இது தமிழ் ⚡ AMP

TOXIC – முன்வெளியீட்டு வசூலில் ஒரு மகத்தான சாதனை

By Dinesh R | Feb 11, 2026

பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடங்கும் முன்னரே, “டாக்ஸிக்” படம் இது வரையிலான சாதனைகளை உடைத்து, விதிகளை மாற்றி எழுத ஆரம்பித்துவிட்டது. தெலுங்கு அல்லாத ஒரு திரைப்படமாக, ஆந்திரத் தெலுங்கானா சந்தையில் தில் ராஜுவின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸுடன் (SVC) ₹120 கோடி மதிப்பிலான வரலாற்றுச் சாதனை விநியோக ஒப்பந்தத்தைக் கைப்பற்றியதன் மூலம் இந்தப் படம் செய்திகளில் இடம்பிடித்தது. இது இந்திய திரைப்படத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது அடுத்ததாக வெளிநாட்டு ஒப்பந்தம் அதை விட பெரிய சாதனையைப் படைத்துள்ளது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

சர்வதேச அளவில், “டாக்ஸிக்” திரைப்படத்தை Phars Film என்ற முன்னணி வெளிநாட்டு விநியோக நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது படத்தின் அபூர்வமான முன்-வெளியீட்டு பயணத்தில் இன்னொரு மிகப்பெரிய மைல்கல்லாகும். இந்த ஒப்பந்தம் இந்தியத் திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த வெளிநாட்டு ஒப்பந்தங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ரூபாய் 105 கோடி முன்பணம் கமிஷன் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்தியப் படங்களுக்கான உலக சந்தையின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. டீசர் கூட வெளியாகாத நிலையில் இப்படம் இத்தனை பெரிய எண்ணிக்கைகளைப் பெற்றிருப்பது, சந்தையில் இப்படத்தின் மீதுள்ள நம்பிக்கையையும் ராக்கிங் ஸ்டார் யாஷ் மீது உள்ள ரசிகர்ளின் எதிர்பார்ப்பையும் காட்டுகிறது.

முக்கியமாக, இந்த வரலாற்றுச் சாதனை ஒப்பந்தம் டாக்ஸிக் படத்தின் இந்திய மொழிப் பதிப்புகள் (கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்) மட்டுமே பொருந்தும். ஆங்கிலப் பதிப்பு இதில் சேர்க்கப்படவில்லை. இது இந்திய மொழிப் பதிப்புகளின் தனிப்பட்ட வெளிநாட்டு வலிமையை மேலும் வலியுறுத்துகிறது.

“டாக்ஸிக்” மீதுள்ள எதிர்பார்ப்புகளுக்குக் காரணமுள்ளன. யாஷ் நடித்த முந்தைய படம் KGF: Chapter 2, உலக சந்தைகளில் அபாரமான வரலாற்று முக்கியத்துவமுமான வர்த்தகத்தை நிகழ்த்தியது. குறிப்பாக GCC பகுதியில் அதிக வசூல் செய்த இந்தியத் திரைப்படமாக சாதனை படைத்தது. பல சர்வதேச பிரதேசங்களில் அசாதாரணமான வசூல் சாதனைகளைப் பதிவு செய்தது. அந்த உலக வெற்றிதான் இப்போது “டாக்ஸிக்” படத்தை இன்னும் உயர்ந்த இலக்கை நோக்கிச் செலுத்துகிறது.

யாஷ் நடிக்கும் இந்தப் படம், இந்தியத் திரைப்பட வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக விரிவான சர்வதேச வெளியீட்டை நோக்கித் தயாராகிறது. நேபாளம், ஜப்பான், சீனா தவிர உலகம் முழுவதும் வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. இது “டாக்ஸிக்” படத்தை உலகளாவிய சினிமா நிகழ்வாக நிலைநிறுத்தும் தைரியமான முயற்சியாகும்.

Phars Films நிறுவனத்தின் சி.ஈ.ஓ.வும் நிறுவனருமான திரு. அஹமத் கொல்சின், “டாக்ஸிக் மூலம் எல்லைகளைத் தாண்டி, அனைவரையும் கவரும் ஒரு கதையைச் சொல்ல வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இந்தப் படத்தை சர்வதேச ரசிகர்களிடம் கொண்டு செல்லுவதில் பெருமை கொள்கிறோம். பல்வேறு கலாச்சாரங்களில் இந்தக்கதை கொண்டாடப்படுவதைக் காண ஆவலாக உள்ளோம். இந்த வெளிநாட்டு வெளியீடு Phars Film-க்கு முக்கிய மைல்கல்லாகும். உலகம் முழுவதும் பார்வையாளர்கள் “டாக்ஸிக்” படத்தின் தீவிரத்தையும், உணர்ச்சி ஆழத்தையும் அனுபவிப்பார்கள் என்பதில் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம்” என்றார்.

KVN புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட K நாராயணா, “டாக்ஸிக் ஒரு உலகளாவிய சினிமா மொழியில் பேசும் படமாக கற்பனை செய்யப்பட்டது. இப்படிப்பட்ட அளவிலான கனவுக்கு, உலகளாவிய வலிமை மற்றும் நம்பகத்தன்மை கொண்ட கூட்டணி தேவைப்பட்டது. சர்வதேச சந்தைகளில் இந்திய சினிமாவை வலிமையாக நிலைநிறுத்துவதில் Phars Films தொடர்ந்து அபார திறனை நிரூபித்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனை மிக்க வெளிநாட்டு விநியோக ஒப்பந்தத்தில் அவர்களுடன் கைகோர்ப்பதில் பெருமை கொள்கிறோம். அவர்களின் பரந்த மற்றும் நுணுக்கமான அணுகுமுறையில், “டாக்ஸிக்” உலகம் முழுவதும் அதற்குரிய அளவிலும் தாக்கத்திலும் வேகத்திலும் கொண்டாடப்படும் என்பதில் நம்பிக்கை உள்ளது. இது இந்திய சினிமாவின் உலகளாவிய வெளியீட்டில் புதிய அளவுகோல்களை உருவாக்கும்” என்றார்.

சர்வதேச அளவிலான தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’, உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பக் குழு, வலுவான VFX, வலுவான கதை உலகம், மற்றும் பெரும் நட்சத்திரக் கூட்டணி ஆகியவற்றால் நிரம்பியுள்ளன. இது எதிர்காலத்தில் ₹1000 கோடி மெகா பிளாக்பஸ்டராக மாறும் என்பதற்குக் கட்டியம் கூறுகிறது.

யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோர் இணைந்து எழுதி, கீது மோகன் தாஸ் இயக்கியிருக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கில மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்ணி, தயாரிப்பு வடிவமைப்பாளர் T.P.அபித் ஆகியோர் அடங்கிய ஒரு வலிமையான தொழில்நுட்பக் குழுவையும் இந்தப் படம் கொண்டுள்ளது. ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெரி (John Wick), தேசிய விருது பெற்ற அதிரடி சண்டை இயக்குநர்களான அன்பறிவ், கெச்சா காம்பக்‌டி (Kecha Khamphakdee) ஆகியோரின் வடிவமைப்பில் அதிரடியான சண்டைக் காட்சிகள் பிரம்மாண்டமான அளவில் படமாக்கப்பட்டுள்ளன.

KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட ‘டாக்ஸிக்’ திரைப்படம் – ஈத், உகாதி, குடி பட்வா ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, விழாக்கால கொண்ட்டாட்டமாக வரும் மார்ச் மாதம் 19, 2026 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.