இது தமிழ் ⚡ AMP

My Lord – மனிதநேயத்தோடு படம் எடுப்பவர் ராஜுமுருகன்

By Dinesh R | Feb 09, 2026

ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிப்பில், ராஜுமுருகன் இயக்கத்தில், நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ மை லார்ட் (My Lord)’ எனும் திரைப்படம், பிப்ரவரி மாதம் 13 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் த.செ.ஞானவேல், “எந்த நெருக்கடியிலும், யாருடைய மனசையும் காயப்படுத்தாமல், ஒரு பொறுப்புணர்வோடு பேசுவதும் எழுதுவதும் ரொம்ப முக்கியம். அந்த வகையில் நான் மனசார பாராட்ட விரும்புவது ராஜுமுருகன். ஒவ்வொரு எழுத்தையும் ஒரு பொறுப்பாக நினைத்து, கருத்தோடு, மனிதநேயத்தோடு படம் எடுக்கிறவர். அவருடைய சிந்தனைக்குத் துணை நின்றதே தான் இந்தப் படம் இவ்வளவு அழகாக உருவாகக் காரணம்.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் சசிகுமார் சாரிடம் நான் சொன்ன முதல் வார்த்தை ‘நன்றி சார்’ தான். இன்றைய காலத்தில், வர்த்தகத்தையும் மனிதநேயத்தையும் சேர்த்து படம் எடுப்பது ரொம்பப் பெரிய சவால். அந்தச் சவாலைத் தொடர்ந்து ஏற்று, வெற்றி பெறுவது மிகவும் பாராட்டுக்குரியது. இந்தப் படத்தில் வரும் கதாபாத்திரங்களும், அதைக் கையாண்ட நடிகர்களும் யாருமே நடிப்பதாகத் தெரியவில்லை. அந்த ஊரில் வாழ்கிற மனிதர்களாகவே இருந்தார்கள். குறிப்பாக சைத்ரா தமிழ் சினிமா தவற விடக்கூடாத ஒரு நடிகை.

இந்த மாதிரி படங்கள் நம்ம மனசை ‘டீடாக்ஸ் (Detox)’ பண்ணும். நம்மைச் சுற்றி நடக்கிற விஷயங்களைp புதுசா சிந்திக்க வைக்கும். இப்படிப்பட்ட படைப்புகளுக்கு நம்ம எல்லாரும் கை கொடுத்தால், இந்தப் பயணம் இன்னும் வலிமையாகும்” என்றார்.

பாடலாசிரியர் யுகபாரதி, “நான் ராஜுமுருகன் பற்றிப் பேச ஆரம்பித்தால் அது பெருசா காமெடியாக முடிஞ்சிடும். அதனால இன்று இந்த விழாவுக்கு வந்து அவரை மனசார வாழ்த்திய, அனைவருக்கும் நன்றி சொல்ல வந்திருக்கேன். ஒரே ஊர்ல வளர்ந்தோம், ஒண்ணா ஊர் முழுக்க சுத்தின பசங்க நாங்க. அந்த ராஜுமுருகன், இன்னைக்கு இப்படியொரு படத்தை இயக்குநராகக் கொடுத்திருக்கார்னு நினைக்கும்போது எனக்குப் பெருமையா இருக்கிறது.

இந்தப் படம் எல்லா வகையிலும் ராஜுமுருகனுக்கு ஒரு பெரிய வெற்றியைத் தரும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாகத் தயாரிப்பாளர் அம்பேத்குமார் அவர்களுக்கு நன்றி. சுப்ரமணியபுரம் முதல் இன்று வரை எவ்வளவு உயரம் போனாலும் அதே பண்போட இருக்கிற சசிகுமார் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். இந்தப் படத்தின் இசை பற்றிச் சொல்லவே வேண்டாம். ஷான் இசையில் இந்தப் படம் ரொம்பவே தனிச்சிறப்பாக இருக்கும்.

நான் இந்தப்படம் இன்னும் பார்க்கவில்லை. ஆனா கதையைத் தெரிஞ்சவன் என்ற வகையில் இதுவொரு மிகச் சிறந்த, நிச்சயமான வெற்றிப் படம் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. உங்களுக்கும் அது வரும் நாட்களில் உறுதியா தெரியும்” என்றார்.

இயக்குநர் ச.பிரேம்குமார், “ராஜுமுருகனை நான் இன்று தான் நேரில் பார்க்கிறேன். நேற்று தான் ஃபோன்ல பேசினேன். ஆனா அவரை எனக்கு நல்லா தெரியும். அவர் படங்கள் மட்டுமல்ல, அவர் வேலை செய்யும் விதமும், ஒரு ஊர் அவரை எப்படிக் கொண்டாடுகிறது என்பதுமே அவருடைய சினிமாவைச் சொல்லிடும். நான் என் படத்தை அவர் ஊரில் எடுக்கும் போது அங்கு அவருக்கு பேனர் வைத்திருந்தார்கள். ஒரு ஊரில் ஒரு இயக்குநரை இவ்வளவு மக்கள் கொண்டாடுறாங்கன்னா, அது கண்டிப்பா அவர் சொல்ற கருத்துக்காகத்தான்.

சசிகுமார் சார் உடன் ராஜுமுருகன் படம் பண்ணுறாங்கன்னு கேட்டாலே, கதை என்ன, ஜானர் என்ன, பட்ஜெட் என்ன இதெல்லாம் தெரியாமலேயே, ‘இந்தப் படம் நல்லா இருக்கும்’ன்னு நம்ம மனசு நம்ப ஆரம்பிச்சிடும். அந்த நம்பிக்கையே பெரிய விஷயம்.

நான் இந்தப் படத்தை இன்னும் பார்க்கல. ஆனா இந்தக் கூட்டணி இருக்கிறதாலேயே இந்தப் படம் கண்டிப்பாக நல்லா இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை” என்றார்.

ஏழை எளிய மக்கள் மீது நடைபெறும் அதிகார அத்துமீறல் தொடர்பான காட்சிகள் அரசியல் நையாண்டியுடன், அன்பான குடும்ப உறவுகள் குறித்த விசயங்களை, அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில் எழுதி இயக்கியுள்ளார் ராஜுமுருகன்.