
கருப்பாய் இருக்கிறோமென்ற தாழ்வு மனப்பான்மையில் சிக்கித் தவிக்கும் பாவாடை, தனக்கொரு துணையைத் தேடிக் கொள்ள ஃபேஸ்புக்கில் போலியான அடையாளங்களுடன் கிஷோர் குமார் என்ற பெயரில் ஃப்ரொஃபைல் ஒன்றைத் தொடங்குகிறான். அவனது எண்ணம் ஈடேறி அவனுக்கொரு காதலி கிடைத்தாளா இல்லையா என்பதுதான் வண்ண ஜிகினாவின் கதை.
கால் டாக்ஸி ட்ரைவர் பாவாடையாக விஜய் வசந்த். கதையின் நாயகனாக கச்சிதமாகப் பொருந்துகிறார். ஏஞ்சல் பிரியாவாக சானியா தாரா. காரணமேயின்றிச் சிரித்துக் கொண்டேயிருக்கிறார். வில்லனே தேவைப்படாத கதையில், கொதிக்கும் கொப்பறையில் தள்ளியது போன்ற ரியாக்ஷனுடன் படம் நெடுகே பொருந்தாமல் வருகிறார் ஆன்சன் பால்.
படம் எதைப் பற்றிப் பேச விழைகிறதோ, அதற்கு எதிர் திசையில் சென்று முடிகிறது. ஆனால் சுபமாய் முடிவது ஆறுதலான விஷயம். ‘கருப்பாக உள்ளவர்கள், சிவப்பாக உள்ளவர்களை விட எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்லர்’ என்பதுதான் படம் சொல்ல வரும் நீதி. ஆனால், க்ளைமேக்ஸில் படம், ‘உன் குறையோடு ஏத்துக்கிறதுதான் உண்மையான லவ்’ என்று படம் முடிகிறது. கருப்பாய் இருப்பது ஒரு குறையா?
படத்தின் முக்கியமானதொரு கதாபாத்திரமாக ஃபேஸ்புக் வருகிறது. காதலர் கிடைக்க, ஃபேஸ்புக்கில் அக்கெளண்ட் தொடங்கி விட்டாலே போதும் என்பதுபோல் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதே போல், ஏஞ்சல் பிரியாவின் புகைப்படத்தை உபயோகித்து, ஃபேஸ்புக்கில் கருகமணி யாரையோ காதலிக்கும் விஷயம் தெரிய வந்தவுடன், ஏஞ்சல் பிரியா பதற்றமடையாமல் உள்ளார். என்ன கொடுமை சார் இது?
தொடர் பாடல்கள் படத்தோடு ஒட்ட விடாமல் இம்சிக்கிறது. மலை முகடில் நின்று பாவாடையும், கருகமணியும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் காட்சிகள் கலகலப்பாக உள்ளது. கருகமணியாக ஸ்ரீதேவி நடித்துள்ளார். தற்கொலை செய்து கொள்ள வந்துவிட்டு, அவ்ர் செய்யும் அழிச்சாட்டியங்கள் ரசிக்க வைக்கின்றன. இன்னொரு ஆறுதலான விஷயம், இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான படத்தின் நீளம்.