Shadow

வில்லா விமர்சனம்

villa

 

ஒரு விளம்பரத்திற்காக மட்டும் பீட்சா – 2 என உபயோகப்படுத்தியுள்ளனர். 

எதிர்மறை சக்திகள் (Negative energy) சூழ்ந்த ஒரு மாளிகையில் தங்குபவர்கள், அவர்களுக்கே தெரியாமல் எதிர்காலம் குறித்துக் கணிக்க வல்லவர்களாக மாறுகின்றனர்.   

எழுத்தாளர் ஜெபினாக அசோக் செல்வன். சூது கவ்வும் படத்தில், ஒரு பெண்ணால் வேலையிழக்கும் பாத்திரத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் தாடி வைத்த முகத்துடன், மருந்துக்குக் கூட சிரிக்காத விரக்தியில் உழல்பவராக வருகிறார். தனக்கு சொந்தமாக மாளிகை இருக்கு என்று அறியும் பொழுதும், நாவலுக்காக ஐந்து லட்சம் ரூபாய் முன் பணம் பெறும் பொழுதும் கூட முகமலர மாட்டேங்கிறார். அவனது தந்தை வரைந்த ஓவியங்களில் உள்ளவை அனைத்தும் ஏன் அப்படியே நிகழ்கின்றன என்ற குழப்பமும், அதற்கான தேடலும் தான் முழுப்படமுமே!

நாயகன் என்றால் உத்தமனாக இருக்க வேண்டுமென்ற திரை இலக்கணங்கள் எல்லாம் என்றோ மண்ணோடு மண்ணாகிவிட்டாலும், தமிழ்த்திரைப்படம் கதாநாயகிகளை சித்தரிப்பதில் பெரும் மாற்றம் கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். நாயகனுக்காக நேர்ந்து விடப்பட்டவர்களாகவும், ஆடவும் பாடவும் மட்டுமே இருந்து வருகின்றனர். அவ்வகையிலும் இப்படம் ஒரு முன் மாதிரி. வில்லா எரிந்து கொண்டிருக்கும் பொழுது, உதவிக் கேட்பவரிடம் நாயகி நடந்து கொள்ளும் விதம் குறிப்பிடத்தக்கது.

எதிர்மறை எண்ணங்களை கருவாக எடுத்துள்ள இயக்குநர் தீபனைப் பாராட்டியே ஆக வேண்டும். அதுவும் இது அவரது முதற்படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலை இயக்குநர் மாயனின் உழைப்பு படம் முழுவதும் விரவியுள்ளது. அவரது உழைப்புடன் படத்தின் ஒளியமைப்புச் சேர்ந்து, வில்லாவிற்கு ஓர் அமானுஷ்யத்தன்மையை ஏற்படுத்துகிறது. ஆனால் படத்தில் எந்த அமானுஷ்யமும் இல்லை என்பது தான் அதன் சிறப்பம்சமே! எல்லாவற்றிற்கும் காரண காரியங்களை ஏற்றுக் கொள்ளும்படி அமைப்பதில் இயக்குநர் தீவிரமாக முயன்றுள்ளார். 

எதையும் வலிந்து திணிக்காமல் ரசிகர்களைப் பெருமைப்படுத்தியுள்ளார் தீபன். எடுத்துக்காட்டிற்கு படத்தின் முடிவு. நாயகன் தனக்கே தெரியாமல் தன் கலை வடிவத்தில் நாயகயின் மரணத்தை எவ்வாறு பதிந்துள்ளார் என்பதை மிக நுட்பமாக சித்தரித்துள்ளார். ப்ளாஷ்-பேக் என்று தனியாக எதுவுமில்லாமல், எண்ண அலைகளை உருவமாகக் காட்டிக் கதையைப் புரிய வைக்கின்றனர். அடுத்தென்ன என்ற சுவாரசியமோ, திடுக்கிடும் திருப்பமோ படத்தில் இல்லை. ஆனால் இயக்குநர் ஒரு சிறந்த கதைசொல்லியாகக் கலக்கியுள்ளார்.

Leave a Reply