

தமிழ்த் திரைத்துறையில் பல ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் ராஜ்குமார், “PRK Productions” எனும் பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தில், நேர்த்தியான கதைகளைத் தேர்ந்தெடுத்து, அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் பல புதுமையான படைப்புகளை வழங்கும் நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் துவங்கிய இந்தப் புதிய தயாரிப்பு நிறுவனத்தின் துவக்க விழாவில், நடப்பு தமிழ்த் தயாரிப்பு சங்கத்தின் செயல் தலைவர் சத்ய ஜோதி பிலிம்ஸ் திரு. தியாகராஜன், திருமதி செல்வி தியாகராஜன், பெப்சி சங்கத்தின் தலைவர் திரு. ஆர்.கே. செல்வமணி, பெப்சி சங்கத்தின் செயலாளர் திரு. சுவாமிநாதன், பெப்சி சங்கத்தின் துணைத்தலைவர் திரு. மோகன மகேந்திரன் மற்றும் மாமன் படத் தயாரிப்பாளர் திரு. குமார், நடிகர் திரு. யோகிபாபு, இயக்குநர் திரு. சுசீந்திரன், ராட்சசன் பட இயக்குனர் திரு இராம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
முனியாண்டி விலாஸ் உணவகங்களின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவரான தெய்வத்திரு பாண்டியராஜ் அவர்களின் மகன் தான் திரு. ராஜ்குமார். பள்ளி வயது முதலே தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்க வேண்டும் என்ற கனவில் இயங்கி வந்த திரு. ராஜ்குமார், தான் பத்தாவது படிக்கும் பொது, “PRK Productions” எனும் பெயரை உருவாக்கி வைத்துள்ளார். அதை நோக்கிய கனவில், பொறியியல் படிப்பிற்குப் பிறகு, தமிழின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தில், திரு. தியாகராஜன் அவர்களின் ஆசியுடன், தயாரிப்பு மேற்பார்வையாளராக 15 வருடம் பணியாற்றியுள்ளார். தயாரிப்பு நிறுவனத்தின் நுணுக்கங்களை முழுமையாகக் கற்றுக்கொண்டவர், தற்போது புதிய தயாரிப்பு நிறுவனத்தைத் துவங்கியுள்ளார்.
இந்நிறுவனத்தின் முதல் படைப்பு, முன்னணி நட்சத்திர நடிகரின் நடிப்பில், முன்னணி இயக்குநர் இயக்கத்தில், தமிழின் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பில், மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகவுள்ளது. இப்படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.


