
பத்து செகண்ட் முத்தம் – தமிழ் நாவல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களைத் தீவிரமாக படித்து வந்த ரசிகர்கள் இந்தத் தலைப்பை மிக நெருக்கமாக உணர்வார்கள். இந்தத் தலைப்பினைத் தனது படத்திற்குச் சூட்டியுள்ளார் இயக்குநர் வின்செண்ட் செல்வா.
அவர் கூறும்போது, “சுஜாதா சாரின் பத்து செகண்ட் முத்தம் நாவலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சவாலான, மர்மங்களைக் கண்டுபிடிப்பதைச் சொல்வது தான். அந்தத் தலைப்பு என்னை ஈர்த்தது, என் படத்தின் நாயகியும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சில மர்மங்களைக் கண்டுபிடிப்பார், அதனால் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். இதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. இது என்னுடைய புது ஸ்கிரிப்ட்.
ஒரு முக்கியமான கதாப்பத்திரத்தில் நடிக்கும் தேசிய விருது பெற்ற தம்பி ராமையா தவிர்த்து மொத்தமும் புதுமுக நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் வின்செண்ட் செல்வா. அதைப் பற்றிக் கூறும்போது, “இந்தக் கதையை எழுதி முடித்தவுடனே புதுமுகங்கள் தான் பொருத்தமாக இருப்பார்கள் என்று முடிவு செய்தேன். அதனால் புதுமுகங்களாக நடிக்க வைத்தேன். பெண் சாதிக்க நினைத்த விஷயம் வன்முறைக்கு வழி வகுக்கிறது என்ற விஷயத்தை பற்றிப் பேசுகிறது. படம் அதிவேகமாக இருக்கும். படத்தில் பாடல்கள் இல்லை. பின்னணி இசை மட்டுமே உள்ளது.
புது முகங்கள் கீதா மற்றும் சரிஷ் சேர்ந்து நடிக்க , ‘மிஸ்டர் இந்தியா’ ஸ்ரீனிவாசன் வில்லனாக நடிக்க, பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். கதை, வசனம் ரூபன் எழுத, சான் லோகேஷ் படத்தொகுப்பில், வெங்கடேஷ் ஒளிப்பதிவில் படம் உருவாகியிருக்கிறது.
வாகமான், ஹைதராபாத், கொடைக்கானலில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை லக்ஷ்மி டாக்கீஸ் தயாரித்திருக்கிறது. பத்து செகண்ட் முத்தம் என்ற தலைப்பு நம்மை பலவாறு யோசிக்க வைத்து, ஒரு முன்முடிவுக்கு கொண்டு வரும். புத்தகத்தின் அட்டையை மட்டும் வைத்து, அதை மதிப்பிடக் கூடாது. அது போலத்தான் படத்தின் தலைப்பை வைத்தும் மதிப்பிடக் கூடாது. படத்திற்குள் பல்வேறு மர்ம அவிழ்ப்புகள் காத்திருக்கின்றன.