இது தமிழ் ⚡ AMP

டாக்ஸிக் விமர்சனம் | Toxic review

By Dinesh R | Aug 27, 2026

கிட்டத்தட்ட 400 கோடிக்கும் மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட படம். இந்தியாவே எதிர்பார்ப்போடு இருந்த ஒரு படம். இது, பான்-இந்தியப் படம் இல்லை; பான்-உலகப்படம் என்றளவுக்கு எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியிருந்தது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தும், கோவா அந்த சுதந்திர எல்லைக்குள் 1947 ஆம் ஆண்டு வரவில்லை. அங்கு வெளிநாட்டவர் கோலோச்சுகிறார்கள். கடத்தல் தொழில் கொடிகட்டிப்பறக்கிறது. கோவாவைக் கட்டியாளும் ஒரு பெரிய டான் சால்வடாரின் அடியாட்கள் போல் வலம் வருகிறார்கள் ராயாவும், அவரின் அக்கா கங்காவும்! ராயாவிற்கும், டானின் மகள் ரெபேக்காவிற்கும் இடையில் நெருக்கம் ஏற்படுகிறது. ஆனால் ராயாவை வெறுக்கிறார் ரெபேக்காவின் தாய் எலிஸபெத். எலிஸபெத்தின் தம்பியான டோனி ராயாவைக் கொல்ல முயல, டோனியைக் காப்பாற்ற முடியாமல் தனது கைகளாலேயே கொல்கிறார் அவரது சகோதரி எலிஸபெத். சர்க்கஸில் சந்திக்கும் நாடியா மீது காதல் கொள்கிறார் ராயா. கர்ப்பமாக இருக்கும் நாடியாவைக் கொல்ல முயற்சி செய்கிறார் சால்வடார். அதனால் சால்வடாரை ராயா கொல்ல, ராயாவை ரெபேக்கா சுடுகிறார். ஆனால் இறந்ததோ கங்கா. படம் பார்க்கும் பார்வையாளர்கள் போலவே காண்டாகும் ராயா, வெளிநாடு போய் டன்டனா டான் ஆகிவிடுகிறார். மீண்டும் இந்தியா வரும்பொழுது, மெலிஸா என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார். நாடியாவின் மகன் டிக்கெட்டோ, தங்களை விட்டுவிட்டுப் போன தந்தை மீது கோவமாக இருக்கிறார். ராயா – டிக்கெட் உறவு என்னவாக முடிகிறது என்பதே படத்தின் கதை.

சினிமாவின் மீதான காதல் ரத்தத்திலும் சதையிலும் ஊறியிருக்கும் ஒருவரால் தான் இவ்வளவு உழைப்பைக் கொட்ட முடியும். யாஷ் இந்தப்படத்திற்காக கொடுத்திருக்கும் உழைப்பு அத்தகைய பெரிது. ரிஸ்க்கான காட்சிகளிலும் டூப் இன்றி அசரடித்துள்ளார். நயன்தாராவின் தோற்றமும் டாமினேட்டிங்கான நடிப்பும் நன்று. கியாரா அத்வானி காட்டும் கவர்ச்சியும், நடிப்பும் கிறக்கத்தை ஏற்படுத்துமளவு இருந்திருக்கலாம். ருக்மணி வசந்த் உள்ளிட்ட இன்னும் டஜன் கணக்கில் ஆக்டர்ஸ் இருக்கிறார்கள். யாரும் பெரிதாக மனதில் நிற்கவில்லை

ரவிபஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷிக் பாக்சி என மூன்று இசைஞர்கள் இப்படத்தில் வாசித்துள்ளார்கள். அப்படியிருந்துமே இந்த இசையை நேசிக்கமுடியவில்லை என்பது வருத்தமான நிஜம். ரவி ராஜீவ் காட்டியிருக்கும் விஷுவல் மட்டும் ஆகத்தரம்! நிச்சயமாகப் படத்தொகுப்பாளர் பல காட்சிகளை வெட்டி வீசியிருக்கலாம்.

கதாபாத்திரங்கள் மீது பார்வையாளர்கள்க்கு ஒரு பிடிமானத்தைத் திரைக்கதையின் வாயிலாக ஏற்படுத்தத் தவறவிட்டுள்ளார்கள் இயக்குநர் கீதுமோகன் தாஸும், திரைக்கதையில் உதவியுள்ள யாஷும். ரைட்டிங் லெவலில் சுத்தமாக செஃல்ப் எடுக்காத படம் மேக்கிங்கில் வசீகரிப்பது என்பது இயலாத காரியம். அசுர உழைப்பைக் கொட்டி இருந்தாலும் விழலுக்கிறைத்த நீராக வீணாகிவிட்டது. படத்தின் பிரம்மாண்ட தொழில்நுட்ப நேர்த்தியை ரசிக்கும் ஆட்களுக்கு மட்டும் ஆராவாரமாகப் பொழுது போகும். மற்றவர்களுக்கு, டாக்ஸிக்!

– வெண்பா தமிழ்