Shadow

Tourist Family | “கலை என்பது மகிழ்ச்சியிலிருந்து பிறக்கிறது” – ஷான் ரோல்டன்

சசிகுமார், சிம்ரன் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்புப் பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார்.

தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இவ்விழாவில் பேசிய இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், ”பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது திரைப்படத்தை இயக்குவது தான் லட்சியம் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு புள்ளிக்குப் பிறகு நான் யாரிடமும் பணியாற்றாமல் கதை எழுதத் தொடங்கினேன். நான் எழுதிய கதையை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் தயாரிப்பாளர்கள் கேட்டனர். கதையைக் கேட்ட பிறகு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்கள் மகேஷ், யுவராஜ் ஆகியோருக்கு என் முதல் நன்றி. படத்தின் முதல் பாதி கதையைக் கேட்டதும் தயாரிப்பாளர் யுவராஜ் இப்படத்தை உருவாக்குவோம் என நம்பிக்கை அளித்தார். அந்தத் தருணம் அற்புதமானது. இப்படத்திற்கு சசிகுமார் தான் ஹீரோ என நிச்சயித்துக் கொண்டு அவரைச் சந்தித்து கதை சொல்லப் போனேன். கதையை அவரிடம் சொல்லும் போது அவர் எந்த ரியாக்ஷனையும் காண்பிக்கவில்லை. அதன் பிறகு நான் சற்று சோர்வடைந்தேன். அன்று மாலை தயாரிப்பாளர் யுவராஜ் ஃபோன் செய்து சசிகுமார் சாருக்குக் கதை பிடித்து விட்டது எனச் சொன்னார். அப்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

இப்படத்தில் குழுவாக இணைந்து பணியாற்றுவதற்குச் சிறப்பான தொழில்நுட்பக் கலைஞர்களைத்தான் தயாரிப்பாளர்கள் வழங்கினார்கள். அதில் முதன்மையானவர் ஷான் ரோல்டன். அவரின் இசை இல்லை என்றால் இந்தப் படம் இல்லை. இந்தப் படத்தின் மூலம் எனக்குப் பாராட்டு கிடைத்தால், அதில் 50 சதவீதம் ஷான் ரோல்டனைத்தான் சாரும். அந்த அளவிற்கு இந்தப் படத்தில் அவர் கடினமாக உழைத்திருக்கிறார். மோகன் ராஜனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் சிலிர்ப்பானது. ‘முகை மழை’ என்ற வார்த்தைக்கு அவர்தான் பொருள் சொல்லிப் புரிய வைத்தார். ஷான் ரோல்டன், மோகன் ராஜன் ஆகிய இருவரிடமிருந்து நிறைய விசயங்களைக் கற்றுக் கொண்டேன். சிம்ரன் மேடம் போன்ற அனுபவம் மிக்க நட்சத்திரத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.‌ மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ் ஆகிய இருவரும் இப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ”இந்த இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மூன்றாவது படத்தில் இணைந்து பணியாற்றிருக்கிறேன். இந்தப் பயணத்தின் போது சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் நிறைய நடந்தது.‌ அதனால் முதலில் இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோரும் என்னிடம் எப்போது நம்பர் ஒன் ஆக வரப்போகிறீர்கள் எனக் கேட்கிறார்கள். நான் அதற்காக வரவில்லை.‌ நல்ல படைப்புகளுக்கு இசையை வழங்கி அதனை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது அதன் மூலமாகக் கிடைக்கும் நல்ல விசயங்கள் தான் என்னுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

திடீரென்று உயரத்திற்குச் சென்று விட்டால், அந்த உயரத்தில் நின்று கொண்டு, அந்த உயரத்தைத் தக்க வைப்பது என்பது கடினமான செயல்.‌ பலர் பல ஐடியாக்களைச் சொல்வார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை இசை இந்தச் சமூகத்திற்கு எப்படி பலன் அளிக்க வேண்டும். எந்த மாதிரியான இசையைச் சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்பது போன்ற சிந்தனையைக் கொண்டவன் நான். அந்த வகையில் நான் இதுவரை என்னுடைய சினிமா இசைப்பயணத்தில் சந்தித்தத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் இந்தத் தருணத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல நல்ல படங்களில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன்.

என்னுடைய நண்பரும் இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர்மான விஜய் இப்படத்தின் கதையைக் கேளுங்கள் என்று சொன்னார். பொதுவாக நான் கதையைக் கேட்பதைத் தவிர்த்து விடுவேன். திரைக்கதையை வழங்கி விடுங்கள். நான் வாசித்துத் தெரிந்து கொள்கிறேன் என்று சொல்லிவிடுவேன். திரைக்கதையை வாசிக்கும் போது அந்தத் திரைக்கதையில் இசைக்கான வேலை என்ன என்பது தெரிந்துவிடும். ஏனெனில் சில கதாபாத்திரங்களில் மன ஓட்டத்தை இசையால் சொல்லிவிட முடியும்.

இருந்தாலும் இப்படத்தின் இயக்குநர் அபி கதையை நான் ஒரு முறை சொல்கிறேன் கேளுங்கள் என்றார். கதையை இரண்டு மணி நேரம் சொன்னார். கதையைச் சொல்லும்போது திரையில் காட்சிகளாக இப்படித்தான் தோன்றும் என்ற விசுவலை உண்டாக்கினார். அவர் கதை சொன்ன விதத்தைப் பார்த்து வியந்து போனேன். இந்தப் படத்தின் கதையும் வித்தியாசமாக இருக்கும்.

