Search

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம்

‘ரெளத்திரம்’ பட இயக்குநர் கோகுலின் இரண்டாவது படமிது. காந்திஜியின் பிறந்தநாளன்று படத்தினை வெளியிட தோதாய் படத்தில் ஒரு மெஸ்சேஜும் வைத்துள்ளார்.

பாலா என்பவர் குடித்ததால் விபத்து நேர்கிறது; குமார் என்பவர் குடிக்காமல் இருப்பதால் இரு உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.  

சுமார் மூஞ்சி குமாராக விஜய் சேதுபதி. இன்றைய ட்ரென்டின் படி, பொறுப்பில்லாத இளைஞராக வருகிறார். அவரது ஒரே வேலை, எதிர் வீட்டு குமுதாவை ‘ஹேப்பி’ செய்வதும் குடிப்பதும் தான். படத்தின் கடைசிக் காட்சிகளில் அவர் செய்யும் ரொமான்ஸ் எல்லாம் செம அருமை. இவரும் இவரது அசிஸ்டென்ட் ‘ரொம்ப சுமார் மூஞ்சி’ குமாரும் மதுவிற்காக அலையும் காட்சிகள் எல்லாம் அலப்பறை. அதுவும் விஜய் சேதுபதியின் மனநிலையைச் சொல்லும் ‘ரொம்ப சுமார் மூஞ்சி’ குமாரின் தொடர் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. விஜய் சேதுபதியை முறைப்பதற்கு மட்டும் நந்திதா. எதிர்நீச்சலில் ‘கோச்’ வள்ளியாக வந்தவருக்கும், குமுதாவுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்?

அரவான் படத்திற்கு பிறகு மீண்டும் பசுபதியை, ரொம்ப நாள் பிறகு பார்ப்பது போலிருக்கிறது. அண்ணாச்சியாக நடிக்கும் அவர், ‘லவுட்-ஸ்பீக்கரி’ல் ஃபோனைப் போடுகிறேன் என ‘கட்’ செய்வது, ‘நான் சுகர் பேஷ்ன்டுடா’ என சலித்துக் கொள்வது என அவர் வரும் அனைத்துக் காட்சிகளும் ரசிக்க வைக்கின்றன. அவரின் அல்லக்கையாக வரும் ரோபோ ஷங்கரும் தன் பங்குக்குக் கலக்குகிறார்.

பாலாவாக அஷ்வின். மங்காத்தா படத்தில் இவர் இன்ஸ்பெக்டராக வந்து, கடைசியில் அஜீத்தால் வஞ்சிக்கப்படுவது ஞாபகம் இருக்கலாம். அப்படத்தில் நால்வரில் ஒருவராக வந்தே கவனிக்க வைத்திருப்பார். இப்படத்தில் இரண்டு கதாநாயகர்களில் ஒருவராக வருகிறார். இவருக்கு ஜோடியாக ஸ்வாதி. அஸ்வினின் மலையாளி மேலதிகாரியாக எம்.எஸ்.பாஸ்கர் நகைச்சுவையாளராக அறிமுகமாகி குணசித்திர நடிகராகப் பரிணமிக்கிறார்.

பெயின்ட்டராக வரும் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் வெட்கப்படுவது, பாட்டுப் பாடுவது என தனது உடல் மொழியால் அசத்துகிறார். “ராஜ்ஜ்ஜ்..” என இழுக்கும் தொனியில் ‘ஜாங்கிரி’ மதுமிதாவும் கலக்குகிறார். சூரி தான் படத்தில் ஒட்டாமல் கொஞ்சம் எரிச்சலைக் கிளப்புகிறார்.

சித்தார்த் விபின் இசையில் பாடல்கள் எல்லாம் ரசிக்கும்படி உள்ளன. பாடலின் இடையில், இங்கிலீஷ் ரைம்சுக்கு நடன இயக்குநர் ராஜ சுந்தரம் ஆடுவது ரசிக்க வைக்கிறது. வி.எஸ்.ராகவன் ‘ப்ரே பண்ணுங்கப்பா’ என சொன்னதும் தொடங்கும் ப்ரேயர் சாங் முன்பே ஹிட்டாகி விட்டது. படத்தின் பின்னணி இசை படத்தின் போக்கிற்கு உதவுகிறது. லியோ ஜான் பாலின் படத்தொகுப்பும் 

இயக்குநர் கோகுல். இரத்த தானத்திற்கான அவசியத்தை வலியுறுத்தும் வாசகங்களில் கேமிரா சில நொடிகள் ஃப்ரீஸ் ஆகிறது. எத்தனையோ நகைச்சுவைப் படங்கள் வந்தவண்ணம் உள்ளன. அவையெல்லாம் பொழுதைக் கழிக்க உதவுகின்றனவே தவிர எத்தகைய தாக்கத்தையும் முடிவில் ஏற்படுத்துவதில்லை. அதன் அபத்தங்களோடு ரசித்து விட்டு மறந்துவிடக் கூடியவையாக இருக்கின்றன. இதுவும் அப்படித் தான் என்றாலும்.. முடிவில் ரத்த தானத்தின் அவசியத்தையும், குடிப்பழக்கம் வேண்டாமே என போகிறப் போக்கில் சொல்லும் படமாக உள்ளது.  அதற்காக ‘மெஸ்சேஜ்’ சொல்லும் சீரியஸ் படமென எண்ணிவிட வேண்டாம். படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை படம் மிகக் கலகலப்பாகச் சென்று சுபமாய் முடிகிறது.

மது நாட்டிற்கும் வீட்டிற்கும் உயிருக்கும் கேடு. Say no to drinks 🙂




Leave a Reply