Shadow

கோலா – காவல்துறை அதிகாரியின் ‘போதை தவிர்’

kola-audio-launch

மோத்தி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கோலா. ஒய்வு பெற்ற காவல்துறை அதிகாரி மோத்தி.பா  எழுதி இயக்கியுள்ள படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது,

விழாவில் பேசிய ஸ்டன்ட் மாஸ்டர்  ஜாக்குவார் தங்கம், “கோலா படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான மோத்தி.பா அவர்களுக்கு மிகவும் நன்றி. ஏன் என்றால் அவர் தன் படத்தில் போதையை ஒழிக்க வேண்டும் என்ற கருத்தை கோலா படத்தில் சொல்லியிருக்கிறார். இந்தக் கஞ்சா தண்ணி போன்ற போதைப்பொருட்களை பயன்படுத்துவோர்கள் தான் நிறைய குற்றங்களைச் செய்கிறார்கள். தயவு செய்து நல்ல பழக்கங்களை கைக்கொள்ளுங்கள். கஞ்சா அடித்தால் கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்று சொல்லுகிறார்கள். இப்படி கஞ்சா விற்பவர்களை வெடிகுண்டு வீசி கொலை செய்ய வேண்டும். இவர்களை சட்டம் தண்டிப்பதை விட மக்களே தண்டிக்க வேண்டும்” என்றார்.

 இயக்குநர் மோத்தி.பா, “இந்தக் கோலா படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்று கூறும் விழா தான் இது. இசையமைப்பாளருக்கும், நடனத்தைச் சிறப்பாக அமைத்துத் தந்தவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். மாஸ்டர் தருண் அவர்களுக்கும், மற்றும் ஊடகப் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி. இந்தியாவின் அடையாளமான பாக்யராஜ் அவர்களுக்கும் நன்றி” என்றார்.

இயக்குநர் கே.பாக்யராஜ், “ஷேவிங் பண்ண வந்த ரவுடி, கடைக்காரனிடம், ‘சிராய்ப்பு இல்லாமல் செய்தால் தான் விடுவேன். இல்லையென்றால் வெட்டி விடுவேன்’ என்றானாம். அனைவரும் பயந்தார்கள். ஒரு சிறுவன் தைரியமாக செய்தான். அந்த ரவுடி ஆச்சர்யப்பட்டு சிறுவனிடம், ‘உனக்குப் பயம் இல்லையா?’ ன்று கேட்டான். அதற்குச் சிறுவன் சொன்னான்: ‘சிராய்ப்பு ஆனால் நீங்கள் வெட்ட அரிவாள் எடுக்கும் முன்பாக நான் என் கையில் இருக்கும் கத்தியைப் பயன்படுத்தி விடுவேன்’ என்றார். ஆகத் துணிச்சலுக்கும் வயசுக்கும் கூடச் சம்பந்தமில்லை.

கஞ்சா குடிப்பதைப் பற்றி ஜாக்குவார் தங்கம் கோபப்பட்டார். நானே கஞ்சா நிறைய குடித்திருக்கிறேன். சிகரெட்டில் கலந்து கோயம்பத்தூரில் கொடுத்தார்கள். சில நேரங்களில் கஞ்சா நல்லவே வேலை செய்யும். ஒருநாள் அது கிர்ர்னு ஏறிய பிறகு எல்லோரும் சிரிச்சிக்கிட்டே இருந்தோம். அப்போது தான் யோசித்தேன். ‘லைஃப்ல என்னமோ சாதிக்கணும்னு நினைத்தோமே! ஆனால் இப்படி இருக்கோமே!’ என்று அன்று தான் தோன்றியது புத்தருக்கு போதிமரம் மாதிரி எனக்குப் போதைமரம் தான் புத்தி கொடுத்தது. இப்போது சிகரெட்டையும் விட்டுவிட்டேன்.

தயாரிப்பாளர் மூர்த்தி.பா சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தார். ஒருவர் எனக்கு ‘முந்தானை முடிச்சு படம் தான் பிடிக்கும்’ என்றார். அந்த நேரத்தில் தயாரிப்பாளர் என் காதில் வந்து, ‘எனக்குப் பிடிச்ச படம் சின்னவீடு’ என்றார். அவர் போலீஸ்காரர் என்பதால் வாங்கி தான்  பழக்கம் என்று நினைத்தேன். ஆனால் இவர் எல்லாத்திற்கும் சம்பளத்தைச் சரியாகக் கொடுத்திருக்கிறார். போலீஸ்காரர் கதை எழுதி படம் இயக்கி இருப்பதால் இந்த கோலா படத்தில் நிறைய நல்ல சமாச்சாரங்கள் கண்டிப்பாக இருக்கும்” என்றார்.