இப்போதுள்ள சூழலில் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்றால் அதில் நல்ல கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும். ஒரு டிராமா இருக்க வேண்டும். குடும்ப மதிப்பீடுகள் இருக்க வேண்டும் என பல விசயங்கள் உண்டு. இதனை அனுபவமிக்க இயக்குநர்களுக்கு இயல்பானது. ஆனால் அபி போன்ற ஒரு புதுமுக இயக்குநருக்கு, இத்தகைய ஒரு பொறுப்புணர்ச்சி இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன். ஒரு கட்டமைப்புக்குள் இயங்குவது என்பது வேறு. ஒரு இயக்குநராக என்னுடைய குரல் இது என வெளிப்படுத்துவது வேறு. ஆனால் இயக்குநர் அபி தன் நிலைப்பாட்டைத் தெளிவாகச் சொன்னார். இந்தப் படம் என்னைச் சிந்திக்க வைத்தது. இதற்காக உங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் பணியாற்றியதை நான் ஆசீர்வாதமாகவே கருதுகிறேன்.

சசிகுமாரை இயக்குநராகவும் நடிகராகவும் பல கோணங்களில் ரசித்திருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இணைந்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். பாடலாசிரியர் மோகன் ராஜன் என்னுடைய இனிய நண்பராக அறிமுகமானதற்கும் அவருடைய ஈசன் படத்தில் இடம்பெற்ற பாடல் தான். அதற்காகவும் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியைச் சொல்கிறேன்.‌ சசிகுமாரின் நடிப்பு இந்தப் படத்தில் ஸ்பெஷலாக இருக்கும். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பை நான் மிகவும் ரசித்தேன். மகிழ்ந்தேன்.

பாடலாசிரியர் மோகன் ராஜன், அவருடைய தமிழ் இந்தக் கால இளைஞர்களுக்கு அவசியமானது. புதுமை என்பது ஏற்கெனவே இருந்ததன் தொடர்ச்சி தான். தமிழ்த்திரையுலகில் பணியாற்றுகிறோம். பாடலில் தமிழுக்கு இடமில்லை என்றால் எப்படி? இது போன்ற விசயத்தில் என்னைப்போல் உறுதியாக இருந்து பாடலில் தமிழை இடம்பெறச் செய்வதில் அவருக்கும் பங்கு உண்டு. நாங்கள் தங்கிலீஷிலும் பாடல் எழுதுவதுண்டு. இருந்தாலும் தமிழிலும் பாடல்கள் இடம்பெற வேண்டும். தமிழ் மொழியைக் காதில் கேட்க வேண்டும். ஏனெனில் தமிழ் ஒரு செம்மொழி. அவரும் நானும் சந்தித்துப் பேசத் தொடங்கினால், நேரம் செல்வதே தெரியாது. மகிழ்ச்சி நீடிக்கும்.

கலை என்பது மகிழ்ச்சியிலிருந்து தான் பிறக்கிறது. கலைஞர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் அவர்களிடமிருந்து பிறக்கும் கலையும் மகிழ்ச்சியாக இருக்கும். கலை என்பது உட்கிரகித்தல் தான். ஒத்த சிந்தனை உள்ளவர்கள் இணையும்போது தான் நல்ல படைப்பு கிடைக்கும். இப்படத்தில் நடித்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தை நீங்கள் தியேட்டரில் நன்றாக அனுபவித்து ரசிப்பீர்கள்.

இங்குக் குடும்பத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை பழைய விசயமாகப் பேசுகிறார்கள். இது தவறு. குடும்பங்கள் தான் நல்ல விசயங்களை நினைவுப்படுத்தும். என் குடும்பம் இல்லை என்றால் நான் இந்தத் தொழிலில் இருக்க முடியாது.‌ சில பேர் ‘குடும்பம் தானே தடையாக இருக்கிறது’ என்பார்கள். ஆனால் குடும்பம் தான் நமக்கு பக்கபலமாக இருக்கிறது. நீங்கள் தவறு செய்தால் முதலில் கேள்வி கேட்பது குடும்பம் தான். அதே தருணத்தில் நீங்கள் வீழ்ச்சி அடையும் போது உங்களை கை தூக்கி விடுவதும் குடும்பம் தான். அதனால் குடும்ப்ப படங்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும். குடும்பங்களில் சினிமாவின் தாக்கம் அதிகம். அதனால் குடும்பத்தைப் பற்றிய சினிமாக்களின் எண்ணிக்கை குறையக்கூடாது. அந்த வகையில் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெற்றி பெற வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

நாம் கொரிய நாட்டுத் திரைப்படங்களை பார்த்து ரசிக்கிறோம். எந்த மாதிரியான கொரியன் படங்களைப் பார்த்து ரசிக்கிறோம் என்பதைப் பாருங்கள். மொழி என்ற எல்லையைக் கடந்து மனித குடும்பத்திடம் பேசும் படங்களைத்தான் பார்த்து ரசிக்கிறோம். அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமிலி தமிழ் படமா என்று கேட்டால், ஆமாம் தமிழ் படம் தான். அதையும் கடந்து நம் மனித குடும்பத்திற்குத் தேவையான அழகான கொண்டாடப்பட வேண்டிய கொண்டாட்டமான அன்புச் செய்தியைச் சொல்லப் போகும் சிறந்த படமாக இருக்கும்” என்றார்.