இப்படி அவர் எது சொன்னாலும், செய்தாலும் ரசிக்க தயாராக உள்ளார் பள்ளி ஹெட்மாஸ்டராய் வரும் ஜூனியர் பாலய்யா. 22 வருட அனுபவத்தில் ஒன்றுமே சாதித்ததில்லை என சுய கழிவிரக்கம் கொள்ளும் இடத்தில் ஜூனியர் பாலய்யா அசத்தினாலும் போக போக சமுத்திரக்கனியின் சைலன்ட் ஜால்ராவாக ஆஃப் ஆகி விடுகிறார். சமுத்திரக்கனியைக் கண்டாலே வெறுக்கும் ஆசிஸ்டென்ட் ஹெச்.எம்.மாக தம்பி இராமைய்யா. வட்டிக்கு பணம் கொடுத்து, அந்தக் கணக்கை பள்ளி நோட்டீஸ் போர்ட்டிலேயே எழுதும் சர்வ அலட்சியம் மிக்க ஆசிரியர். மற்ற கதாபாத்திரங்கள் தரும் இயல்பான தாக்கத்தை தம்பி இராமைய்யாவின் சேஷ்டைகள் தரவில்லை. ஒருவேளை நகைச்சுவை என நினைத்து நடித்திருப்பாரோ என்னவோ!?
காதல் இல்லையேல் சாதல் என்பது தமிழ்ப்படங்களிற்கு பொருந்தும் போல. பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பழனிமுத்துவிற்கும், அறிவழகிக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால் வாத்தியாரின் பெயர் கெட்டுப் போகக் கூடாதென காதலை தியாகம் செய்கிறான் பழனி. தமிழ்நாட்டில் தியாக சீலர்களுக்கு பஞ்சமில்லை என புல்லரிப்பு ஏற்பட்டாலும், அந்த வயதில் தோன்றுவது காதல் இல்லை என ‘தயாளு சார்’ எடுத்துச் சொல்லாதது ஏனெனத் தெரியவில்லை. மாறாக நான் எட்டாவது படிக்கும் பொழுதே ரவுடி என சாட்டையை அந்தப் பையன் மீது வீசுகிறார் சமுத்திரக்கனி.

