
ஜனாதிபதி மாளிகையின் சரித்திர அழுத்தமும், என்னுடன் விருது பெற்றவர்களின் தனிப்பெரும் சாதனைகளும் எனக்கு மீண்டும் பணிவு கற்றுத் தந்தது. இத்தகைய விழாக்களை நடத்தவேண்டிய அவசியமென்ன என்ற கேள்விக்கான பதில் எனக்குக் கிடைத்தது.
எனக்கு வழங்கப்படும் விருது என்னை பெருமைப்படுத்த மட்டுமன்று. என் மண்ணையும் பெருமைப்படுத்தும் செயல். மீண்டுமொரு குடிமகனாக என் கடமைகளை நிறைவேற்ற உறுதிமொழி அளிக்கும் விழாவாகவும் நான் இதை உணர்ந்தேன்.
தேசிய கீதம் இசைத்த பொழுது மனது ஏனோ நெகிழ்ந்தது. நான் ஒரு பெரும் விருட்சத்தின் விழுது என்பதுனர்ந்து நெஞ்சம் விம்மியது. மனத்திரையில் தேசபக்தியுள்ள என் தாய் தந்தையாரின் முகம் தோன்றி மறைந்தது. கொஞ்சம் குழந்தைத்தனமான உணர்வு என்றாலும் பிடித்திருந்தது. ஒரு சிலர் இந்தியா கிரிக்கெட் விளையாடி வென்றால் புல்லரித்துப் போவார்கள். நான் இந்தியா எத்துறையில் வென்றாலும் பூரிப்படைவேன். இன்று பல்துறை வித்தகர்களுடன் தோளுரசி நின்றதில் பெருமை கொள்கிறேன். இன்னும் இப்பெருமைப் பெறப்போவர்களையும் பெறாவிட்டாலும் தன் கடமையைச் செய்யப்போகும் இந்தியர்களையும் என் மனம் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கியது.
அன்பன்,
கமல் ஹாசன்
(பத்மபூஷன் விருது பெற்றதும்..)