32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“பிரஸ் மீட்டில் அவ்வளவு நெகட்டிவிடி பரவிய பிறகு மிகப்பதட்டமாக இருந்தேன்” – இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்

Inbaaraja சேலம் Published: 08/04/2024 4 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட் ஆகும். மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இவ்விழாவினில் படத்தொகுப்பாளர் முத்தையா, ” ‘அடியே’ படத்திற்கு முன்பே கிடைத்த வாய்ப்பு இது. இந்தப் படத்திற்காக நிறையச் சண்டை போட்டிருக்கிறோம். ஆனால் படம் நன்றாக வந்தது. சோஷியல் அவேர்னஸ் உள்ள படம். நல்ல வரவேற்பு தந்ததற்கு நன்றி. தொடர்ந்து இது போல் நல்ல படம் செய்ய முயற்சி செய்கிறோம்” என்றார்.

இசையமைப்பாளர் வான், “விக்னேஷ் கார்த்தி அண்ணாவிற்கு முதல் நன்றி. ஒரு ஷார்ட் ஃபிலிம் பார்த்து, என்னால் இது முடியும் என நம்பி, என்னை அழைத்து வாய்ப்பு தந்ததற்கு நன்றி. என் டீம் எல்லோரும் நன்றாக வேலை செய்திருந்தார்கள். தயாரிப்பாளர்களுக்கு நன்றி. படத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் திண்டுக்கல் சரவணன், “பிரஸ் பீபிள் படம் பார்த்து என்னை ஃபோன் செய்து பாராட்டினார்கள். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ‘டோண்ட் ஜட்ஜ் த புக் பை இட்ஸ் கவர்’ என்பது விக்கிக்கு தான் பொருந்தும். அவர் மிகச் சிறந்த மிமிக்ரி ஆர்டிஸ்ட். தன் பாதையை மாற்றி இயக்குநராக ஆகி, நல்ல படம் தந்துள்ளார். என்னை எப்படி இந்தப் படத்திற்கு செலக்ட் செய்தார் என்று தெரியவில்லை. அடுத்த படம் எடுக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். அதிலும் வாய்ப்பு தாருங்கள். நாங்கள் எல்லாம் சினிமாவை நம்பி தான் இருக்கிறோம், எங்களையெல்லாம் ஞாபகம் வைத்து, கூப்பிட்டு நடிக்க வைக்கும் விக்கிக்கு நன்றி” என்றார்.

நடிகர் அமர், “2020 இல் இந்தப் படம் செய்தேன். அதுக்கப்புறம் இந்தப் படம் செய்ததையே மறந்துவிட்டேன். ரிலீஸ் போஸ்டர் பார்த்து தான் இதில் நடித்திருக்கிறோம் எனச் சந்தோசப்பட்டேன். ‘ஏ’ சர்டிபிகேட் என்பதால் குடும்பத்தோடு போகாமல் தனியாகப் போனேன். ஆனால் பலர் குடும்பத்தோடு படத்தை ரசிக்க வந்தார்கள். ரொம்ப சந்தோசமாக இருந்தது” என்றார்.

KJB டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் பாலமணிமார்பண், “பிரஸ் மீட்டில் நிறையக் கேள்விகள் பயத்தைத் தந்தது. ஆனால் பிரஸ் ஷோவிற்கு பிறகு நிறையப் பாராட்டுகளும் வந்தது. இன்றைய அளவில் மக்கள் இந்தப் படத்தைப் பற்றிப் பேசுகிறார்கள், பாராட்டுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் பத்திரிக்கையாளர்கள் தான். உங்களுக்கு நன்றி. விக்னேஷ் ஷார்ட்ஃபிலிம் எடுக்கும் காலத்திலிருந்து தெரியும். அப்போதே படம் செய்யப் பேசிக்கொண்டிருந்தோம். அவர் ப்ரொட்யூசர் ஃப்ரண்ட்லி. தயாரிப்பாளர்களுக்காகப் பார்த்துப் பார்த்து செய்வார். இடையில் விக்னேஷுக்கு ‘அடியே’ படம் கிடைத்தது. அதனால் தான் இந்தப் படம் லேட் ஆனது. விக்னேஷைச் சுற்றி வேலை பார்க்கும் அனைவரும் மிக அர்ப்பணிப்போடு வேலை பார்ப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இப்போது படம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. தியேட்டர்களில் ஷோ ஃபுல்லாக போய்க் கொண்டிருக்கிறது” என்றார்.

