
ஜெய்யும் அஞ்சலியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் ‘பலூன்’. ’70 எம் எம்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் ஆகியோர் தயாரித்து வரும் பலூன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் சினிஷ். வலுவான இளம் திறமையாளர்களை உள்ளடக்கிய பலூன் படக்குழுவினர், கபாலி படத்தின் மேல் இருக்கும் எல்லையற்ற ஆர்வத்தால், வரும் ஜூலை 22 ஆம் தேதி படப்பிடிப்புக்கு விடுமுறை அளித்துள்ளனர்.
“சிறு வயது முதலே, ரஜினி சாரின் படங்களைப் பார்த்து வளர்ந்த நாங்கள் அனைவரும், ஜூலை 22 ஆம் தேதியை ‘கபாலி’ தினமாகவே கொண்டாட முடிவு செய்துவிட்டோம். உலகமெங்கும் கபாலி படத்தின் வருகையைக் கொண்டாடி கொண்டிருக்க, நாங்களும் அதில் இணையப் போகிறாம் என்பதை நினைக்கும் போது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களின் கோரிக்கையை ஏற்று, எங்களுக்கு விடுமுறை அளித்த பலூன் படத்தின் தயாரிப்பாளர்களுக்கு, படக்குழுவினரின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ‘நெருப்புடா’ என்னும் முழக்கத்துடன் நாங்கள் ஆரவாரமாக ரஜினி சாரின் கபாலியைக் கொண்டாட போகிறோம்” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் பலூன் படத்தின் இயக்குனரும், தீவிர ரஜினி ரசிகருமான சினிஷ்.