Search

நதி – சமூக அவலங்களைச் சாடும் கமர்ஷியல் டிராமா

மாஸ் சினிமாஸ் சார்பில், சாம் ஜோன்ஸ் நடித்து தயாரிக்க, இயக்குநர் K. தாமரைசெல்வன் இயக்கத்தில், காதலையும் நட்பையும் மையமாகக் கொண்டு, சமூக அவலங்களைச் சாடும், ஒரு கமர்ஷியல் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “நதி”. படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, ஜூலை 22 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

யூ-ட்யூப்பில் கோடங்கி எனும் பெயரில் விமர்சனம் செய்யும் நடிகர் வடிவேல் முருகன், “இந்தப் படத்தின் மூலம் கரு. பழனியப்பன் போன்ற ஒரு சகோதரர் எனக்குக் கிடைத்துள்ளார். இயக்குநர் எந்தவித பதட்டமும் இல்லாமல், படத்தை எழுதி இயக்கியுள்ளார்” என்றார்.

இயக்குநர் A. வெங்கடேஷ், “AP International உடன் இந்தப் படத்தை இணைந்து தயாரிப்பாளர் வெளியிடுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கயல் ஆனந்தி திரையில் குடும்பப் பாங்கான பாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இயக்குநர் தாமரைசெல்வன் வேலை பார்க்கும் விதம் இயக்குநர் ஃபாசில் உடைய பாணியில் இருக்கிறது. கோடங்கியின் விமர்சனத்தை நான் விரும்பிப் பார்ப்பேன். இந்தப் படத்தில் அவர் முழுமையாக ஒரு நல்ல பாத்திரத்தில் வருகிறார். படமும் நன்றாக வந்துள்ளது” என்றார்.

நடிகை கயல் ஆனந்தி, “இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து மதுரையில் நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் கதையைக் கேட்கும் போது, இந்தக் கதாபாத்திரத்தை நிச்சயம் செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தேன். சிறந்த கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

இயக்குநர் நடிகர் கரு. பழனியப்பன், “படத்தின் கதையைப் பற்றிக் கூறும் போது, வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று இயக்குநர் தயங்கியபடி கூறினார். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதில் தான் எனக்கு அதிக விருப்பம். வில்லனாக நடிக்கும் போது எப்படி வேண்டுமானாலும் பேச முடியும். நல்லவனாக நடிக்கும் போது அது முடியாது. அதனால் எனக்கு வில்லனாக நடிப்பது பிடிக்கும். இயக்குநர் குழப்பமே இல்லாமல், தெளிவாகப் படத்தை உருவாக்கி முடித்துள்ளார். சின்ன பட்ஜெட்டில் சிறந்த படைப்பை உருவாக்கியுள்ளார். இப்படத்தின் இண்டர்வல் நிச்சயமாக எல்லோரும் ஆச்சர்யப்படும் ஒன்றாக இருக்கும்.

ஒளிப்பதிவாளர் பிரபு அவர்களுடைய பணி படத்தின் கதையை விட்டு நகராமல் இருக்கும். இந்தப் படக்குழு, இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்த படத்தை உடனே உருவாக்க வேண்டும். ஆனந்தி படத்தில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனந்தி உடைய கதாபாத்திரம் இந்தப் படத்திற்கு பிறகு பெரிய அளவில் பேசப்படும். இந்தப் படம் கண்டிப்பாக்க் கவனிக்கப்படும். படத்தில் உள்ள அனைவரும் பாராட்டப்படுவார்கள்” என்றார்.

நடிகரும் தயாரிப்பாளருமான சாம் ஜோன்ஸ், “நான் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் ஆழமாக இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டு இருந்தேன். இயக்குநர் எனக்கு இந்தக் கதை சொன்ன போது, அது எனக்கு மிகவும் பிடித்தது. ஒளிப்பதிவாளர் பிரபு சார் இந்தப் படத்திற்கு முதுகெலும்பாக இருந்தார். அவர் இப்படத்தில் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளார். ஆனந்தி கதையைக் கேட்டவுடன் நடிக்க ஒத்துக் கொண்டார். கரு. பழனியப்பன் சார் இந்தப் படத்திற்குள் வந்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்தின் கதைக்காக முழு ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளனர். படம் மிக நன்றாக வந்துள்ளது” என்றார்.

ஒளிப்பதிவாளர் M.S. பிரபு, “இந்தக் கதையை விட இயக்குநர் கதையைச் சொன்ன விதம், என்னை ஈர்க்கும் வகையில் இருந்தது. இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்த சாம் ஜோன்ஸ்க்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இருவரும் இணைந்து பொறுமையுடன் ஒரு சிறப்பான படத்தை உருவாக்கியுள்ளனர்” என்றார்.

இயக்குநர் தாமரை செல்வன், “இந்தப் படம் ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. நடிகரும் தயாரிப்பாளருமான சாம் ஜோன்ஸும், நானும் இணைந்து சிறந்த படத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில், பல கட்டங்களுக்குப் பிறகு, இந்தத் திரைப்படத்தின் கதையை உருவாக்கினோம். படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நாங்கள் தேடிய பயணமே, ஒரு புது அனுபவமாக இருந்தது. படத்தின் கதாநாயகன் புதுமுகம் என்ற தயக்கம் எதுவும் இல்லாமல், ஆனந்தி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். கரு. பழனியப்பன் கதையைப் புரிந்து கொண்டு இந்தப் படத்திற்குள் வந்தார். படத்தில் பணிபுரிந்த அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் முழு பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். படம் சிறப்பாக வந்துள்ளது” என்றார்.

நடிகர்கள்:

சாம் ஜோன்ஸ்
கயல் ஆனந்தி
கரு. பழனியப்பன்
முனிஷ்காந்த்

தொழில்நுட்பக் குழு:

இயக்குநர் – K.தாமரைசெல்வன்
தயாரிப்பாளர் – சாம் ஜோன்ஸ்
ஒளிப்பதிவு – எம்.எஸ். பிரபு
இசையமைப்பாளர் – திபு நினன் தாமஸ் எடிட்டர்: ஆர்.சுதர்ஷன்
வசனம் – லக்ஷ்மி சரவணகுமார்
கலை – விஜய் தென்னரசு
நடனம் – தினேஷ், விஜயா ராணி
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)