Search
அதிபர் விமர்சனம்

அதிபர் விமர்சனம்

Athibar Tamil Review

அதிபர் எனும் தலைப்பு தொழிலதிபரைக் குறிக்கிறது. 2002 இல் இருந்து 2008க்குள் நடந்த உண்மைக் கதையின் அடிப்படையில் மசாலா அலங்காரம் பூசி எடுக்கப்பட்ட படம். குறிப்பாக தயாரிப்பாளர் சிவகுமாரின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது.

கனடாவில் இருந்து தொழில் புரிய வரும் ஜீவன், ‘மாடர்ன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ என்ற பெயரில் ஒரு நிறுவனம் தொடங்குகிறார். அவர் மிகவும் நம்பும் ஒருவராலேயே, நிறுவனத்துக்குள் நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை.

படத்தில் நட்சத்திரப் பட்டாளங்களுக்குக் குறைவே இல்லை. வரிசை கட்டி வந்தவண்ணமே உள்ளனர். குறிப்பாக இரண்டாம் பாதியில் சமுத்திரக்கனி தோன்றியதும் படத்தின் சுவாரசியம் இரட்டிப்பு ஆகிறது. துரதிர்ஷ்டவசமாக நாயகன் ஜீவனை விட சமுத்திரக்கனியே மனதில் நிற்கும் கதாபாத்திரமாக உள்ளார். அவர், ‘பாஸு.. பாஸு’ எனப் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கிறது. ஆனால் முதல் பாதியில், மிரட்டலாக அறிமுகமாகும் நந்தாவோ எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாமல் போய் விடுகிறார். வக்கீல் ஈஸ்வராக வரும் ரஞ்சித்தின் தாடியும், தலைமுடியும் மாறுவேடப் போட்டிக்குக் கலந்து கொள்ள வந்தவர் போல் உறுத்துகிறது.

தொய்வாகத் தொடங்கி எரிச்சலடைய வைத்தாலும், கதை தொடங்கியவுடன் படம் விறுவிறுப்பாகிறது. பிலிப் விஜயக்குமாரின் ஒளிப்பதிவு படத்தின் பலம். விக்ரம் செல்வாவின் பாடல்கள் ஈர்க்காவிட்டாலும், குறிப்பாக இரண்டாம் பாதியின் பின்னணி ஒலிப்பதிவு படத்துக்கு வலு சேர்க்கிறது.

சரத்குமார் நாயகனாக நடித்த ‘மாயி’ படத்தை இயக்கிய சூரிய பிரகாஷ்தான் இப்படத்தையும் இயக்கியுள்ளார். ஈஸ்வர் எனும் பாத்திரத்துக்கும், நாயகனுக்கும் நடக்கும் மைண்ட் கேமாக படத்தைக் கொண்டு போயிருந்தால் இன்னும் சுவாரசியமாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு கனல் கண்ணனின் சண்டைக் காட்சிகளை தியாகம் செய்ய வேண்டி வந்திருக்கும் என்ற கவலை காரணமாக இருக்குமோ?