
உலகிலுள்ள எல்லா மனிதர்களும் ஏதோவொரு வகையில் முட்டாள்களே!! அப்படிச் சில மூடர்கள் கூடும் இடத்தை தான் மூடர் கூடம் என்று தலைப்பாக்கியுள்ளார் இயக்குநர் நவீன்.
சிறையில் சந்திக்கும் நால்வர், வெளியில் வந்ததும் ஒரு வீட்டைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர். பின் என்ன நடந்தது என்பது தான் கதை.

சென்ட்ராயன். படம் இவரை நம்பி தான் எடுக்கப்பட்டிருக்கிறதோ என சந்தேகம் கொள்ளும்படியாக அசத்தியுள்ளார். பொல்லாதவன் படத்தில் பைக் திருடுபவராகவும், ரெளத்திரம் படத்தில் வில்லனாகவும், சுண்டாட்டம் படத்தில் நாயகனின் நண்பனாகவும் கலக்கியிருப்பார். பள்ளி பருவத்தில் தனக்கு கிடைத்த தண்டனையை, திருட போன வீட்டில் அனைவருக்கும் தருவது சுவாரசியம். அனைவருமே புதுமுக நடிகர்கள் என்பதால், அதிக ரிஸ்க் இல்லாமல் பெரும்பாலான காட்சிகளையே இவருக்கே வைத்துள்ளனர் போலும். முக்கியமாக ஓவியாவைப் பார்த்து மாறும் இவரது முக பாவனைகளை சொல்லலாம்.
‘ஜாப் எத்திக்ஸ்’ என பந்தாவாய் வந்து கழிப்பறையில் சிக்கும் திருடன், பம்பாய் தாவூத் சென்னையில் தொடங்கும் கிளையின் நிர்வாகி, ஐஸ்க்ரீம் வேண்டுமென ஃபோனை அட்டென்ட் செய்து கேட்கும் சிறுமி, ஊரை விட்டு ஓடி வரும் குபேரன், வட சென்னையை கன்ட்ரோலில் வைத்திருக்கும் ‘ரெவுடி’யும் அவரது ஆட்களும், துபாயில் செட்டிலாகவிருக்கும் சிட் ஃபன்ட் அதிபர், அவரது குடும்பம், வீட்டிற்கு யார் வந்தாலும் பயந்து பதுங்கும் ‘டைகர்’ நாய் என படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். இதில் பிரதான கதாபாத்திரங்கள் ஐவருக்கும், ‘டைகர்’ நாய்க்கும், பொம்மை ஒன்றிற்கும் ஃப்ளாஷ்-பேக் காட்சிகள் இடையிடையில் வருகிறது. இந்த சோதனை முயற்சி ரசிக்கும்படி இருந்தாலும், படத்தின் மையக் கதையை விட்டு விலகுவதால் சலிப்பு எழுவதை தவிர்க்க முடியவில்லை. சார்லி-சாப்ளின் பாணி கருப்பு-வெள்ளை பேசும்படம், அனிமேஷன் காட்சிகள் என ஃப்ளாஷ்-பேக் காட்சிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணி. இதையெல்லாம் தவிர்த்திருந்தால் படம் ‘சூது கவ்வும்’ போன்று முழு நீள காமெடிப் படமாக வந்திருக்கும்.
