Search

பாபநாசம் சிவன்

மாயலோகத்தில்..

பாபநாசம் சிவன்பாபநாசம் சிவன் சினிமாவுக்கு எழுதிக் கொண்டிருந்த கவிஞர் என்கிற வகையில் அறியப்படக்கூடாது. அவரைத் தமிழ்த் தியாகய்யர் எனக் கூறுவார்கள். சினிமாவுக்காக அல்லாமல் ஏராளமான தமிழ்ப்பாடல்களை எழுதி, அவை சினிமாவில் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே இவரையும் ஒரு இலக்கியவாதி வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். தெலுங்கில் எழுதிய தியாகய்யர் போல் தமிழில் ஏராளமான பக்திப் பாடல்களை இயற்றி இன்றளவும் அவைகள் கச்சேரி மேடைகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

பாடல்களை எழுதும்போதே அவற்றிற்கான மெட்டுக்களையும் அமைத்துவிடும் திறன் இவருக்கு உண்டு. அவைகள் யாவும் கர்நாடக சங்கீத மெட்டில் அமைந்திருந்ததால் சினிமா இசையமைப்பாளர்களுக்கு எவ்வித சிரமும் இருந்ததில்லை. ‘தாராபுரம் தாம்பரம் உன் தலையில் கனகாம்பரம்’ என்பது போன்ற கவித்துவம் நிறைந்த பாடல்களெல்லாம் இவருக்கு எழுத வராது.

தஞ்சை மாவட்டம் போலகம் எனும் ஊரில் 1890இல் பிறந்த இவரது இயற்பெயர் ராமய்யா. சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர். இவரது இளமைக் காலம் திருவனந்தபுரத்தில் கழிந்திருக்கிறது. ஏழை பிரமாணர்கள் சாப்பிடுவதற்கு வசதியாக அக்காலத்தில் திருவிதாங்கூர் மகாராஜாவின் ஏற்பாட்டில் பல ஊர்களில் இலவச அன்னதானம் நடைபெறும். இந்த ஏற்பாட்டின்படி தினமும் ஏழை பிராமணர்கள் இலவசமாகச் சாப்பிட முடியும். அப்படி அன்னதானம் அளிக்கப்படும் இடங்களுக்கு ஊட்டுப்புரை என்கிற பெயர் உண்டு. இங்கு தான் ராமய்யாவுக்கு சாப்பாடு. எனவே திருவனந்தபுரம் சென்றதில் சாப்பாடு கவலையில்லாமல் கழிந்தது.

திருவனந்தபுரத்தில் கரமனை என்கிற பகுதியில் வசித்து வந்தார். அங்கிருந்த பஜனை கோஷ்டி ஒன்றில் பாடி வந்தார். பாலக்காடு அருகே நூருணி என்கிற ஒரு ஊர். இந்த ஊரைச் சேர்ந்த பாகவதர் ஒருவரின் நட்பு இங்கே கிடைத்தது. அது இவரது இசை ஞானத்தை வளர்க்க உதவியாக இருந்தது.

இந்நேரம் தாயாரும் காலமாகி விடுகிறார். எனவே, தனது தமையன் பணிபுரிந்து வந்த தஞ்சை மாவட்டம் பாபநாசம் வந்து சேரவேண்டியதாயிற்று. இங்கிருக்கும் போதுதான் திருமணமாயிற்று.

1939 ஆம் ஆண்டு சென்னையில் குடியேறினார். வீணை எஸ் பாலச்சந்தரின் தகப்பனார் சுந்தரம் அய்யரின் நட்பு கிடைத்தது. சுந்தரம் அய்யரின் மூத்தமகன் எஸ் ராஜம் (ஓவியர்) எஸ் பாலச்சந்தர், மகள் எஸ் ஜெயலட்சுமி மற்றும் சுந்தரம் அய்யர் ஆகியோர் நடித்த ‘சீதா கல்யாணம்’ என்கிற திரைப்படத்திற்கு தன் முதல் பாடல் இயற்றினார் பாபநாசம் சிவன். ஆண்டு 1934.

மைலாப்பூரில் வாசம். ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் நடைபெறும் பஜனை கோஷ்டியில் பிரதானப் பாடகர். மாட வீதியைச் சுற்றி வரும் இந்த பஜனை கோஷ்டி. கற்பகாம்பாள் பேரில் பல பாடல்களை இயற்றிப் பாடியிருக்கிறார்.

