32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

நித்தம் ஒரு வானம் – இன்ப அதிர்ச்சி தரப் போகும் அசோக் செல்வனின் 4 ஆவது கெட்டப்

Dinesh R சேலம் Published: 31/10/2022 4 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

வயாகாம் 18 மற்றும் ரைஸ்ஈஸ்ட் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘நித்தம் ஒரு வானம்’. இதில் நடிகர் அசோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் ஆகீயோர் இணைந்து நடித்திருக்கிறார்கள். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் மற்றும் தரண் குமார் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். காதலையும் வாழ்வியலையும் மையப்படுத்தித் தயாராகியிருக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கியிருக்கிறார். நவம்பர் 4 ஆம் தேதியன்று வெளியாகும் இந்தப் படத்தைத் தமிழகம் முழுவதும் சினிமாக்காரன் எனும் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு, சென்னை வடபழனியிலுள்ள ஃபோரம் மால் வளாகத்தில் நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் சாகர், நாயகன் அசோக் செல்வன், நாயகிகள் ரிது வர்மா, ஷிவாத்மிகா ராஜசேகர், பாடலாசிரியை கிருத்திகா நெல்சன், பின்னணி இசையமைப்பாளர் தரண் குமார், படத்தொகுப்பாளர் ஆண்டனி, ஒளிப்பதிவாளர் விது அய்யன்னா, கலை இயக்குநர் கமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் சாகர், ”கொரோனாத் தொற்றுப் பாதிப்பு முன்னரே இந்தப் படத்தினைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரோனாக் காலகட்டத்தின் போது சற்று பயம் ஏற்பட்டது. கடவுளின் அருளால் அனைத்தும் இனிதாக நிறைவடைந்திருக்கிறது. இந்தப் படத்திற்காக இயக்குநர் கார்த்திக் கடுமையாக உழைத்திருக்கிறார். அவருடைய ஏழு ஆண்டு கனவு இது. நாங்கள் பணத்தை மட்டும் முதலீடு செய்திருக்கிறோம். இந்தப் படைப்பை முழுவதும் அவர் தன் தோளில் சுமந்து நிறைவு செய்திருக்கிறார். இந்தத் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றால், அந்த வெற்றி முழுவதும் இயக்குநர் கார்த்திக்கைத் தான் சாரும்.

இந்தப் படத்தின் விளம்பரத்தில் மூன்று கெட்டப்புகளில் நாயகன் அசோக் செல்வன் தோன்றுகிறார். ஆனால் படத்தில் இதைத் தவிர்த்து நான்காவதாக ஒரு கெட்டப்பில் அசோக் செல்வன் வருகிறார். அது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும். அசோக் செல்வன் படப்பிடிப்புத் தளத்தில் வெயில், மழை, பனி என ஒவ்வொன்றிலும் ஈடு கொடுத்து கடுமையாக உழைத்திருக்கிறார். நடிகைகள் ரிது வர்மா அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ராஜசேகர் என மூன்று நடிகைகளும் தங்களது பணிகளை அற்புதமாக வழங்கி இருக்கிறார்கள். ஒளிப்பதிவு, இசை, பின்னனி இசை என அனைத்தும் ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. காதலும் இசையும் கலந்த ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் சென்று ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் ரா. கார்த்திக், ”நித்தம் ஒரு வானம் படத்தின் கதையை எழுதி, தற்போது படம் நிறைவடைந்திருக்கும் வரை ஏழு ஆண்டுகளாகி இருக்கிறது. ‘வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் காத்திரு’ என்பார்கள். அது என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்றது. எந்த நோக்கத்தில் இந்தப் படத்தின் கதையை எழுதினேனோ, அதனை முழுவதுமாக, நேர்த்தியாகப் படைப்பாக உருவாக்கி இருக்கிறேன். நான் படைப்பாளனாகக் கதையைச் சொல்லும்போது அதற்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று நினைப்பேன். நம்மைச் சுற்றி இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடத்திலும் ஒரு நெருக்கமான பிணைப்பு இருக்கும். அதனை உணர்வுபூர்வமாக திரையில் சொல்ல வேண்டும் என நினைப்பேன். அதனைச் சொல்லி இருக்கிறேன். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு உங்களுடைய மனதில் குறைந்தபட்சம் ஒரு நிமிடமாவது பாசிட்டிவான தாக்கம் ஏற்படும் என உறுதியாக நம்புகிறேன். படம் பார்க்கும் முன் உங்களுடைய மனதில் அழுத்தங்கள் இருந்தாலும், நெருக்கடிகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து இந்தப் படம் சிறிய அளவிலான மன நிம்மதியையும், ஒரு புன் சிரிப்பையும் உங்களிடத்தில் உண்டாக்கும் என்றும் உறுதியாக நம்புகிறேன்.

கதையை இன்பச் சுற்றுலா செல்வது போல் எழுதி விட்டேன். இதனைக் காட்சி பூர்வமாக உணரும் தயாரிப்பாளரால் தான் தயாரிக்க இயலும். இதனைத் தயாரிப்பாளர் சாகர் உணர்ந்து முழு ஒத்துழைப்பு அழைத்து தயாரித்திருக்கிறார். கதை சென்னையில் தொடங்கி கொல்கத்தா, சண்டிகர், மணாலி, கேரளா, பொள்ளாச்சி என நீண்ட தூர பயணத்தைக் கொண்டிருக்கிறது.

நேர்மையாக ஒரு படைப்பை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தைப் பார்வையிட்ட தணிக்கைத்துறை அதிகாரிகள் எந்த ஒரு வெட்டும் இல்லாமல் யூ சான்றிதழை வழங்கிப் பாராட்டினார்கள். இந்தத் திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகளோ, மது அருந்தும் காட்சிகளோ இடம்பெறவில்லை. அதனால் குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் படத்தை குடும்பத்துடன் ஏன் பார்க்க வேண்டும் என்றால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இணையம் முழுவதும் மக்கள் ‘எதிர்மறையான எண்ணங்களை வெல்வது எப்படி?’ என்பதைத்தான் அதிகளவில் தேடி இருக்கிறார்கள். நம்மில் அனைவருக்கும் ஏதேனும் ஒரு வகையிலான எதிர்மறை எண்ணங்கள் இருக்கிறது. மனிதர்களை மனிதர்களாகப் பார்ப்பதில்லை. முக கவசம் அணிந்து, அணிந்து அசலான முகத்தைத் தொலைத்து விட்டோம். இத்தகைய நிலையில் யாரேனும் நம்மை உத்வேகப்படுத்த வேண்டும், நம் தோளில் தட்டி உற்சாகப்படுத்த வேண்டும் என்ற ஏக்கம், ஆதங்கம் மனதிற்குள் இருக்கிறது. ‌ பணப்பிரச்சனை, மனப்பிரச்சனை இதற்கு இடையில் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது, வாழ்க்கை மீது ஒரு சதவீத அளவிலாவது நம்பிக்கையை ஏற்படுத்தும் என உறுதியாக நம்புகிறேன்”என்றார்.

இதனிடையே இந்த நிகழ்வில் வருகை தந்திருந்த பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் படத்தில் இடம்பெற்ற பாடலை நடிகை ரிது வர்மா, நடிகர் அசோக் செல்வன் ஆகியோர் மேடையில் பாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.