Shadow

ஆதித்ய வர்மா: விக்ரம் துருவுக்காற்றும் நன்றி

Vikram-and-Dhruv

துருவ் விக்ரம் நடித்த ‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த ஆதித்ய வர்மா. தமிழ்த் திரையுலகில் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகரான சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகராக கால் பதிக்கிறார். கிரிசாயா இயக்கிய இந்தப படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த், அன்புதாசன் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் கிரிசாயா பேசுகையில்,” நான் பல இயக்குனர்களுக்கு உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளேன். ஆனால் எனக்கு முதல் அங்கீகாரம் தமிழ்த் திரைத் துறையில் தான் கிடைத்துள்ளது. தமிழ் மொழிக்கும், தமிழ்த் திரையுலகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். யார் பெஸ்ட் எனக் கேட்கிறார்கள். விஜய் தேவரகொண்டா, ஷாகித் கபூர் இருவரையும் விட  துருவ் விக்ரம் தான் அல்டிமேட். ஏனெனில் அதிக பேஷனோடும் டெடிகேஷனோடும் பணியாற்றியுள்ளார்” என்று கூறினார்.

இசையமைப்பாளர் ரதன் பேசுகையில், “என் பெயர் வித்தியாசமாக இருந்ததை வைத்து, என் தாய் மொழி தெலுங்கு என்று பலர் நினைத்தனர். ஆனால் நான் பச்சைத் தமிழன். இந்த மேடையில் நான் இருப்பதற்கு காரணம் நடிகர் விக்ரம் தான். தொழில்நுட்பக் கலைஞர்களை ஊக்குவிப்பதிலும், மரியாதை தருவதிலும் விக்ரமிற்கு நிகர் அவர் மட்டுமே” என்றார்.

நடிகை பிரியா ஆனந்த் பேசுகையில், “எஸ்ரா மூலம் மலையாளத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு முகேஷ் மேத்தாவிற்கு நன்றி. நான் இங்கிலீஷ் விங்லீஷ் திரைப்படத்தில், நடிகை ஸ்ரீதேவி உடன் பணிபுரிந்தபோது, அவர் ஒரு அம்மாவாக இருப்பதைக் கண்டேன். அதே போல், ஆதித்ய வர்மாவில் பணிபுரிந்த போது, விக்ரம் அவர்கள் அக்கறையுள்ள அப்பாவாக இருப்பதைக் உணர்ந்தேன்” என்று கூறினார். “துருவ் உடன் பணிபுரிவது சிறப்பாக இருந்தது, மேலும் ஆதித்யா வர்மா, அர்ஜுன் ரெட்டி மற்றும்,
மேலும், கபீர் சிங் படங்கள் போல் இல்லாமல் மிகவும்  புதியாக இருக்கும்” என்றார் பிரியா ஆனந்த்.

நாயகன் துருவ் விக்ரம், “நான் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உரைகளை வழங்கினேன். ஆனால் இந்த விழா சற்று கூடுதல் சிறப்பு, காரணம் என் குடும்பம் இங்குள்ளது. எனது குடும்பத்தினால்தான் நான் இன்று இங்கே இருக்கிறேன். அவர்களின் ஆதரவு இல்லாவிட்டால் நிச்சயம் இங்கு இருந்திருக்க மாட்டேன்.

இந்தப் படத்தில் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வந்த குழுவிற்கு நன்றி. தனக்கு ஆதரவளித்த தனது தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவுக்கும் அவரது இசையமைப்பாளர் ரதனுக்கும் ஒரு பாடல் பாடியதற்கும் நன்றி” என்றார்.

பின் தனது தந்தை நடிகர் விக்ரம் பற்றி பேசுகையில், “அப்பாவைப் பற்றிச் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. இந்தப் படத்திற்கான அவரது அர்ப்பணிப்பு 100 சதவீதம். என் அப்பா ஒரு நல்ல நடிகர் என்பதை விட அக்கறையும் அன்பும் அதிகம் உள்ள தந்தை என்பது எனக்குத் தெரியும்” என்றார் நெகிழ்ச்சியுடன்.

விக்ரம் தனது மகனுடன் மேடையில் சேர்ந்து பேசுகையில், “துருவைப் போல பேச எனக்குத் தெரியாது. எனது 12 ஆம் வகுப்பு முடிவுகளுக்காகக் காத்திருக்கும்போதோ அல்லது சேது திரைப்படம் வெளியீட்டிற்காகக் காத்திருக்கும்போதோ நான் ஒருபோதும் பதற்றமாக இருந்ததில்லை. இன்று மட்டுமல்ல, இப்போது சில காலமாக நான் பதற்றமாக இருக்கிறேன்.

துருவ் என்னவாகப் போகிறார் என்பது அவரது விருப்பத்திற்கு விட்டோம். நடிக்கிறேன் என்றதும்.மிகவும்.மகிழ்ச்சியாக இருந்தது. அதற்கு ஒரு முக்கியமான கதை தேவை. அது தான் இளமையான அர்ஜுன் ரெட்டி. தயாரிப்பாளர் முகேஷ் மேத்தாவுக்கு துருவைத் தேர்ந்தெடுத்ததற்கும், அவர் மீது நம்பிக்கை வைத்ததற்கும் நன்றி. துருவின் டப்ஸ்மாஷைக் கண்டார். இந்தப் பாத்திரத்தில் துருவை நடிக்க வைக்க என்னை அணுகினார். இயக்குநர் கிரீசாயா மற்றும் இணை இயக்குனர் ஷரியா இல்லாமல், இந்த படம் சாத்தியமில்லை.

ஒளிப்பதிவாளர் ரவி கே. சந்திரனுக்கும் நன்றி தெரிவித்ததோடு, அவர்கள் ஒரு கட்டத்தில் ஒரு அறையைப் பகிர்ந்துகொண்டதையும் நினைவு கூர்ந்தார். இன்று, அவர் இந்தியாவின் சிறந்த டி.ஓ.பி.களில் ஒருவர். எங்கள் கனவின் காரணமாக நாங்கள் இங்கு வந்துள்ளோம். அதைத்தான் நான் துருவிடம் சொன்னேன். உங்கள் கனவுகளைப் பின்பற்றுங்கள்” என்றார்.

அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்த நடிகர் விக்ரம், “நான் என் மகனுக்கு கொடுக்கும் ஒரே மரபு என் ரசிகர்கள் தான். அந்த காதல் தானாகவே வருகிறது” என்றார்.

திரையுலகில், விக்ரமை விட வேறெவருக்கும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் வலி தரும் ரணம் பற்றித் தெரிய வாய்ப்பில்லை. தன் மகனுக்கு அப்படியொரு துன்பம் நேர்ந்து விடக்கூடாதெனப் பார்த்துப் பார்த்து ‘ஆதித்ய வர்மா’வின் உருவாக்கத்தில் அதீத கவனம் செலுத்தியுள்ளார் விக்ரம்.

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.