இது தமிழ் ⚡ AMP

வெஞ்சென்ஸ் விமர்சனம் | Vengeance review

By Dinesh R | Mar 14, 2026

மாவட்ட ஆட்சியராக இருந்து அரசியல் சாணக்கியராக உயரும் வேணி எனும் இளம்பெண்ணை மையமாகச் சுழலும் ஓர் அரசியல் த்ரில்லர் படம்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

2042 ஆம் ஆண்டு, இனிக்கியா நாட்டில், தாய்நாடு மாநிலத்தில், வேணி மாவட்டத்தில் கதை தொடங்குகிறது. ஒரு மாறுபட்ட அனுபவத்திற்குத் தயாராக்கும் முஸ்தீபுகளுடன் படம் தொடங்குகிறது. ‘யார்றா அந்த வேணி?’ எனும் கேள்விக்குப் பதில் சொல்ல, 1985 க்கு அழைத்துச் செல்கிறார் சச்சு. காவேரி மாவட்டத்தில் வாழும் வேணி எப்படி கலெக்டரானார், ஏன் பதவி பறிப் போனது, எவ்வாறு அரசியலுக்குள் வந்தார், அதிலிருந்து ஏன் ஓரங்கட்டப்பட்டார், எப்படி மீள்கிறார் என்பதே கதை. இவற்றை, முதல் ஒளி, நிழல் அரசி, இருளின் ஒளி, அரியணையின் அரசியல், அழிவின் எழுச்சி என ஐந்து அத்தியாயங்களாகப் பிரித்துச் சொல்லியுள்ளார் இயக்குநர் ராகுல் அஷோக்.

கதாநாயகியை மையப்படுத்திய அரசியல் படம் என்பது மிக ரேர் காம்போ. அதுவும் எப்பொழுதும் புகழ் வெளிச்சத்தில் இருக்கத் துடிக்கும் ஒரு நபராக வேணி பாத்திரத்தில் அசத்தியுள்ளார் அபர்ணதி. சில உண்மைச் சம்பவங்களைக் காட்சிகள் நினைவுப்படுத்தினாலும், ஒட்டுமொத்த்ச்மாகப் படம் ஒரு சீரில் செல்லாமல் நிறைய ஜம்ப் ஆகிறது. முதலமைச்சர் வேலுவாக இளவரசும், ஒன்றிய உள்துறை அமைச்சர் மாதவாக ஜான் விஜயும் நடித்துள்ளனர். முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள இவர்களை விட, கொஞ்சம் நேரமே ஷண்முகமாக வரும் காளி வெங்கட் நினைவில் நிற்கும்படி நடித்துள்ளார்.

படத்தின் ஓட்டத்தைச் சுவாரசியமாக்கும் சாகர் பாத்திரத்தில் கேபிள் சங்கர் நடித்துள்ளார். சாகர் யாரென்ற அறிமுகத்தைத் தராமலே, அவரது யோசனையை வேறு வழியின்றி எதிர்கட்சித் தலைவர் திருப்பதியாக நடித்திருக்கும் லிவிங்ஸ்டன் கேட்கிறார். வேணியைப் பற்றித் துப்புத் துலக்கி, அவருக்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் சாகராக நடித்துள்ள தானேற்ற பாத்திரத்தை நிறைவாகச் செய்துள்ளார். தேர்தலுக்கான திட்டங்களை அறிவித்து, அதை அமுல்படுத்தாமல் இருக்கவும் வழி சொல்கிறார்.

ஒரு நல்ல அரசியல் த்ரில்லராக வந்திருக்க வேண்டிய படம், தவறான எடிட்டிங் பேட்டர்னாலும், இலக்கற்ற திரைக்கதை ஓட்டத்தாலும் கொஞ்சம் அலைக்கழிக்கச் செய்கிறது. மையக் கதாபாத்திரமான வேணிக்கு நல்ல வலுவான ஓர் அடித்தளம் அமைக்கப்பட்டிருந்தாலும், எதை நோக்கி அந்தக் கதாபாத்திரம் பயணிக்கிறது என்பதைக் கடைசி வரை ராகுல் அஷோக் வரையறுக்கவே இல்லை. வேணியாக நடித்துள்ள அபர்ணதியின் நடிப்பு மட்டுமே படத்தைத் தாங்கிப் பிடிக்கிறது.