Shadow

தணிக்கை அதிகாரியைக் கன்னாபின்னாவெனக் கண்டிக்கும் தியா

Kannaa Pinnaa director protest Censor board officer Mathiyazhagan

‘கன்னா பின்னா’ படத்தின் இயக்குநர் தியா, ‘நாளைய இயக்குனர்’ குறும்படப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர். இந்தப் படத்தை இயக்கியுள்ளதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார். திருமணம் செய்தால் அது அழகான பெண்ணைத்தான், திருமணம் செய்துகொள்வேன் என அழகான பெண்களைத் தேடி அல்லோலப்படும் நாயகனின் கதைதான் இந்த ‘கன்னா பின்னா’.

இதை அக்மார்க் காமெடிப் படத்தை இயக்கியுள்ள தியா தனது படத்திற்கு உரிய சென்சார் சான்றிதழ் பெறப் போராடி வருகிறார்.

“ஜனரஞ்சகமான காமெடிப் படத்தையே நான் இயக்கியுள்ளேன். அதுவும் சென்சார் விதிகளுக்கு உட்பட்டுத்தான். ஆனால் தணிக்கை அதிகாரியான மதியழகன், இந்தப் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் தான் தருவேன் எனக் கூறியதோடு, விளக்கம் கேட்ட என்னை அவமானப்படுத்தி வெளியே நிற்கவைத்துவிட்டு, படத்தின் தயாரிப்பாளரிடம் பேரம் பேசுகிறார்.

தணிக்கை என்கிற அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு சினிமாவை அழிக்க வந்த விஷக்கிருமி என்று அதிகாரி மதியழகனை, சொன்னால் அதுதான் சரியான வார்த்தையாக இருக்கும். நியாயமான என்னுடைய எந்தக் கேள்விகளுக்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. காரணம் ஒருதலைபட்சமாகவே அவர் நடந்துகொள்கிறார்.

அதனால் எனக்கு நியாயம் கேட்டும், தணிக்கை அதிகாரி மதியழகனின் இந்த அராஜாகப் போக்கைக் கண்டித்தும் நாளை காலை 10 மணியளவில் சாஸ்திரி பவன் முன்பாக உண்ணாவிரதம் இருக்கப்போகிறேன். இந்த உண்ணாவிரதத்துக்காக கமிஷ்னரிடம் அனுமதி கேட்டும், எனக்குக் கிடைக்கவில்லை.

இதுபற்றி தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவரும், திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குநரும், ஸ்டண்ட் மாஸ்டருமான ஜாக்குவார் தங்கத்திடம் பேசினேன். அவரும் இந்த உண்ணாவிரதத்துக்கு தனது ஆதரவைத் தந்துள்ளார். நாளை காலை அவரது தலைமையில் தான் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ள இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி ஜாக்குவார் தங்கம் கூறியதாவது, “இயக்குநர் தியா சொல்வது நூற்றுக்கு நூறு சரி. அவர் மட்டுமல்ல, சிறிய படத் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பலரும் தணிக்கை அதிகாரி மதியழகனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான படங்கள் ரிலீசாகாமல் முடங்கியுள்ளன. அவ்வளவு ஏன் நான் எடுத்திருக்கும் படத்தின் ட்ரெய்லரில் சிறுவர்கள் நம் தேசிய கொடியைப் பிடித்தபடி நிற்கும் காட்சி இருப்பதால், அதை காரணம் காட்டி சென்சார் சான்றிதழ் தர மறுத்துவிட்டார்.

நம் சிறுவர்கள், நம் தேசியக் கொடியைப் பிடிக்காமல் பாகிஸ்தான் தேசிய கொடியையா பிடிக்க முடியும்? அந்த அளவுக்கு தணிக்கை அதிகாரி மதியழகன் எதேச்சதிகாரப் போக்குடன் செயல்படுகிறார். சிறிய பட்ஜெட் படங்களே வரக்கூடாது என அவர் நினைக்கிறார். பெரிய படங்களுக்கு மட்டும் ஆதரவாக நடந்துகொள்கிறார். இந்தநிலைக்கு ஒரு முடிவுகட்ட நாங்களும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்கிறேன்” எனக் கூறியுள்ளார்.