

புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் “நாகபந்தம்” ஆகும். இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது. வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பேசிய கலைப்புலி எஸ். தாணு, “நாகபந்தம் படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது, மிகப்பெரிய பிரம்மாண்டம் கண்ணெதிரே தோன்றியது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதன் உழைப்பையும் தரத்தையும் வெளிப்படுத்துகிறது. தயாரிப்பாளர் அபிஷேக் நாமா அவர்கள் இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார். அவருடன் எனக்கு நீண்டகால நட்பு உள்ளது. அன்பின் காரணமாகவே என் வேலைகளை ஒதுக்கிவிட்டு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருக்கிறேன்.
ஒரு சிறிய சம்பவத்தைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் வெளியிட்ட ‘அமுதவல்லி’ திரைப்படத்தின் விளம்பரத்தில், ஒரு நாகப்பாம்பு, ஒரு குழந்தை மற்றும் ‘பாம்பு குழந்தையைக் கொஞ்ச வருகிறதா? கொத்த வருகிறதா?’ என்ற ஒரு வரி வாசகம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அந்த விளம்பரம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
நாகம் என்றாலே மக்களிடையே ஒரு தனி ஈர்ப்பும், நம்பிக்கையும், ஆன்மீகத் தொடர்பும் இருக்கிறது. நாகத்தை மையமாக வைத்து உருவான பல படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நாகக் கன்னிகை, நாக தேவதை கதைகள் முதல் பல படைப்புகள் வரை, நாகத்தின் மீது மக்களுக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு உள்ளது.
அந்த வகையில், ‘நாகபந்தம்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.
தயாரிப்பாளர் A.M.ரத்னம், “தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில், சினிமாவும் தொடர்ந்து புதிய பரிமாணங்களை நோக்கி பயணித்து வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் மீடியாவின் வருகைக்குப் பிறகு, மக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துள்ளது. ஆனால் சில திரைப்படங்கள் மட்டுமே ‘இதை கண்டிப்பாக திரையரங்கில் பார்த்தால்தான் முழு அனுபவம் கிடைக்கும்’ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் ‘நாகபந்தம்’ திரைப்படம் நிச்சயமாக இருக்கும்.
இந்தப் படத்தின் காட்சிப் பிரம்மாண்டம் மிகப்பெரியது. இதைச் சிறிய திரையில் பார்ப்பதை விட, பெரிய திரையில் பார்த்தால்தான் அதன் முழு தாக்கத்தையும் உணர முடியும். ‘நாகபந்தம்’ என்ற தலைப்பைப் பார்த்தவுடனேயே எனக்குத் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் மர்ம அறைகள் நினைவுக்கு வந்தன. குறிப்பாக இன்னும் திறக்கப்படாத அந்தப் புகழ்பெற்ற ‘நாகபந்தம்’ அறைக் குறித்து மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு ஆவலும் மர்மமும் இருந்து வருகிறது. அந்தப் பெயரே இந்தப் படத்தின் மீது தனி ஆர்வத்தை உருவாக்குகிறது” என்றார்.
நடிகர் ஜான் கொக்கேன், “‘நாகபந்தம்’ ஒரு மிகப்பெரிய காட்சிப் பிரம்மாண்டம் கொண்ட திரைப்படம். தற்போது ஓடிடி காலகட்டமாக இருந்தாலும், இப்படிப்பட்ட திரைப்படங்களைச் சிறிய திரையில் முழுமையாக ரசிக்க முடியாது. இந்தப் படத்தைக் கட்டாயம் திரையரங்கின் பெரிய திரையில் பார்த்தால்தான் அதன் உண்மையான அனுபவத்தை உணர முடியும்.
ட்ரெய்லரில் நீங்கள் பார்த்ததுபோல, நாகபந்தம், பிரம்மக் கமலம் மற்றும் அதனைச் சுற்றிய மர்மங்கள் கதையின் மையமாக இருக்கின்றன. நாயகன் விராட் கர்ணா அந்த மர்மத்தைத் தேடும் பயணத்தில் செல்லும்போது, பார்வையாளர்களும் அவருடன் இணைந்து அந்தப் பயணத்தை அனுபவிப்பார்கள். படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் அந்தத் தேடலின் ஒரு பகுதியாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.
நடிகை நபா நடேஷ், “‘நாகபந்தம்’ சாதாரணமான திரைப்படம் அல்ல. நமது வரலாறு, மர்மம், சாகசம், ஆக்சன், திரில்லர் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவம்” என்றார்.
நடிகர் விராட் கர்ணா “இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆன்மிகம் மற்றும் பக்தி சார்ந்த விஷயங்களில் அதிகமாக ஈடுபட ஊக்குவித்து வருகிறார்கள். ஏனெனில் அது மனதிற்கும் உடலுக்கும் அமைதியையும் சக்தியையும் அளிக்கிறது. ‘நாகபந்தம்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவமும் எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை முடித்த பிறகு நான் ஆன்மிக ரீதியாகவும், மனதளவிலும் மிகவும் வலிமையாக உணர்கிறேன்.
இந்தப் படம் இந்தியக் கலாச்சாரம், பாரம்பரியம், தைரியம், கோவில்களின் மரபு மற்றும் நமது தொன்மையான நாகரீகத்தின் பல அம்சங்களைப் பேசுகிறது. நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளைப் புதிய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்தப் படம் இருக்கும்.
‘நாகபந்தம்’ திரைப்படத்தில் நான் ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு அறிமுக நடிகராக இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கதாபாத்திரத்திற்காக நான் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளேன்” என்றார்.
கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரிப்பில் உருவாகியுள்ள “நாகபந்தம்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.

