
பாரதிதாசன் 1891 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பிறந்தார். பாரதிதாசன் என்பது இவரது இயற்பெயர் அல்ல. பெற்றோர்கள் வைத்த பெயர் சுப்புரத்தினம்.
இளம் வயதிலேயே தமிழார்வம் கொண்டிருந்தார். தனது பதினேழாவது வயதில் புலவர் தேர்வில் வெற்றியடைந்தார்.
பாரதிதாசன் புதுமைச் சிந்தனாவாதி, இவரது சிந்தனைகளுக்கு ஊக்கு சக்தியாக விளங்கியவர் மகாகவி பாரதியார்.
இவர் சிறிது காலம் மாடர்ன் தியேட்டர்சின் கதை இலாகாவில் பணியாற்றினார். பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தமிழைத் தன் உயிரினும் மேலாக நேசித்தவர். இவரது ‘தமிழுக்கு அமுதென்று பேர்’ என்கிற கவிதை மிகவும் பிரபலமானது.
1937இல் முதன் முதலாக ‘பாலாமணி’ என்கிற படத்திற்குப் பாடல்கள் இயற்றினார். பிறகு 1940இல் ‘காளமேகம்’ என்கிற படத்தின் வசனம் – பாடல்கள் இவரால் எழுதப்பட்டது. எல்லிஸ்.ஆர்.டங்கன் இயக்கிய இப்படத்தில் நாதஸ்வர சக்ரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் காளமேகமாக நடித்திருந்தார். எல்லிஸ்.ஆர்.டங்கன் ஒரு அமெரிக்கர்.
இதற்கிடையில் 1938இல் ஸ்ரீராமானுஜர் என்கிற ஒரு திரைப்படம் வெளிவந்தது. இலக்கியவாதி வ.ரா. என்று அழைக்கப்பட்ட வ.ராமசாமி ஐயங்கார் திரைக்கதை வசனம் எழுதிய இந்தப்படத்தில் சங்கு சுப்பிரமணியம், ந.ராமரத்தினம் ந.பிச்சமூர்த்தி போன்ற இலக்கிய வாதிகள் நடித்திருந்தனர். இதில் பாடல்கள் எழுதியிருந்தார் பாவேந்தர். தீண்டாமைக்கு எதிராக பல கருத்துக்களை அப்போதே முன் வைத்த அப்படத்தில் கவிஞரின் ஒருபாடல் அக்காலத்தில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது.
ராமானுஜர் வைணவைத்தை உபதேசித்தபடி நாடு முழுவதும் யாத்திரை மேற்கொள்கிறார். அப்போது திருவாலி க்ஷேத்திரத்தில், திருவாலி மங்கை எனும் தீண்டத்தகாத ஒரு பெண்ணை எதிர் கொள்ளும் ராமானுஜர், அப்பெண்ணை விலகி நிற்கச் சொல்கிறார். அதற்கு அப்பெண் பாடுவதாக அமைந்த காட்சி.
‘எப்பக்கம் சாமி
விலகச் சொன்னீங்க?
இத்தே கேளுங்கோ,
கோவிச்சுக்காதீங்க – இப்பக்கம்
கண்ணபுரமிருக்குங்க! எதிர்ப்
பக்கத்திலோ திருமணக்கொல்லை!
ஒங்கோ பக்கம் வந்தா
ஒத்திக்கோன்னுவீங்கோ!
ஒதுங்கிப் போயிட்டாலும்
திருமங்கை மன்னன் – அய்யங்
கோவிந்தன் ஆகாசத்தே!
அடிமை கேட்ட கேள்வி –
ஏது பதிலுங்கோ?’
ராமானுஜருக்கு என்ன சொல்ல இயலும்? திருவாலி மங்கையின் வாதத்தின் உண்மையை ஒப்புக்கொள்வதைத்தவிர!
1946இல் மாடர்ன் தியேட்டர்சாரின் ‘சுபத்திரை’ என்கிற படத்திற்கு வசனம் எழுதினார் பாரதிதாசன்.
