள் பேய்ப் படங்களில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது, அதைக் கிண்டலடித்தவள் நான். இப்போது எனக்கே இந்த அனுபவமா என்று சிந்திக்க தொடங்கிய போது எனக்குத் தோன்றியது என்னெவென்றால், முதல் படம் என்பதால் இரவும் பகலும் முழுக்க முழுக்க இந்தப் படத்தைப் பற்றிய சிந்தனையில் இருப்பதால்தான் இப்படி நடக்கிறது என்று.
இந்த படத்தில் நடித்ததற்கு பிறகு எனக்கு குழந்தைகளின் மீது அலாதி பிரியம் வர ஆரம்பித்தது. தாய்மை உணர்வும் மேலோங்கத் துவங்கியது. என் சகோதரியின் குழந்தையை இப்போது முன்பை விட கண்ணும் கருத்துமாக கவனிக்க ஆரம்பித்தேன். படத்தில் இரண்டு வெவ்வேறு காலகட்டத்தில் தாயாக நடித்த அந்த உணர்வு என்னுள் மிஞ்சிக் கிடப்பதை நான் உணர ஆரம்பித்தேன்.
நடன கலைகளில் ஆர்வம் கொண்டுள்ள எனக்கு நடிக்கும்போது அந்த உணர்வை புரிந்து கொள்ளவும், நடிக்கவும் பெரிதும் உதவியது. சவாலான பாத்திரங்களில் சோபிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது அதற்கு ஏற்றாற்போலவே சமீபத்திய வரவுகளான புதிய இயக்குநர்கள் கதாநாயகியை வெறும் காட்சிப் பொருளாக பயன்படுத்துவது இல்லை. இது என்னைப் போன்ற நடிகைகளுக்கு பெரும் ஆசிர்வாதமாகும். ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படத்தின் டீசர் வெளிவந்த நாளிலிருந்து எனக்கும், என் சக நடிக நடிகையருக்கும், எங்கள் இயக்குநர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் கிடைத்து வரும் வரவேற்ப்பு பிரமாதம். படம் வெளிவந்த பின்னர், இது கூடும் என்பதில் எனக்கு நிச்சயம் நம்பிக்கை இருக்கு. எனது நடிகை ஆக வேண்டும் என்ற கனவை, மிகப் பிரமாதமான படத்தின் மூலம் நிறைவேற்றிய இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் அவர்களுக்கும் தயாரிப்பாளர் ஷானுக்கும் மனமார்ந்த நன்றி’ என்ற தெள்ளத் தெளிவான தமிழில் பேசினார் ஜாக்குலின்.