இது தமிழ் ⚡ AMP

Trauma விமர்சனம் | Trauma review

By Dinesh R | Mar 21, 2025

ட்ராமா என்றால் அதிர்ச்சி, வேதனை எனப் பொருள் கொள்ளலாம், அவ்வேதனை மன அதிர்ச்சி, புற அதிர்ச்சி என இரண்டையும் குறிக்கும்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

திருமணமாகி நான்கு வருடங்களாகியும் குழந்தை பிறக்கவில்லை என மன வேதனையில் உள்ளார் சுந்தரின் மனைவி கீதா. ஆட்டோ ஓட்டும் தந்தைக்கு ஒரு கால்-டேக்ஸி வாங்கித் தந்துவிட்டுத்தான் திருமணத்தைப் பற்றி யோசிக்கவேண்டும் என நினைக்கும் செல்வி கர்ப்பம் ஆகிவிடுகிறாள். இரண்டு தத்துக்குட்டி கார் திருடர்கள் காரில் பிணத்தோடு காரைத் திருடி போலீஸில் சிக்கிக் கொள்கிறார்கள். இம்மூன்று கதையும் ஒரு மெடிக்கல் ஸ்காமில் (Scam) வந்து இணைவதுதான் படத்தின் முடிவு.

கார் திருடர்களாக மதன் கோபாலும், ஸ்மைல் செல்வாவும் நடித்துள்ளனர். படத்தில் அவர்களது பங்கு முக்கியம் என்ற போதும், நகைச்சுவைக்காக வலிந்து திணிக்கப்பட்ட அசுவாரசியமான காட்சிகளும் வசனங்களும் கொஞ்சம் பொறுமையைச் சோதிக்கிறது. ஆட்டோ ஓட்டுநராக மறைந்த மாரிமுத்து நடித்துள்ளார். அவரது தனித்துவமான குரலில் டப்பிங் இல்லாதது கவனத்தை ஈர்த்து நெருடுகிறது. அவரது மகள் செல்வியாகப் பூர்ணிமா ரவி நடித்துள்ளார். மூன்று கதைகளில், பூர்ணிமா ரவியின் அத்தியாயம் தான் நிறைவாக உள்ளது. செல்வியாக மிக அற்புதமாக நடித்துள்ளார். குழந்தையில்லா கீதா பாத்திரத்தில் சாந்தினி நடித்திருந்தாலும், படத்தின் நாயகியாகப் பூர்ணிமா ரவியைத் தான் கொள்ள முடிகிறது. செல்வியின் காதலாராக பிரதோஷ் நடித்துள்ளார். மலட்டுத்தன்மை பிரச்சனையால் பாதிக்கப்பட்ட சுந்தராக விவேக் பிரசன்னா நடித்துள்ளார்.

தன்னால் ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியாது எனத் தெரிந்தும், பெற்றோர்களின் நிர்பந்தத்திற்காகத் திருமணம் செய்துகொள்கிறார் சுந்தர். குழந்தையில்லை என்று சாந்தினியும், மனைவியிடம் உண்மையை மறைக்கும் குற்றவுணர்வில் விவேக் பிரசன்னாவும் மன வேதனையில் உழல்கின்றனர். ஒரு மருத்துவமனைக்குச் சென்று, அவர்கள் தரும் மருந்தினை எடுத்துக் கொண்டவுடன் சாந்தினி கர்ப்பமாகிறார். பிரச்சனை தொடங்குகிறது. இடைவேளையில் தான் கதை தொடங்குகிறது. அதுவரை கார் திருடர்களை வைத்துச் சமாளிக்கிறார் இயக்குநர் தம்பிதுரை மாரியப்பன்.

அறிவழகன் இயக்கத்தில், அருண் விஜய் – மகிமா நம்பியார் நடிப்பில் 2017 இல் வெளிவந்த குற்றம் 23 படத்தின் மையக்கதையோடு இப்படத்தின் மருத்துவ மோசடியும் பொருந்திப் போகிறது. அறிவழகனின் படத்தைப் போலவே, குழந்தைகளைத் தத்தெடுப்பதைப் பற்றிய விழிப்புணர்வோடு படத்தை முடித்திருந்தாலும், ‘Pain never ends (வலி ஒருபோதும் முடிவதில்லை)’ என்ற எதிர்மறை உப தலைப்பிற்கு என்ன அவசியம் உள்ளது என்பது இயக்குநருக்கே வெளிச்சம்.