

கண்ணன் ரவி குழுமம் (KRG) சார்பில் கண்ணன் ரவி மற்றும் தீபக் ரவி தயாரிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில், நட்டி நட்ராஜ் நாயகனாக நடிக்கப் பரபரப்பான பொலிடிகல் காமெடி கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “TN 2026 – தங்க நட்சத்திரம்” ஆகும். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி திரை ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகை ஷ்ரித்தா, “இந்தப் படத்தில் நட்டி சார் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனி உடல் மொழி, தனித்தனி வெளிப்பாடு. ஒரு பாத்திரத்திலிருந்து இன்னொரு பாத்திரத்திற்கு அவர் மாறும் விதம், ஒரு பாத்திரத்தில் ஊற்றிய தண்ணீர் அந்தப் பாத்திரத்தின் வடிவத்தை எடுப்பதுபோல் இருந்தது. அவ்வளவு சிறப்பாக அவர் அனைத்துக் கதாபாத்திரங்களிலும் பொருந்தியுள்ளார் நட்டி சார். இன்று முதல் நான் உங்கள் பெரிய ரசிகை” என்றார்.
நடிகர் இளவரசு, “இந்த படத்தில் நான் ஒரு பாடல் பாடியிருக்கிறேன், ஒரு நடனம் ஆடியிருக்கிறேன், ஒரு சண்டைக் காட்சியிலும் நடித்திருக்கிறேன். இதற்காக பாடல், நடனம், சண்டை ஆகிய துறைகளில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றி. நானும், எம். எஸ். பாஸ்கர் சார், ராமையா சார் மூவரும் இந்த வயதில் பல அனுபவங்களைக் கடந்து வந்தவர்கள். அதனால் போட்டி, பொறாமை போன்றவற்றைத் தாண்டி, ஒரு உணர்ச்சிப்பூர்வமான உறவோடு இந்தப் படத்தில் நடித்துள்ளோம். இயக்குநர் உமாபதி இந்தப் படத்தில் கதை, வசனம், அனைத்திலும் அக்கறையுடன் உழைத்துள்ளார். படம் மிகவும் சுவாரசியமாக உருவாகியுள்ளது. டிரெய்லர் பார்த்த பிறகு பல கேள்விகள் எழுந்திருக்கும். அந்தக் கேள்விகள் இன்னும் அதிகரித்தால், அது எங்களுக்கு மகிழ்ச்சி. இந்தப் படம் பற்றி இன்னும் நிறைய பேச வேண்டியுள்ளது. ஆனால் அதை நீங்கள் திரையரங்கில் பார்த்து அனுபவிக்க வேண்டும் என நினைக்கிறேன்” என்றார்.
நடிகை விஜி சந்திரசேகர், “இந்தப் படம் ஒரு சிறந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. நான் இதுவரை நடித்த எந்தப் படத்திலும் இவ்வளவு மகிழ்ச்சியாக நடித்ததில்லை. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தது. என்னை இந்தக் கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு ராமையா சார் அவர்களுக்கு நன்றி. நட்டி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நான் ‘க்ளூக்கோஸ் மாமி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்தக் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமானதும் சுவாரசியமானதும் ஆகும். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமை கொள்கிறேன்” என்றார்.
தம்பி ராமையா, “இந்தக் கதையை அரசியல் பின்னணியில் உருவாக்கியுள்ளோம். அது ஒரு குடும்ப அனுபவத்திலிருந்து வந்த புரிதலால் உருவானது. அரசியல் என்பது வாழ்க்கையோடு கலந்த ஒரு உண்மை என்பதையும் காட்டுகிறது. ஒரு படத்தை உருவாக்குவது என்பது பொறுப்பும் உணர்ச்சியும் சேர்ந்த ஒன்று. அதில் யாருடைய மனதையும் புண்படுத்தாமல் சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டும். அந்தப் பொறுப்புடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் யாரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. எனக்கு எல்லாக் கட்சியிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். ஒரு விஷயத்தைத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன். மேலோட்டமாக கிடைக்கும் தகவல்களை வைத்து உடனே முடிவுக்கு வர வேண்டாம். இந்தப் படம் யாரையும் புண்படுத்தும் வகையில் எடுக்கப்படவில்லை.
தம்பி ஆதவ் அர்ஜுனா அதைப் புரிந்து கொள்ள வேண்டும். யாரையும் சங்கடப்படுத்தும் நோக்கம் இதில் இல்லை. அதை நீங்கள் படம் பார்த்த பிறகு நிச்சயமாகப் புரிந்துகொள்வீர்கள்” என்றார்.
நடிகர் நட்டி நட்ராஜ், “இயக்குநர் உமாபதி சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் மிகவும் கடின உழைப்பாளி மற்றும் கட்டுப்பாட்டுடன் வேலை வாங்கும் இயக்குனர். இன்னும் சில ஆண்டுகளில் இந்திய அளவில் பெரிய இயக்குநர்களின் பட்டியலில் அவர் இடம்பிடிப்பார் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் நான் நடித்தது ஒரு பெருமை. ஏனெனில் இரண்டு தேசிய விருது பெற்ற நடிகர்களுடன் நான் நடித்திருக்கிறேன்.
தம்பி ராமையா அண்ணா மற்றும் எம்.எஸ். பாஸ்கர் சார், இருவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன்.
இந்தப் படத்தின் கதை கேட்டவுடன் எனக்கு மிகவும் பிடித்தது. அரசியலை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் முயற்சி இது. இவர்களுடன் சேர்ந்து நடித்தது எனக்கு ஒரு ஆசீர்வாதம். இந்தப் படம் யாரையும் குறிவைத்து எடுக்கப்படவில்லை. இது முழுக்க முழுக்க ஒரு பொழுதுபோக்கு படம். முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். அதனால் தயவு செய்து வேறு கோணத்தில் பார்க்காமல், ஒரு நல்ல படமாக பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில், வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தொழில்நுட்பக் குழு:-
திரைக்கதை இயக்கம் – உமாபதி ராமையா
கதை – தம்பி ராமையா
இசை – தர்புகா சிவா
ஒளிப்பதிவு – P.G.முத்தையா
படத்தொகுப்பு – அருள் R. தங்கம்
கலை – NK ராகுல்
சண்டை – மகேஷ் மேத்யூ
நடனம் – சாண்டி, பிரவீன்
தயாரிப்பு மேற்பார்வை – ஶ்ரீநாத் விஸ்வநாதன்
தயாரிப்பு – கண்ணன் ரவி, தீபக் ரவி
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்


