

தனது காதலி அனு எனும் அனுபமாவைத் தேடிச் சென்னைக்கு மாற்றலாகி வருகிறார் தீரன். ஒரு குடியிருப்பு வளாகத்தில், அவரது நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் வீட்டில் தங்குகிறார். அங்கு குடி வந்ததில் இருந்து, மரணத்தைப் பற்றிய கனவுகளாக வந்து தீரன் தூக்கமின்றி அலைக்கழிக்கப்படுகிறார். தனது தூக்கமின்மைக்கும், தன்னைச் சுற்றி நிகழும் அமானுஷ்ய சங்கதிகளுக்கும், காணாமல் போய்விட்ட தனது காதலி அனுபமாவிற்கும் ஏதோ தொடர்பிருப்பதாக உணர்கிறார் தீரன். தீரனின் தேடல் தொடங்கி முடியுமிடமாக அக்குடியிருப்பின் நான்காவது மாடி உள்ளது. அமானுஷ்ய புதிர் அவிழ்ந்து தீரன் எதிர்கொள்ளும் சவால்களே படத்தின் மீதிக் கதை.
படத்திற்குள் ஒரு நல்ல திகிலான குறும்படம் ரசிக்கும் படி வருகிறது. பார்க்கிங்கிற்குப் படியிறங்கும் ஆதித்யா கதிர், மொட்டை மாடியில் தனியாகப் பார்க் செய்யப்பட்டுள்ள காரிடம் வந்து சேருகிறார். இப்படி சிறு சிறு சுவாரசியங்கள் படம் நெடுகே உள்ளன.
வில்லன் விஸ்வநாதனாக இயக்குநர் சுப்ரமணிய சிவா நடித்துள்ளார். DNA படத்தில் வருவது போல் ஒரு வலுவான கதாபாத்திரம். மூன்றாவது தளத்தில் வசிக்கும் ஸ்வேதாவாக தீப்ஷிகா நடித்துள்ளார். ஆனால் கதையின் நாயகியாக அனுபமாவாக நடித்துள்ள பவித்ரா அரவிந்த் தான். பொறுப்பற்று செலவு செய்யும் நாயகன் மீது கோபப்படுவதாகட்டும், தனக்கென்ற ஒரு வீட்டைக் கைக்காசு அனைத்தையும் போட்டு ஏமாற்றப்படும் பொழுது காட்டும் சீற்றமாகட்டும், நல்ல நடிப்பை வழங்கியுள்ளார்.
தூக்கத்தைத் தொலைத்த தீரனாக ஆரி அர்ஜுனன் நடித்துள்ளார். அவரது தேடலுக்கான க்ளூக்கள், அவரது கனவிலும், அவருக்கு ஏற்படும் மாயத்தோற்றத்திலும் கிடைக்கிறது. உண்மையை அறியும் ஆவலோடு தீரத்துடன் செயற்பட்டு, ஒரு பெரும் ஊழலை அம்பலப்படுத்துகிறார். பெரிய எதிரிகளைப் பகைத்துக் கொண்ட பின், தன் மகளை எதிரிகளின் ஆளுகைக்குள்ளேயே விட்டுவிடுவதாகக் கதையைக் கொண்டு போயுள்ளதைத் தவிர்த்திருக்கலாம். நாயகன் தங்கும் நான்காவது மாடியில் அதற்கு முன் உள்ளவர்கள் என்ன ஆனார்கள் எனவும், அனுபமா என்ன ஆனார் எனவும், விஸ்வம் செய்த கொலைகளும் ஊழலும் என்ன எனவும், மூன்று புள்ளிகளையும் நேர்த்தியாக இணைத்துவிடுகிறார் இயக்குநர் L.R.சுந்தரபாண்டி.


