
ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான ‘பேண்ட் பஜா பராட்’ படத்தை தமிழ் ரசிகர்களின் ரசனைக்கேற்ப மாற்றங்கள் செய்து தமிழில் ‘ஆஹா கல்யாணம்’ என்ற பெயரில் யஷ்ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இயக்குநர் விஷ்ணுவர்தனிடம் உதவியாளராக பணியாற்றிய கோகுல் கிருஷ்ணா இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். அவர் வெளியிட்டிருக்கும் காதலர் தின வாழ்த்து செய்தியில் தனது முதல் படத்தின் மேல் உள்ள காதல் திருமண பந்தம் போல நீடித்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார். “படத்தின் முதல் பிரதியைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ் ரசிகர்களை குறிப்பாக இளைஞர்களை கவர்ந்திழுக்கும் அத்தனை அம்சங்களும் சிறப்பாக வந்திருக்கின்றது” என்று கூறியுள்ளார்.
மேலும், “சக்தியாக நானியும், ஸ்ருதியாக வாணியும் கலக்கி இருக்கிறார்கள். ஒவ்வொரு ஃப்ரேமிலும் இவர்களின் இளமை குறும்பு கொப்பளித்துக் கொண்டே இருக்கும். இது போன்ற ஒரு காதல் கதையின் வெற்றிக்கு இளமையான நல்ல நாயகன், நாயகி, இனிமையான இசை, கண்ணைக் கவரும் காட்சி அமைப்பு, மற்றும் இளமையான பாடல் வரிகள் அடிப்படை உத்திரவாதம். இந்த அனைத்து அம்சங்களும் அமையப் பெற்ற இந்தப் படத்தை இயக்குவது எனது அதிர்ஷ்டமே!
இதற்கு எல்லாம் மேல், என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு படம் வாய்பளித்த ‘யஷ் ராஜ் films ‘ நிறுவனத்தினர் , படத்தைப் பார்த்துப் பாராட்டியதுதான் எனக்குக் கிடைத்த மாபெரும் வரம். புதிய இயக்குநரான நான் வெற்றி பெற்றால் பல்வேறு புதிய இயக்குநர்களுக்கும் வாய்ப்புகள் பெருகும் என்பதால் என் பொறுப்புணர்ச்சியும் அதிகமாகிறது ” எனக் கூறியுள்ளார்.

