‘யாருக்கும் தொந்தரவு தராமல், படுத்தப் படுக்கையாக இல்லாமல், எந்த நோய்நொடியும் அண்டாமல் பட்டுன்னு போய்ச் சேர்ந்துடணும்’ என்ற பிரார்த்தனையைச் செவியுறாதவர்களே இருக்கமாட்டோம். அந்தப் பிரார்த்தனையை அடியொட்டிய மருத்துவ விவாதமொன்றினை ட்ரைமெட்டும் நியூரோக்ரிஷும் இணைந்து நடத்தினார்கள். முதியோர் பராமரிப்பைப் பற்றிய TriMed-இன் ‘End of Life Care’ அனுபவத்தை, சம்பந்தப்பட்டவரின் பேத்தியின் ஆடியோவை ஒலிபரப்பி, தங்களது சிகிச்சை முறையை விளக்கினார் மருத்துவர் ஸ்ரீவட்சா. ‘டிக்னிட்டாஸ் (DIGNITAS)’ எனும் நிறுவனத்தைப் பற்றி லண்டன் மருத்துவமனையில் பணி புரியும் நீரஜ் அகர்வால் விளக்கினார். அவர், ‘Oxford Textbook of Neuropsychiatry’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
End of Life Care என்பது, வாழ்வின் இறுதிக்கட்டத்தில் உள்ளவர்களுக்கு அளிக்கப்படும் பராமரிப்பு எனப் பொருள் கொள்ளலாம். அந்த ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரிக்கு வயது 90. 6 மாதங்கள் இந்தியாவில் தனியாகவும், 6 மாதங்கள் வெளிநாட்டில் அவரது பேத்தியுடனும் வசிப்பார். ஒருமுறை பேத்தி வீட்டுக்குப் போகும் பொழுது, அவருக்கு அல்சீமர்ஸ் மறதி நோய் இருப்பது தெரிய வருகிறது. இந்தியாவில் எப்படித் தனியாக இருக்கப் போகிறார் எனக் கவலையுறுகிறார். என்ன செய்வதெனத் தேடிய பொழுது அவர்களுக்கு, ட்ரைமெட் (TriMed) பற்றித் தெரிய வருகிறது. அவர்களின் சிறப்புச் சிகிச்சைத் திட்டமான GRACE-இன் உதவியை நாடுகிறார்.
GRACE – Geriatric Rehabilitation & Assisted Care Enterprise
2012 இலிருந்து 2015 வரை மூன்று வருடங்கள், ட்ரைமெட் அந்த ராணுவ அதிகாரியின் உடல் நலத்தையும் மன நலத்தையும் பராமரித்துள்ளார்கள். அந்த முதியவருக்கு உதவியாக இருந்த பணிப்பெண்ணுக்கு, முதியோர்களைப் பராமரிப்பது பற்றிய பால பாடங்களைப் போதித்து, 24×7 எந்நேரமும் மருத்துவ ஆலோசனைகளும், அவசர கால மருத்துவ உதவியும் வழங்கத் தயாராக இருந்ததையும் நன்றியோடு குறிப்பிட்டார் வெளிநாட்டு வாழ் பேத்தி.
‘Euthanasia (கருணைக் கொலை)’ என்பது ஆதி காலத்தில் இருந்தே நடைமுறையுள்ளதொரு பழக்கம். சாக்ரடீஸ், பிளாட்டோ போன்றோர்கள் இப்பழக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கூட, “தலைக்கூத்தல்” என்ற சடங்கால் கருணைக் கொலை இன்றளவும் நடக்கிறது (‘மருது’ எனும் தமிழ்ப்படத்தில், விஷாலின் பாட்டியாக வரும் கொல்லப்புளி லீலாவை தலைக்கு ஊத்தித்தான் ஆர்.கே.சுரேஷ் “கொலை” செய்வார்). ஓர் உயிரைக் எடுக்கும் உரிமை சக மனிதருக்கு உண்டா? ‘கருணைக் கொலை’ குறித்தான இந்த அறம் சார்ந்த கேள்விக்கு ஒரு நிச்சய விடை கிடைத்ததில்லை. மிகச் சில நாடுகள் மட்டும் கருணைக் கொலையை அங்கீகரித்துள்ளன. ஒட்டுமொத்த அமெரிக்காவில் 5 மாகாணங்கள் மட்டுமே அங்கீகரித்துள்ளது; இங்கிலாந்தில், ‘அங்கீகரிக்கப்பட வேண்டும்’ என போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
‘இந்தியாவில் கருனைக் கொலை பற்றிய ஒவ்வொரு வழக்கையும் நீதிமன்றம் தனித்தனியாக அலசித் தீர்ப்பு வழங்கும்’ என்றார் கருணைக்கொலையைப் பற்றி ஆவணப்படம் எடுத்துள்ள சேத்தன் ஷா.
மேலும், “ஒருவரிடம் நீங்கள் இறந்து விடுவீர்கள் என நேரடியாகச் சொல்ல முடியுமா? தொடக்கத்தில், இது போன்ற சூழலை எதிர்கொள்ள நான் மிகவும் பயப்படுவேன். The Tibetan book of Living and Dying என்ற புத்தகம் படித்த பின், அந்தப் பயம் நீங்கியது. நோயாளிகளிடமும், அவர்களைச் சேர்ந்தவர்களிடமும் உண்மையைச் சொல்வது மிக முக்கியம். அந்தப் புத்தகத்தை அனைவரும் அவசியம் படிக்கவேண்டும்” என்றார்.
அந்தப் புத்தகத்தின் முன்னுரையில், “கண்ணியமாக இறக்க ஆசைப்பட்டால், கண்ணியமாக வாழப் பழகுங்கள்” என்கிறார் தலாய் லாமா.
– தினேஷ் ராம்