
எம்.ஜி.ஆரின் அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்டப் பெரும் திருப்பத்தின் பொழுது வெளியான படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. அவர் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு, அ.தி.மு.க.வைத் துவங்கிய பின், அக்கட்சி கொடியுடன், இப்படம் வெளியானது.
இப்படத்தில், எம்.ஜி.ஆருக்கு, இரட்டை வேடம். விஞ்ஞானியான முருகன், மின்னலைப் பிடித்து, அதை ஆக்கபூர்வப் பணிக்குப் பயன்படுத்த நினைப்பார். அத்திட்டத்தின், ‘பார்முலா’வை வில்லன் கூட்டம், அபகரிக்க முயற்சி செய்யும். எதிரிகளின் இந்த சதித்திட்டத்தை, விஞ்ஞானியின் தம்பியும், புலனாய்வுத் துறை அதிகாரியுமான ராஜூ எப்படி முறியடிக்கிறார் என்பது தான் கதை.
முருகன், ராஜூ என இரண்டு கதாபாத்திரங்களையும் எம்.ஜி.ஆர். ஏற்று நடித்திருப்பார். லதா, மஞ்சுளா, சந்திரகலா என மூன்று கதாநாயகியர். நாடு, நாடாகப் பயணிக்கும் சர்வதேசக் கதையைத் திறமையாகக் கையாண்டு இருப்பார் இயக்குநர் எம்.ஜி.ஆர்.
விஸ்வநாதன் இசையில், கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன் ஆகியோர் பாடல்களை எழுதினர். ‘நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்’, ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’, ‘நிலவு ஒரு பெண்ணாகி’, ‘சிரித்து வாழ வேண்டும்’ உட்பட அனைத்துப் பாடல்களும் பெரும் வெற்றி பெற்றன.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தைப் பார்த்தால், எம்.ஜி.ஆர். எவ்வளவு பெரிய திறமைசாலி என்பது அனைவருக்கும் தெரியும். இப்படம் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் டால்பி அட்மாஸ் ஒலியுடன் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. ரிஷி மூவிஸ் சார்பில் சாய் நாகராஜன் வழங்க, உலகம் முழுவதும் சரோஜா பிக்சர்ஸ் வெளியிட, தமிழகம் முழுவதும் 7 ஜி பிலிம்ஸ் மற்றும் சரோஜா பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து வெளியிடுகிறார்கள்.