சிக்ஸர் எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் சார்பில் தினேஷ் கண்ணன், “இது தேங்ஸ் மீட். மக்களிடம் இந்தப் படம் பேசப்படக் காரணமே பத்திரிக்கையாளர்கள் தான். நன்றி. எங்கள் படம் 11  படங்களுடன் வெளியானது. அது மிகப் பெரிய பிரஷரைத் தந்தது. ஆனால் மக்கள் எங்கள் படத்தை அரவணைத்துக் கொண்டார்கள். இது போன்ற சின்ன படங்களுக்கு நல்ல ஆதரவைத் தந்தால், எங்களை மாதிரி நிறையப் பேர் படம் எடுப்பார்கள். இந்தப் படத்தின் நடிகர்களுக்கு நிறையத் தைரியம் இருக்க வேண்டும். இப்படிக் கதாபாத்திரங்கள் தமிழ் சினிமாவில் வந்ததில்லை. விக்னேஷ் எப்படி நடிகர்களை ஒத்துக் கொள்ள வைத்தார் எனத் தெரியவில்லை. இப்படம் ட்ரெய்லர் வந்த போது பரபரப்பைக் கிளப்பியது. ஆனால் படம் வந்த பிறகு அனைவரும் பாராட்டினார்கள்” என்றார்.

செவன் வாரியர்ஸ் சுரேஷ்குமார், “இந்தப் படம் வெற்றி பெறக் காரணம் பிரஸ் மீடியா தான். பிரஸ் மீட்டில் கேட்ட கேள்விகள் பார்த்து மிகவும் நொந்துபோய் விட்டேன். ஆனால் படம் பார்த்த பிறகு நீங்கள் தந்த ஆதரவு மிக மகிழ்ச்சியாக இருந்தது. விக்னேஷ் என் தம்பி மாதிரி, ஷார்ட்ஃபிலிம் காலத்திலிருந்து தெரியும். தினேஷ் மற்றும் பாலாவிற்கு நன்றி. ஒரு படத்தின் நெகட்டிவ் மட்டுமே காட்டி ட்ரெய்லர் வெளியிட்ட ஒரே டீம் நாங்க தான். ஆனால் படம் பார்த்த பிறகு மக்கள் தந்த ஆதரவு மகிழ்ச்சி. என்னிடம் நாலு கதை சொன்னார் விக்னேஷ், அதில் ஏன் இரண்டு கதை எடுக்கவில்லை, படத்தின் பேர் மாற்றினார் அதையும் என்னிடம் கேட்கவில்லை, இப்போது அவரிடம் கேட்காமல் ஒன்று சொல்கிறேன்..” எனக் கூறியவர், விக்னேஷ் கார்த்திக்கு அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் செக்கைத் தந்து அசத்தினார்.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், “இந்தப் படம் இந்த நிலையில் இருக்க மிக முக்கிய காரணம் நீங்கள் தான். பிரஸ் மீட்டில் அவ்வளவு நெகட்டிவிடி பரவிய பிறகு, பிரஸ் ஷோவின் போது, மிகப் பதட்டமாக இருந்தேன். ஆனால் நீங்கள் கைதட்டிப் பாராட்டியது உண்மையிலேயே மிக சந்தோசமாக இருந்தது. நல்ல படம் என்றால் நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்பது இதன் மூலம் நிரூபணமானது. இன்னொரு வேண்டுகோள், திரையரங்கில் இப்போது படம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் வீக் டேஸில் தியேட்டரில் ஹவுஸ்ஃபுல்லானால் தான் அடுத்த வாரம் ஷோ தருகிறார்கள். ஆனால் வார நாட்களில் பெரிய ஹீரோக்ளுக்கே கூட்டம் வராது. இந்த நிலை மாற வேண்டும். நீங்கள் ஆதரவு தந்தால் அடுத்த வாரமும் படம் ஓடும். எல்லோருக்கும் நன்றி. அடுத்த வருடம் ஹாட் ஸ்பாட் 2-வோடு, எங்கள் குழுவோடு உங்களைச் சந்திக்கிறோம்” என்றார்.

படக்குழுவினர் இதே தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஹாட்ஸ்பாட் 2 உருவாகவுள்ளதை இந்த வெற்றி விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

Inbaaraja
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.