

மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை ஃபிக்ஸ் செய்து மைக்கேலாருக்கு ட்ரிப்யூட் செய்ய நினைத்துள்ளது இப்படக்குழு. படத்தில் நாயகன் ராப் பாடகர் என்பதே அதற்குக் காரணம்! மேலும் பாடல்கள் சமூக மாற்றத்திற்கும் பங்களிக்கும் என்றும் இயக்குநர் நாராயணன் பா நம்பியிருக்கிறார்.
படத்தின் கதை, நாயகனின் ராப் பாடல் மோகத்தில் தான் துவங்கிறது. ராப் பாடல் போட்டியில் எதிராளியைச் சுலபமாக வெல்கிறார் நாயகன் அர்ஜுன் பிரபாகரன். உடனே அவரை ஒரு இசை நிறுவனம் தங்கள் நிறுவனத்திற்குப் பாடுவதற்கு புக் செய்கிறார்கள். ‘நட்சத்திர ஜன்னல்’ பாடலில் வரும் சூரிய வம்சத்து சின்ராசு போல “டக்” என வளர்கிறார் நாயகன். நிற்க!
இந்த வளர்ச்சிக்கு இடையில் அவருக்கு ஒரு காதலும் வருகிறது. சுப்பிரமணிய சிவா நடத்தும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் நாயகி ஆராத்யா மீது காதல் கொள்கிறார். காதல், இசை எனப் பயணிக்கும் நாயகன் வாழ்வில் இடியென ஒரு பிரச்சனை சுப்பிரமணிய சிவா ரூபத்தில் வருகிறது. அது என்ன பிரச்சனை என்பதும், நாயகன் தன் கலையால் அதை எப்படி எதிர்கொண்டார் என்பதுமே படத்தின் கதை.
நாயகன் அர்ஜுன் பிரகாபரன் ஓடுகிறார், பாடுகிறாரே ஒழிய நடிக்க மாட்டேன் என அடம்பிடிக்கிறார். ஹீரோயின் ஆராத்யா ஓரளவு சமாளிக்கக் கற்றுக் கொண்டு எமோஷ்னல் காட்சிகளில் ஒப்பேற்றியுள்ளார். சுப்பிரமணிய சிவா தனியார் பள்ளியின் கோரமுக முதலாளியாக அசத்தியுள்ளார். சில காட்சிகளில் மிகையாக தோன்றினாலும் துருத்தலாக இல்லை.
ஜீவா தன் இசையால் ராப் பாடல்களை ஓரளவு நன்றாக வடிவமைத்துள்ளார். பின்னணி இசை படத்திற்கு எந்த உதவியும் செய்யவில்லை. படத்தின் காட்சிகளும் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. ஒளிப்பதிவாளர் தன்னால் முடிந்த எல்லா முயற்சியையும் போட்டிருந்தாலும், விஷுவலாக அதன் பலன் முழுமையாக எட்டப்படவில்லை.
இயக்குநர் கருத்தாக ஒன்றைச் சொல்ல முடிவெடுத்துவிட்டு, கதையாக வேறோன்றை உருவாக்கியுள்ளார். அதனால் படத்தில் ஏகப்பட்ட எமோஷ்னல் குழப்பங்கள். பள்ளிச் சிறுமிகள் கைகளிலும் இன்று போதைப்பொருள் வந்துவிட்டது என்ற எச்சரிக்கை அலாரத்தை மட்டுமே படத்தில் பாராட்டலாம்.
– வெண்பா தமிழ்