புரட்சிக்கவிஞர், பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை நூல் ‘எதிர்பாராத முத்தம்’, இந்நூலைத் தழுவி 1950இல் ‘பொன்முடி’ என்கிற ஒரு திரைப்படம் வெளிவந்தது. நரசிம்மபாரதி, மாதுரிதேவி நடித்த படம். அப்படத்தில் காதல்காட்சிகளில் இருந்த நெருக்கம் அந்தக்காலத்தில் திரையுலகில் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
பாவேந்தர் ஒரு புரட்சிகரமான கவிஞர். எனவேதான் அறியாமையில் உழன்று கொண்டிருந்த அக்கால சமுதாயத்தை தனது வீரிய கவிதைகள் மூலம் எழச் செய்து, தமிழர்களிடையே ஒரு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தினார். பாவேந்திரைப் பின்பற்றி அவரை குருவாக மதித்து ஏராளமான கவிஞர்கள் புதிதாகத் தோன்றினார்கள். கவிஞர் சுரதா, வாணிதாசன், சாலை இளந்திரையன், குருவிக்கரம்பை சண்முகம், பொன்னடியான் போன்ற மிகச்சிறந்த மரபுக்கவிஞர்கள், பாரதி தாசனின் சிஷ்யர்கள் என்ற பெருமையை அடைந்தார்கள்.
தமிழை – கவிதையை, பெண்விடுதலை, சமூகநீதி போன்ற உத்தமமான காரியங்களுக்கு ஒரு ஆயுதமாகப் பயன்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.
பாவேந்தரை தமிழ்க்கவிதை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை பாரதியாரைச் சாரும். பாரதியாரையே தனது குருவாகப் பாவித்துக் கொண்டார் பாரதிதாசன். எனவேதான் சுப்புரத்தினம் என்கிற தன் பெயரை பாரதிதாசன் என மாற்றிவைத்துக் கொண்டார்.
‘குயில்’ என்கிற பத்திரிகை ஒன்றை சில காலம் நடத்தியிருக்கிறார். உதிரி, உதிரியாக இவர் எழுதிய பாடல்கள் தொகுக்கப்பட்டு 1938ல் வெளிவந்திருக்கிறது.
நாடகங்களும் எழுதியுள்ளார். குறிப்பாக, ‘பாண்டியன் பரிசு’ கதை நாடகமாக எழுதப்பட்டு பெரும் வெற்றியை ஈட்டியது. இவை தவிர ஏராளமான கவிதைகள் எழுதி, ’பாரதிக்குப்பின், பாரதிதாசன்’ என்கிற பெயரை நிலை நிறுத்திக் கொண்டார்.
பாவேந்தரின் திரைப்படப்பணி 1956ல் வெளிவந்த ‘நானே ராஜா’ வரையிலும் நீடித்தது.
கடைசிக் காலங்களில் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆட்பட்டிருந்த பாவேந்தர், உடல் நலம் குன்றி 1964ல் ஏப்ரல் மாதம் சென்னையில் காலமானார்.
வாழ்க வாழ்கவே – வாழ்கவே
வளமார் எமது திராவிட நாடு
வாழ்க, வாழ்கவே – வாழ்கவே
பாரதிதாசன் பங்கேற்ற திரைப்படங்கள்:
1937 – பாலாமணி வசனம்
1938 – ஸ்ரீராமானுஜர் பாடல்
1940 – காளமேகம் வசனம்
1950 – பொன்முடி கதை, வசனம்
1951 – ஓர் இரவு பாடல் (துன்பம் நேர்கையில்)
1951 – மணமகன் பாடல்
1952 – வளையாபதி பாடல்
1953 – திரும்பிப்பார் பாடல்
1954 – கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி பாடல் (வெண்ணிலாவும் வானும் போலே)
1956 – நானே ராஜா பாடல்
1965 – பஞ்சவர்ணக்கிளி பாடல் (தமிழுக்கு அமுதென்று பேர்)
– கிருஷ்ணன் வெங்கடாசலம்