

‘எட்டுத்திக்கும் மதயானை’ படத்தில், அழிக்க முடியாத சிங்கமாக நடிக்கிறார் சத்யா. இவர் ஆர்யாவின் தம்பி. ஏற்கெனவே ‘புத்தகம்’ படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். எனினும் இந்தப் படத்திற்காக அதிகம் மெனக்கெட்டு நடித்திருக்கிறாராம். ஜாலியான நபராக முதற்பாதியில் வருபவர் இரண்டாம் பாதியில் காவல்துறை அதிகாரியாக முறுக்கேறி வருகிறார். இந்தப் படம், சத்யாவிற்குள் இருக்கும் நடிகனை அடையாளம் காட்டும் என நம்பிக்கை தெரிவித்தார் இயக்குநரும் தயாரிப்பாளருமான கே.எஸ்.தங்கசாமி.
‘ராட்டினம் பிக்சர்ஸ்’ என தனது முதற்படத்தின் பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார் கே.எஸ்.தங்கசாமி. இந்த நிறுவனத்தின் எல்லாப் படங்களிலும் தன்னுடைய சிறு பங்களிப்பு ஏதாவதொரு வகையில் இருக்கும் என்றார் ராட்டினம் படத்தின் நாயகன் லகுபரன். இந்தப் படத்தில் ஐந்து நிமிடம்தான் தோன்றினாலும், படம் முழுவதும் நிறைந்திருப்பது போன்ற பாவனையைத் தரும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் லகுபரன். “இது நான் மட்டுமே பண்ணக் கூடிய ரோல்” என நம்பிக்கையுடன் தெரிவித்தவர், “நீங்க நல்ல ஸ்கூலுக்குதான் வந்திருக்கீங்க” என நாயகன் சத்யாவுக்கும், நாயகி ஸ்ரீமுகிக்கும் நம்பிக்கை அளித்தார். தெலுங்கு நடிகையான ஸ்ரீமுகிக்கு இது முதல் தமிழ்ப்படம்.
“பொதுவா பாடல்கள் எல்லாம் டைரக்டரின் டேஸ்ட்க்குதான் படத்தில் இருக்கும். ஆனா இந்தப் படத்தில் எனக்கு முழுச் சுதந்திரம் கொடுத்தார் டைரக்டர். சுதந்திரம்னா எப்படின்னா.. ட்யூன் போட்டு எப்படியிருக்குன்னு அவரைக் கேட்பேன். உங்களுக்குப் பிடிச்சிருக்குன்னா கேட்பார். பிடிச்சிருக்குன்னு நான் சொன்னதும், அந்தப் பாட்டு ஓக்கே ஆகிடும். எந்த மாற்றமும் அதன்பின் சொல்ல மாட்டார்” என்றார் படத்தின் இசையமைப்பாளரான மனுரமேசன். பிடிச்சிருக்கு, ராட்டினம் ஆகிய படங்களைத் தொடர்ந்து, மனுரமேசன் இசையமைக்கும் மூன்றாவது படம் ‘எட்டுத்திக்கும் மதயானை’. ஒன்பது பாட்டுகள் இருக்கும் இப்படத்தில் ஏழு புதுக்குரல்களை அறிமுகப்படுத்தியுள்ளார் மனுரமேசன்.
எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா, அம்பை ஷண்முகம், மீனாட்சி சுந்தரம், கே.எஸ்.தங்கசாமி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இதில் அவ்வை ஷண்முகம் என்பவர் நடிக்க வந்தவர். நாட்டுப்புறப் பாடல்கள் அறிந்து வைத்திருந்த அவருக்கு இயக்குநர் பாடல் எழுத வாய்ப்பளித்துள்ளார். ராட்டினத்தைத் தொடர்ந்து இப்படத்திலும் பாடியுள்ளார் அனூப் ஷங்கர். மேலும் இப்படத்தில் அவரது மனைவி விஜி விஸ்வநாதனும் பாடகியாக அறிமுகமாகியுள்ளார்.
இந்தப் படத்தின் ஹைலைட், சின்னச் சின்ன பாத்திரங்களில் நடித்துவந்த சாம் ஆண்டர்சன் நாயகியின் நண்பராக முழுப்படத்திலும் நடித்துள்ளார் என்பதே!


