இது தமிழ் ⚡ AMP

பயங்கரமான ஆளு விமர்சனம்

By Dinesh R | Dec 16, 2018

கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இரட்டை வேடங்களில் நடித்துப் படத்தையும் இயக்கியுள்ளார் அரசர் ராஜா.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சிவா ஒரு பத்திரிகையாளன், எசக்கி ஒரு குடிகாரன். பார்ப்பதற்கு இருவரும் ஒன்று போல் இருப்பார்கள். திடீரென சிவா காணாமல் போகிறான்; எசக்கியோ இறந்துவிடுகிறான். காணாமல் போன சிவா வேறொரு ஆளாக மீண்டு வருகிறான். சிவா எப்படி ஏன் பயங்கரமான ஆளாக மாறுகிறான் என்பதும், அவனை எப்படிக் கட்டுக்குள் கொண்டு வருகின்றனர் என்பதும்தான் படத்தின் கதை.

படத்தின் படத்தொகுப்பை, சஸ்பென்ஸ் த்ரில்லருக்கு ஏற்ற வகையில் இன்னும் க்ரிஸ்ப்பாகக் கொடுத்திருக்கலாம். இப்பொழுது தொலைக்காட்சித் தொடர்களிலேயே போட்டி போட்டுக் கொண்டு மொத்த வித்தையையும் இறக்கும் காலமிது. நாயகனின் முக பாவனைகளில் ஏனோ தானோ எனக் கடமைக்கு உள்ளது. உளமொன்றி அவர் இன்னும் திறம்பட நடித்திருக்கலாம்.

நகைச்சுவைக்காக கஞ்சா கருப்புவும், போண்டா மணியும் திணிக்கப்பட்டுள்ளதால் கதையோடு ஒட்டாமல் தனித்துத் தெரிகின்றனர். எனினும், க்ளைமேக்ஸ்க்கு முன் அவர்களைக் கதைக்கு உதவுபவர்களாக இயக்குநர் அரசர் ராஜா திரைக்கதை அமைத்திருப்பது ரசிக்க வைக்கிறது.

படத்தில் ரிஷா, சாரா என இரண்டு கதாநாயகிகள். காதல் காட்சிகளுக்கும், நாயகனுக்கும் அதிக தொலைவு எனினும், அது குறையாகத் தனித்துத் தெரியாத அளவு முழுப்படமும் உள்ளது. கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையை, நாயகனுக்கு ஒரு யோகி சொல்லிக் கொடுக்கிறார். தவம் போல் பலநாள் முயற்சியில் அடைய வேண்டிய ஒரு கலையை, ஜஸ்ட் லைக் தட் நாயகன் கற்றுக் கொள்வதை ஏற்க இயலவில்லை. அந்தக் கலையை உபயோகித்து, அவர் தன் உடலில் இருந்து ஆத்மாவைப் பிரித்து, நாயகி குளிப்பதைப் பார்ப்பது அதை விடக் கொடுமை. காட்சிகளில் இப்படிச் சீரியஸ்னஸ் இல்லாததால் படம் கொஞ்சம் தொய்வாகப் பயணிக்கிறது.