

JB Films சார்பில் தயாரிப்பாளர் P.ரகு தயாரிப்பில், இயக்குநர் R.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி அழகான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் ‘லவ் சப்ஸ்கிரைப் ஷேர்’ ஆகும். வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநர் சரண், “இந்தப் படத்தில் எனக்கு ஒரு பாடலாசிரியராகப் (Lyric Writer) பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு முன், என் இயக்கத்தில் உருவான வட்டாரம் படத்தில் இடம்பெற்ற ‘யார் தருவார் இந்த அரியாசனம்?’ என்ற பாடலை நான் எழுதியிருந்தேன். அதன் பிறகு தொடர்ந்து பாடல்கள் எழுதும் வாய்ப்பு அமையவில்லை. காரணம், என் படங்களில் பெரும்பாலும் வைரமுத்து அவர்களே பாடல்களை எழுதுவார்.
இந்தப் படத்தின் இயக்குநரை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் மிகுந்த சுறுசுறுப்பும், தெளிவான சிந்தனையும் கொண்ட இளம் படைப்பாளி. இசை மற்றும் சினிமா உலகின் பல முக்கிய ஆளுமைகளுடன் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது. அதனால் அவரிடம் ஒரு தெளிவான கலை நோக்கு (Vision) இருக்கிறது. ஒரு கட்டத்தில், அவர் என்னிடம், ‘இன்றைய காலத்திற்கேற்ற, ஒரு பாடல் வேண்டும்’ என்று கேட்டார். அதனை நான் ஒரு சிறந்த வாய்ப்பாக எடுத்துக் கொண்டு இந்தப் பாடலை எழுதினேன்.
இந்தப் பாடல், இன்றைய சமூகச் சூழ்நிலையை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் பின்னணியில் ஒரு வரலாற்றுச் சாயலையும் கொண்டிருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக, 1900களில் சென்னை உருவாகிய காலகட்டத்தில், குறிப்பாக பிளாக் டவுன் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட சொற்கள், அவற்றின் அர்த்தங்கள் மற்றும் அகராதி குறிப்புகளை ஆராய்ச்சி செய்தேன். அந்தக் காலத்துச் சொற்களைப் பாடலின் பின்னணியில் இணைத்தால் தனித்துவமான அழகு கிடைக்கும் என்பதால், அந்த ஆய்வின் அடிப்படையில் இந்தப் பாடலை உருவாக்கினேன்” என்றார்.
இயக்குநர் முருகன் மகாலட்சுமி, “இந்த மேடையில் நிற்கும் போது, என்னுடைய சினிமா பயணத்திற்குத் துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாகக் கேப்டன் விஜயகாந்த், பிரேமலதா மேடம் இருவரும் தான் இந்த நிலைக்கு நான் வரக் காரணமாக இருந்தவர்கள். அவர்கள் இல்லையெனில் இன்று நான் இங்கு நிற்பது சாத்தியமில்லை.
சின்ன வயதில் ஊரில் டெய்லர் வேலை பார்த்துக்கொண்டே நாடகங்கள், கதைகள் எழுதத் தொடங்கினேன். அந்த கனவுக்குத் தைரியம் கொடுத்து என்னைச் சென்னைக்கு அனுப்பிய என் தந்தைக்கு நான் என்றும் கடமைப்பட்டவன். கேப்டன் ஆபிஸிலிருந்து தான் என் திரைப் பயணம் தொடங்கியது. வழிகாட்டி, ஊக்கம் கொடுத்த பல மூத்த கலைஞர்களுக்கும் என் நன்றி” என்றார்.
இப்படத்தின் டீசர், சமூக வலைத்தளங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் வெளியாகி, குறுகிய நேரத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ட்ரெய்லரில் இடம்பெறும் காட்சிகள், கதாபாத்திர அறிமுகங்கள், பரபரப்பான எடிட்டிங் மற்றும் இசை இணைந்து, கல்லூரிப் பின்னணியில் ஒரு அழகான காதல் கமர்ஷியல் படமாக இருக்கும் என்பதை உறுதி செய்கிறது.
தொழில்நுட்பக் குழு:-
இயக்கம் – R. மகாலட்சுமி முருகன்
தயாரிப்பு – P. ரகு
ஒளிப்பதிவு – NS.சதீஷ் குமார்
இசை – அஷ்வமித்ரா
படத்தொகுப்பு – ஸ்ரீகாந்த் NB
கலை – ராஜினி சேகர்
சண்டை – கலைமாமணி தளபதி தினேஷ்
உடை வடிவமைப்பு – L.முருகன்
ஒப்பனை – RK
கதை & வசனம் – அசோக் அமிர்தராஜ்
பாடல் வரிகள் – சினேகன், அருண் பாரதி, மணி அமுதவாணன், இயக்குநர் சரண்
நடனம் – தினா, கிருஷ்ணா
ப்ரோமோ பாடல் – அகத் மகேந்திரன்
SFX – பிரவீன் ராஜ்
விளம்பர வடிவமைப்பு – பவன்
VFX & DI – வைட்டி லோட்டஸ்
கலர் கிரேடிங் – ரகுராமன்L
இறுதி ஒலிசேர்ப்பு – ராஜேஷ் (Jgee Studios)
ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூடிவ் – எஸ். ஜெயகார் விஸ்வநாதன்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)


