Shadow

ஏ.ஆர்.ரஹ்மானின் மாயாஜாலத்தில் கோப்ரா

‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ் சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்தியேக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தின் நாயகன் சீயான் விக்ரம், அவரது வாரிசும், நடிகருமான துருவ் விக்ரம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பாடலாசிரியர் தாமரை ஆகியோருடன் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ‘கோப்ரா’ படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும், ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் மற்றும் அவரது குழுவினர் மேடையில் பாடி, படத்தின் பாடல்களை அறிமுகப்படுத்தி, ரசிகர்களை உற்சாகமடைய செய்தனர்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து, ”இமைக்கா நொடிகள் படம் வெளியாவதற்கு முன் தயாரிப்பாளர் லலித் குமார் என்னை அழைத்து, ‘சீயான் விக்ரம் அவர்களின் கால்ஷீட் இருக்கிறது. அவர்களை வைத்துப் படமொன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். பணியாற்ற இயலுமா?’ எனக் கேட்டார். எப்படி என் மீது அவருக்கு நம்பிக்கை ஏற்பட்டது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கான உயரத்தை, நான் கடக்க வேண்டிய உயரத்தை, அவர் நிர்ணயித்தார். அப்போது அவர் ஒரு விஷயத்தைச் சொன்னார். அதனை என்னுடைய பெற்றோர்கள் கூடச் சொல்லி இருக்க மாட்டார்கள். செய்திருக்க மாட்டார்கள். அதாவது என்னுடைய பெற்றோர்களே படத்தைத் தயாரித்திருந்தாலும் இந்த அளவிற்குச் செலவழித்திருக்கமாட்டார்கள். ஆனால் தயாரிப்பாளர் லலித்குமார் என் மீதும், என்னுடைய குழுவினர் மீதும், அபார நம்பிக்கை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் ‘கோப்ரா’வை உருவாக்கி இருக்கிறார்.

‘படத்தின் இசைக்காக ரஹ்மானைக் கேட்கலாமா?’ என கேட்டார். அவர் என்னை ஏதோ ‘பிராங்க் பண்ணுகிறார்’ என்று எண்ணி, நானும் சரியென்றேன். சில தினங்கள் கழித்து, ‘ரகுமானை அவர்களது வீட்டில் சந்தித்து கதையைச் சொல்லுங்கள்’ எனச் சொன்னார். எனக்கோ அவரைச் சந்தித்து அவருடன் ஒரே ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை மட்டும் இருந்தது. கதையை விவரிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அவரை அவரது வீட்டில் சந்தித்த உடன், ‘கதையைச் சொல்லத் தயாரா?’ என கேட்டார். நான், ‘உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். எடுத்துக் கொள்ளலாமா?’ எனக் கேட்டேன். பிறகு கதையை விவரிக்கத் தொடங்கினேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது. இசையமைக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு ஐந்து பாடல்கள் ‘கோப்ரா’விற்காக வழங்கி இருக்கிறார். ஒவ்வொன்றும் அற்புதமானது. அவருடன் இணைந்து பணியாற்றிய ஒவ்வொரு தருணங்களும் மறக்க இயலாதவை. அவரின் பேரன்பைக் கண்டு வியந்திருக்கிறேன். பின்னணி இசையில் நீங்கள் நிகழ்த்தி இருக்கும் மாயாஜாலத் தருணத்திற்காகக் காத்திருக்கிறேன்” என்றார்.

விக்ரம், “பல ஆண்டுகளுக்கு முன் ‘சோழா டீ’ என்ற ஒரு விளம்பரத்தில் நடித்தேன். அதில் நான் ஒரு சோழராஜனாக நடித்தேன். அதற்கு திலீப் என்று ஒரு இளைஞன் இசையமைத்தார். ஆனால் இன்று அதே ஆதித்ய கரிகாலனாக, மிகப்பெரும் வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருக்கிறேன். அப்போது திலீப்பாக இருந்தவர், தற்போது ஏஆர்.ரகுமானாக மாறி இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இருக்கிறார்.

நானும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றிருக்கிறேன். சில தருணங்களில் நானும் ஆஸ்கார் விருதைப் பெறவேண்டும் என்று நினைத்திருக்கிறேன். இதற்குக் காரணம் ஏ.ஆர். ரஹ்மான் சார் தான். இங்கிருந்து பணியாற்றினாலும் ஆஸ்காரை வெல்லலாம் என நிரூபித்தவர்.

நமக்குள் ஒரு கனவு இருந்தால், ஒரு லட்சியம் இருந்தால், அதற்காகக் கடினமாக உழைத்தால், யாராக இருந்தாலும் மிகப் பெரிய உயரத்தை எட்ட முடியும். நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவிற்கான எல்லையைத் தொட முடியும். இதற்கு ஏ ஆர் ரகுமான் சிறந்த உதாரணம். இவர் இந்திய நாட்டின் பெருமை. வாழும் சகாப்தம். லிவிங் லெஜன்ட். அவருடைய இசைக்கு அனைவரையும் போல் நானும் ஒரு ரசிகன். அவர் ‘கோப்ரா’ படத்தில் தன்னுடைய பங்களிப்பை வழங்கியதற்காக, அவருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் சிக்கலான காட்சி அமைப்புகள், நுட்பமான கதாபாத்திர உணர்வுகள், இதனை ஏ.ஆர்.ரகுமான் அவர்களை தவிர வேறு யாராலும் இசையால் நிறைவடைய செய்ய இயலாது என இயக்குநர் அஜய் ஒவ்வொரு முறையும் என்னிடம் ரகுமானை பற்றி சொல்லிக் கொண்டே இருப்பார்” என்றார்.