பாபநாசம் சிவன் தனது குருவாக பிரபல சங்கீத வித்வான் கோனேரிராஜபுரம் வைத்யநாதய்யரையே கருதி வந்திருப்பதாக ஒரு பேட்டியில் அவரது மகள் திருமதி ருக்மணி ரமணி அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சிவனின் சகோதரர் ராஜகோபாலய்யரின் புதல்வி மறைந்த எம்ஜியாரின் துணைவியார் வி.என். ஜானகி என்கிற பதிவுகள் உள்ளன.

1934ல் சினிமாவுக்குப் பாடல் எழுத ஆரம்பித்த பாபநாசம் சிவன் 1950 வரையிலும் தீவிரமாக இயங்கியிருக்கிறார். எம் கே தியாராஜ பாகவதர், பி யூ சின்னப்பா, ஹொன்னப்ப பாகவதர், டி ஆர் மகாலிங்கம் போன்றோரின் பல படங்களுக்கு பாடல்கள் இயற்றி அவைகள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. 1936ல் வெளிவந்த எம் கே தியாகராஜபாகவதர் நடித்த ‘சத்திய சீலன்’ படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றன.

இவரது கீர்த்தனைகள் பலவும் புத்தக உருவில் வெளிவந்திருக்கிறது. சிந்து பைரவி ராகத்தில் இவர் இயற்றி, ஆலத்தூர் சகோதர்களால் பாடப்பட்டு, இசைத்தட்டாக வெளிவந்த பாடல் ‘சந்திரசேகரா ஈசா’. இப்பாடல் இன்றும் கூட பல மேடைகளில் கர்நாடக இசை வித்வான்களால் பாடப்படுகிறது. இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் கண்களிலிருந்து கண்ணீர் பெருகுவதைத் தவிர்க்கவே முடிவதில்லை.

மிகவும் சிறப்பான சில திரைப்படப்பாடல்களை இப்போது நினைவு கூரலாம்.

உனைக்கண்டு மயங்காத பேர்களுண்டோ – அசோக்குமார்

பூமியில் மானிட ஜென்மம் அடைந்தும் ஓர் – அசோக்குமார்

மன்மத லீலையை வென்றார் உண்டோ – ஹரிதாஸ்

அன்னையும் தந்தையும் தானே – ஹரிதாஸ்

ராதே உனக்குக் கோபம் ஆகாதடி – சிந்தாமணி

மனமே கணமும் மறவாதே – சாவித்திரி

வதனமே சந்திரபிம்பமோ – சிவகவி

மறைவாய் புதைத்த ஓடு – திருநீலகண்டர்

இவற்றைப்போல் இன்னும் எண்ணற்ற பாடல்கள் – இப்பாடல்களெல்லாம் அக்காலத்தில் தமிழகத்தில் ஒலிக்காத இடமே கிடையாது. ஏறத்தாழ 100 படங்களுக்கு மேல் பாடல்கள் இயற்றியிருக்கிறார்.

இவைகள் தவிர தமிழின் முக்கியமான சில படங்களில் நடித்த பெருமையும் இவருக்கு உண்டு. 1939இல் சேவாசதனம். 1943இல் குபேரகுசேலா. இதில் குசேலராக மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார். காலத்தால் அழிக்க முடியாத திரைக்காவியம் ‘தியாகபூமி’. இப்படத்தில் நடித்த பாபநாசம் சிவன் அவர்களைத் திரையுலகம் மறக்க இயலாது.

1961 ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது அளித்து கௌரவித்தது. காமகோடி பீடம் இவருக்கு ‘சிவபுண்ணியகானமணி’ என்கிற பட்டத்தை வழங்கியது. தமிழ் சினிமா உள்ள காலம் முழுவதம் பாபநாசம் சிவனின் பெருமை திரையுலகில் நிரந்தரமாக இருந்து வரும்.

பாபநாசம் சிவனின் பாடல்கள் இடம் பெற்ற சில முக்கியமான படங்கள்:

அசோக்குமார் – 1941
சாவித்திரி – 1941
மதனகாமராஜன் – 1941
நந்தனார் – 1942
சிவகவி – 1943
ஜகதலப்பிரதாபன் – 1944
மீரா – 1945
வால்மீகி – 1946
குண்டலகேசி – 1947
அபிமன்யு – 1948
ஞானசௌந்தரி – 1948
சக்ரதாரி – 1948
தேவமனோகரி – 1949
ரத்னகுமார் – 1949
அம்பிகாபதி – 1957
புதுவாழ்வு – 1957
செஞ்சுலட்சுமி – 1958

நடித்த படங்கள்:

1936 – பக்த குசேலா
1939 – தியாகபூமி
1938 – சேவாசதனம்
1943 – குபேரகுசேலா

– கிருஷ்ணன் வெங்கடாசலம்