32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பனாரஸ் – நவம்பர் 4 வெளியீடு

Dinesh R சேலம் Published: 25/10/2022 3 நிமிட வாசிப்பு Updated: 28/10/2022 சினிமா
எழுத்து அளவு:

”இயக்குநர் ஜெயதீர்த்தா எனக்காக அற்புத படைப்பை உருவாக்கி இருக்கிறார். ‘பனாரஸ்’ படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம்” என ‘பனாரஸ்’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் ஜையீத் கான் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கன்னடத் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஜெயதீர்த்தா இயக்கத்தில் தயாராகி, ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ‘பனாரஸ்’. பட வெளியீட்டிற்கு முன் ரசிகர்களின் முன்னிலையில் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு கடந்த சனிக்கிழமையன்று கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ரயில்வே விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கன்னடத் திரையுலகத்தின் ‘சேலஞ்சிங் ஸ்டார்’ தர்ஷன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் நடன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதற்கு முன் ‘பனாரஸ்’ படத்தில் இடம்பெற்ற பாடல்களும், படத்தின் முன்னோட்டமும் வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்குத் திரையிடப்பட்டன.

நடிகர் தர்ஷன், ”பனாரஸ் படத்தை ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். படத்தின் நாயகனும், நண்பருமான ஜையீத் எனக்குத் திரையிட்டு காண்பித்தார். தொடக்கத்தில் ஜையீத் பணக்காரத் தந்தையின் மகன் என்றும், திறமை இல்லாதவர் என்றும் நினைத்தேன். ஆனால் படத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். மேலும் கதை மற்றும் இயக்கம் சிறப்பாக உள்ளது. அதனால் இந்தப் படம் நிச்சயமாக மாபெரும் வெற்றியைப் பெறும்” என்றார்.

படத்தின் நாயகனான ஜையீத் கான், ” இன்று என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நாள். எனது வாழ்க்கையில் முக்கியமான இரண்டு சக்திகள் இங்கே என்னுடன் உள்ளனர். எனது மூத்த சகோதரர் மற்றும் எனது தந்தையைப் போன்ற தர்ஷன் இங்கே இருக்கிறார். தர்ஷன் தொடக்கம் முதலே எனக்கு உறுதுணையாக இருக்கிறார். இந்தத் தருணத்தில் என்னுடைய தந்தைக்கு வாக்குறுதி ஒன்றை அளிக்கிறேன். அவரை இழிவுபடுத்தும் செயலை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என உறுதியளிக்கிறேன். மேலும் எனது தந்தையினால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன். ‘பனாரஸ்’ படத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்தப் படத்திற்காக நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். இயக்குநர் ஜெயதீர்த்தா எனக்காக ஒரு அற்புதமான படைப்பை உருவாக்கியுள்ளார். நவம்பர் 4ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தின் மூலம் மக்களின் இதயங்களை வெல்வோம். ஒவ்வொருவரும் இந்தப் படத்தைப் பார்த்து என்னை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

என் கே ப்ரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கும் ‘பனாரஸ்’ திரைப்படம் நவம்பர் நான்காம் தேதி அன்று கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. தமிழில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வெளியிடுகிறது. ‘பனாரஸ்’ படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர்கள் சுஜய் சாஸ்திரி, தேவராஜ், அச்யுத் குமார், பர்க்கத் அலி, சப்னா ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

காசியைக் கதைக்களப் பின்னணியாகக் கொண்டு அமானுஷ்ய விசயங்களுடன் கூடிய காதல் கதை என்பதால், ‘பனாரஸ்’ படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.