
வல்லமை விமர்சனம் | Vallamai review
திறன், பலம், வலிமை, ஆற்றல், சக்தி என தலைப்பைப் பொருள் கொள்ளலாம்.
விவசாயப் பின்னணியையுடைய சரவணனும், அவரது மகள் பூமிகாவும் கல்விக்காகச் சென்னைக்கு வருகிறார்கள். எவரோ சிறுமி பூமிகாவை மயக்கமடையச் செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிடுகின்றனர். அது யாரெனக் கண்டுபிடித்து, தான் அனுபவிக்கும் வலிக்குப் பழி வாங்கவேண்டுமென விரும்புகிறாள் பூமிகா. அக்கொடியவனைச் சரவணனும் பூமிகாவும் எப்படி கண்டுபிடித்து தண்டிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.
சரவணனாக பிரேம்ஜி நடித்துள்ளார். மிகவும் பாவப்பட்டவராக, நடக்கவும் நடிக்கவும் மிகவும் சிரமப்படுபவராக, ஆள் ஒரு மாதிரி ஒடுங்கிப் பரிதவிப்புடனே உள்ளார். சாமர்த்தியமாக அவரைக் காது கேளாதவராகச் சித்தரித்துச் சமாளித்துள்ளார் இயக்குநர் கருப்பையா முருகன்.
கொஞ்சம் பிசகினாலும் சிக்கலாகிவிடும் ஒரு கனமான கதைக்கருவிற்கு, ஆற்றின் மெல்லிய நீரோட்டம் போல் திரைக்கதை அமைத்துள்ளார்...


