இது தமிழ் ⚡ AMP

S.S.ராஜமெளலியின் மகன் S.S.கார்த்திகேயா தயாரிக்கும் ஃபஹத் ஃபாஸிலின் 2 படங்கள்

By Dinesh R | Mar 19, 2024

முன்னணி இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா, மலையாளப் படமான பிரேமலு படத்தினைத் தெலுங்கு ரசிகர்களுக்குத் தெலுங்கு மொழியில் வெளியிட்டதன் மூலம் திரைப்பட விநியோகத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். தெலுங்கில் ஷோயிங் பிசினஸ் (Showing Business) பேனரின் கீழ் இப்படத்தை விநியோகித்தார். எஸ்.எஸ்.கார்த்திகேயாவின் முதல் வெளியீடே தெலுங்குப் பதிப்பில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இப்படம் திரையரங்குகளில் மக்கள் பேராதாரவுடன் ஒவ்வொரு நாளும் பெரும் வசூலைக் குவித்து வருகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

பிரேமலுவின் பிளாக்பஸ்டர் வெற்றியால் பெற்ற நம்பிக்கையால் உற்சாகமடைந்துள்ள எஸ்.எஸ்.கார்த்திகேயா அடுத்ததாக படத் தயாரிப்பில் இறங்குகிறார். மேலும் இந்தியாவின் பெருமைமிக்க, புகழ்பெற்ற தயாரிப்பாளர்களான பாகுபலி பட நிறுவனமான ஆர்கா மீடியா வொர்க்ஸுடன் இணைந்து, தான் அடுத்ததாக தயாரிக்கவுள்ள அடுத்த இரண்டு திரைப்படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அற்புதமான திரைப்படங்களைத் தயாரிக்க, பிரமாதமான தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா எஸ்.எஸ்.கார்த்திகேயாவுடன் கைகோர்க்கிறார். உலகப்புகழ் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இந்தப் படங்களை வழங்குகிறார்.

பிரேமலுவின் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவரான பன்முக நடிகர் ஃபஹத் பாசில் இரண்டு படங்களிலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவற்றில் ஒன்றை, “ஆக்சிஜன்” என்ற தலைப்பில், ஓர் ஊக்கமளிக்கும் நட்பைப் பற்றிய கதையில், அறிமுக இயக்குநர் சித்தார்த் நாதெல்லா இயக்குகிறார். மற்றொன்று, “டோண்ட் டிரபிள் த டிரபிள்” என்ற தலைப்பில் ஒரு பரபரப்பான ஃபேண்டஸி கதையை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்குகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் தனித்துவமான மற்றும் உள்ளடக்கத்தில் சிறந்த படங்களாக இருக்கும்.

‘பாகுபலி’ உலக அரங்கில் புகழ் பெறுவதற்கு முன்னதாகவே, பேனரைப் பிரபலப்படுத்துவதற்கு முன்னதாகவே, ‘வேதம்’, ‘மர்யதா ரமணா’, ‘அனகனா ஒக தீருடு’ மற்றும் ‘பஞ்சா’ உள்ளிட்ட பல்வேறு ஜானர்களில் தனித்துவமான படங்களை ஆர்கா மீடியா நிறுவனம் வழங்கியுள்ளது.

பிரேமலுவை பிளாக்பஸ்டர் ஹிட் ஆக்கியதற்காகத் தெலுங்கு பார்வையாளர்களுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்த போது, எஸ்.எஸ்.கார்த்திகேயா தனது தயாரிப்பில் உருவாகவுள்ள படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். அவர், “பிரேமலு மூலம் என் முதல் அவதாரமான விநியோகஸ்தர் பயணத்திற்கு நீங்கள் அனைவரும் அளித்திருக்கும் அளவில்லாத அன்பிற்கு நன்றி!! இந்த வெற்றி நல்ல சினிமாவுக்கு, மொழித்தடைகள் எதுவும் இல்லை என்கிற எனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியது. இந்தப் படத்தை விநியோகிக்கும் போது அதன் ஒவ்வொரு அம்சத்தையும் ரசித்தேன். ஒவ்வொரு டிக்கெட்டின் விற்பனையையும், ஹவுஸ் ஃபுல் தியேட்டர் போன்ற உணர்வாக கொண்டாடுகிறேன். கடந்த ஆண்டு இதே நேரத்தில் ஆஸ்கார் விருதுகளின் போது நான் அனுபவித்த மகிழ்ச்சிக்கு நிகரானது இது” என்றார்.

மேலும், எஸ்.எஸ்.கார்த்திகேயா, “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அறிமுக நடிகர் சித்தார்த் நாதெல்லாவுடன் ஓர் ஊக்கமளிக்கும் நட்பு பற்றிய கதையின் விவாதத்தின் போது, அறிமுகமான ஷஷாங்க் யெலேட்டியிடம் இருந்து மற்றொரு சிலிர்ப்பான ஃபேண்டஸி கதை எங்கள் முன்னால் வந்தது. இது எங்களைப் பெருமளவில் உற்சாகப்படுத்தியது. இருப்பினும், இரு கதைகளும் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இரண்டு திரைக்கதைகளுக்கும் ஒரே நடிகர் என்பதையும், முதல் கதையின்போதே அவர் அதை ஒப்புக்கொள்வார் என்பதையும் நம்பவில்லை. இவ்வளவு காலம் நான் நேசித்த மனிதர், பன்முகத் திறமையின் உருவகம், ஈடு இணையற்ற மனிதர் ஃபஹத் ஃபாசில். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் சார். இது உங்களுக்கு எங்கள் #பிரேமலு. இந்தப் பயணத்தில் என்னுடன் கைகோர்த்ததற்கும் ஊக்குவித்ததற்கும் நன்றி ஷோபு அவர்களே!” எனத் தெரிவித்துள்ளார்.