

இயக்குநர் ஸ்ரீ செந்தில், காளிதாஸ் (2019) படத்தை சைக்காலஜிக்கல் த்ரில்லராகக் கொடுத்து சர்ப்ரைஸ் ஹிட் கொடுத்திருந்தார். இப்படத்தை இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லராக ரசிக்கும்படி கொடுத்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், மித்ரா எனும் மூன்று வயது சிறுமி காணாமல் போக, அதை விசாரிக்க வருகிறார் காளிதாஸ். காணாமல் போன சிறுமிக்கு என்னாகிறது என்பதையும், அந்தக் குடியிருப்பு தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் ரகசியங்கள் என்னென்ன என்பதையும் பரபரப்பாகக் கடைசி நொடி வரை தக்கவைத்துள்ளது திரைக்கதை.
மனதில் மிகப் பெரிய வலியுடனும் சினத்துடன் உள்ள ஸ்டீஃபனாக நடித்துள்ளார் அஜய் கார்த்தி. வெறியோடு ஆட்களைக் கொல்லும்பொழுதும், மற்றவர்களை ஊடுருவி அவர் பார்க்கும் பார்வையும், போலீஸ் விசாரணையின் பொழுது அவர் காட்டும் அலட்சியமும் மெளனமும் எரிச்சலை ஏற்படுத்துகின்றன. அவை எல்லாவற்றிற்கும் அவரிடம் சரியானதொரு காரணம் உள்ளன என்ற கிளைக்கதையைத் திணிக்காமல் அழகாகக் கதைக்குள் கொண்டு வந்துள்ளார் ஸ்ரீ செந்தில். சாம் CS-இன் இசை வழக்கம் போல் படத்தின் த்ரில்லர் அம்சத்தைத் தக்கவைக்கப் பெரும் பக்கபலமாக உள்ளது.
கதையில் மூன்று பிரதான பெண் கதபாத்திரங்கள் உள்ளன. மித்ராவின் அம்மா சஞ்சுவாக அபர்ணதி, உதவி ஆணையர் வைஷ்ணவியாக விடுதலை படத்தில் நடித்த பவானிஸ்ரீ, குடியிருப்பு வளாகத்தின் தலைவர் ரூபா சுந்தரியாக சங்கீதா ஆகியோர் நடித்துள்ளனர். மூவருக்குமே கதையை நகர்த்தும் பாத்திரங்களை வழங்கியுள்ளார் கதாசிரியர் அரவிந்தன் ஆனந்த். வழக்கறிஞர் நட்ராஜாகப் பிரகாஷ் ராஜும், கசாப்புக்கடைக்காரர் பாண்டியாவாகக் கிஷோரும் சின்ன வேடத்தில் தோன்றினாலும் மனதில் ஆழமாகப் பதிகின்றனர். அதற்கு முக்கிய காரணம், அவர்கள் கல்வியின் மேன்மையைச் சொல்பவர்களாகவும், உண்மையைக் கண்டறியும் திறன் வாய்த்தவர்களாகவும் உள்ளனர்.
மனிதன் என்பவன் தேவதைக்குக் (Angels) கொஞ்சம் கீழேவாகவும், துர்தேவதைக்கு (Demons) கொஞ்சம் உள்ளான் என்ற வாசகத்துடன் படம் தொடங்குகிறது. மனிதன் நேர்க்கோட்டில் பதிலைத் தேடிப் போய் கிளைகளில் இருக்கும் உண்மைகளைக் காணாமல் போய்விடுகிறான் என்ற பிரகாஷ் ராஜின் வசனத்தைப் படத்தின் ஒரு வரிக்கதை என்று கூடச் சொல்லலாம். ஒரு முடிவு கிடைத்த பின்பும், உண்மையைத் தேடிக் கண்டடைவதில் தீவிரமாகவும் முனைப்பாகவும் உள்ளார் காளிதாஸ். காளிதாஸ் பாத்திரத்தில் மிக அழகாகத் தன்னைப் பொருத்திக் கொண்டுள்ளார் பரத். போலீஸ் நாயகனை ஒரு அதிரடி சாகசக்காரனாகக் காட்டாமல், சிஸ்டத்துக்குள் போலீஸ் செய்றபடுவதற்கு இருக்கும் சிக்கல்களை எதார்த்தமாகச் சுட்டிக் காட்டி ரசிக்க வைக்கிறார் ஸ்ரீசெந்தில். முக்கியமாக, புத்தாண்டின் முதல்நாள் அன்று கூடுதல் உதவி கேட்டுத் துணை ஆணையர் வைஷ்ணவி ஃபோன் செய்யும் காட்சியில் திரையரங்கில் விசில் சத்தம் கேட்கிறது. அதனால் பரத் கதாபாத்திரத்தின் மேல் கூடுதல் மரியாதையும் ஏற்படுகிறது. அதை மேலும் அதிகமாக்கும் வகையில், க்ளைமேக்ஸில் எதிர்பாராத திருப்பத்தை அளித்துப் பார்வையாளர்கள் உறைய வைப்பதுதான் இப்படத்தின் உண்மையான வெற்றி.


