இது தமிழ் ⚡ AMP

கோப்ரா | கொச்சியில் கொண்டாட்டம்

By Dinesh R | Aug 28, 2022

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி, ஆகஸ்ட் 31ஆம் தேதியன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. இப்படத்தினை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திப் பிரபலப்படுத்துவதற்காக சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினர் பயணம் மேற்கொண்டிருக்கிறார்கள். இதன் ஒரு பகுதியாக மலையாளத் தேசத்தின் மாநகரமான கொச்சிக்குச் சென்றனர். அங்கு அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமாரின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்து வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘கோப்ரா’. ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தைத் தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கணித புதிர்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் ‘கோப்ரா’ திரைப்படத்தைப் பற்றி ரசிகர்களிடத்தில் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அப்பட நாயகன் சீயான் விக்ரம் தலைமையில் படக் குழுவினர் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள்.

திருச்சி, மதுரை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் ரசிகர்களை சந்தித்த கோப்ரா படக்குழுவினர், கேரள தேசத்து ரசிகர்களைச் சந்திக்கும் வகையில் கொச்சிக்குப் பயணம் செய்தனர். கொச்சி விமான நிலையத்தில் படக்குழுவினருக்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு உற்சாகமான வரவேற்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து கேரள பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். இந்த சந்திப்பில் சீயான் விக்ரம், நடிகர் ரோஷன் மேத்யூ, நடிகைகள் மியா ஜார்ஜ், மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கொச்சியில் உள்ள பிரபலமான ஜெயின் கல்லூரி வளாகத்தில் ‘கோப்ரா’ படக்குழுவினர், மாணவ மாணவிகளைச் சந்தித்தனர். அவர்களின் கேள்விகளுக்குப் படக்குழுவினர் பதிலளித்து உற்சாகப்படுத்தினர்.

சீயான் விக்ரம் தலைமையிலான படக்குழுவினரின் தமிழகப் பயணத்தைப் போல், கேரள பயணமும் எதிர்பார்த்ததை விடக் கூடுதலான வெற்றி பெற்றதால் ‘கோப்ரா’ படக்குழு உற்சாகமடைந்திருக்கிறது.