
அக்டோபர் 27. முகேஷ் ஹரானே இறந்த தினம். இன்றோடு நான்காண்டுகள் நிறைவாகிறது. அவர் இறக்கும் பொழுது அவர் வயது 24. திரைப்படங்களில் வரும் நாயகர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர் அல்லர் அவர். இளம் வயதிலேயே வேலைக்குச் சென்று, தனது தம்பியைப் படிக்க வைத்துள்ளார். திணறடிக்கும் ஏழ்மை நிலையிலும், விழிப்புணர்வு விளம்பரங்களுக்கு பணமேதும் வாங்கிக் கொள்ளவில்லை முகேஷ். இன்று நாயகர்களாகத் திரையில் சித்தரிக்கப்படும் கதாபாத்திரங்களை விட மிகவும் உயர்ந்தவர் முகேஷ்.ஓர் ஆண்டுக்கு சுமார் 1,30,000 பேர் இந்தியாவில், வாய் புற்றுநோயால் இறக்கிறார்கள். புகையிலை உபயோகிப்பவர்களுக்கு புற்றுநோயின் தீவிரம் பற்றிய புரிதல் சரியாக இருப்பதில்லை. ‘புற்றுநோய் தானே.. வந்தா பார்த்துக்கலாம்’ என்ற அலட்சியமே மேலோங்கியிருக்கிறது. எதையும் தாங்கிக் கொள்ளலாம் என இளமை தரும் உடல்வலு காரணமாக இருக்கலாம்.
சிகரெட் பிடிப்பவர்களின் அருகில் நிற்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தன்னைப் பற்றியே கவலைப்படாமல் சிகரெட் பிடிப்பவர்களுக்கு, அருகில் இருப்பவர்கள் பற்றி மட்டும் என்ன அக்கறை வந்துவிடப் போகிறது. ஆனால் சமீபத்திய ஆய்வுகள் மேலும் அச்சுறுத்துகின்றன. சிகரெட் பிடிப்பவர்கள் அருகில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்கள் வெளியிடும் புகை குழந்தைகளை எளிதாகப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. புகை சுற்றியுள்ள பொருட்களில் படிந்து, அச்சுறுத்தும் விஷமாக தேங்கி வருகிறது. வழக்கமாக ஒரே அறையில் சிகரெட் பிடிக்கும் நபர்களின் இருப்பிடத்தில் நீங்களே அதை உணரலாம். இங்கு அனைவரும் ஓடாய்த் தேய்வதெல்லாம் அடுத்த தலைமுறையினருக்காகத் தானே! ஆனால் யாரோ மூன்றாம் நபர் சிகரெட் பிடிப்பதாலேயே நம் வீட்டுக் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். சிகரெட் பிடிப்பவர் வீட்டிலுள்ள குழந்தைகளின் நிலைமையைக் கேட்கவும் வேண்டுமா?
வாய் புற்றுநோயால் இறப்பவர்களின் விகிதம் கிராமப்புறங்களில் அதிகமாக உள்ளது. குட்கா, பான்பராக் போன்றவை சிகரெட்டை விட விலை கம்மியாகக் கிடைப்பதுதான் அதற்குக் காரணம். அங்கே படித்தவர்களின் சதவிகிதம் கம்மி என காரணம் சொல்லப்படுகிறது. ஆனால் புகையிலைக்கு அடிமையாவது நாயகத்தன்மையோடு சம்பந்தப்பட்டது என்ற அபத்தமான புரிதல் படித்தவர், படிக்காதவர் என்ற பாகுபாடன்றியே உள்ளது. மிகவும் வருத்துதற்குரிய விடயமிது.
வாய் புற்றுநோய் வந்துவிட்டால்.. சொல்லி மாளாத துன்பங்களை அனுபவிக்க வேண்டி வரும். உதாரணத்திற்கு ஒன்று. உணவை உண்ண முடியாது. வெறும் திரவ ஆகாரம் தான். அதுவும் கழுத்தில் துளையிட்டு, சிறு குழாய் மூலமாக ஊற்றுவார்கள். இது போன்ற கொடுமைகளை அனுபவிக்கவா பெருமிதமாக புகையிலை பொருட்களை உபயோகிக்கிறார்கள்?
இழப்பின் வலியை அனைவரும் வாழ்வின் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உணர்ந்திருப்பார்கள். சிகரெட் பிடிப்பவர்கள் மற்றவர்களுக்கும் தீங்கிழைத்து, அவ்வலியை தன் குடும்பத்தினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கத் தயாராகவுள்ளனர். ஏன்?
தனக்கு நேர்ந்தது பிறருக்கு நேர்ந்து விடக்கூடாது என்ற அக்கறையில் விழிப்புணர்வு விளம்பரங்களில் ஒரு சோக நாயகனாக வாழ்ந்து வருகிறார் முகேஷ்.
முகேஷின் உணர்வுக்கு மதிப்பளிப்போமாக!


