
நாகமலையில் புதையுண்டிருக்கும் பொக்கிஷத்தை யாளி எனும் மிருகம் காவல் காக்கிறது. அப்பொக்கிஷத்தை அடைய நினைக்கும் மனிதர்கள் அனைவர்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர்.
காசியப முனிவர்க்கு ஆரி, சூரி என இரண்டு மனைவிகள் என ஒரு கிளைக்கதை பிரிகிறது. ஹிந்துப் புராணத்தின்படி, காசியப முனிவர், தக்ஷனின் எட்டு மகள்களை மணம் புரிந்தவர். அதில், கத்ரு எனும் மனைவியின் மூலமாக 1000 நாகர்களும், கத்ருவின் இளைய சகோதரி வினதா மூலமாக அருணன், கருடன் என இரண்டு மகன்களும் பிறந்தனர். இந்தப் புராணக் கதையை மையமாக எடுத்து, நாகர்களும் கருடர்களும் ஆரி சூரிக்குப் பிறந்ததாகப் படத்தில் காண்பிக்கின்றனர். கருடர்கள் அசுரர்கள் ஆகின்றனர், நாகர்களில் ஒருவரான வாசுகி சிவனின் கழுத்தில் அணியாக மாறுகின்றனர். பஞ்சபூதங்களை அடக்கவல்ல நாகரத்தினக் கற்களை நாகர்களுக்கு வரமாக அளிக்கின்றார் சிவன். கருடர்கள் அதைத் திருட நினைப்பதால், பூமியில் நாகமலையில் நாகதேசத்தை உருவாக்கி அக்கற்களைப் பாதுகாக்கின்றனர். அதற்குப் பாதுகாப்பாக ராவண வம்சத்தவர்கள் உள்ளனர். ராவண வம்சத்துக் கடைசி வாரிசான வீரபத்திரன், நாகரத்தினக் கற்களைப் பாதுகாக்க, அதை மறைத்துவிட்டு அதற்குத் திறவுகோலாக ஒரு வேலையும் உருவாக்குகிறார். வாரிசற்ற வீரபத்திரனையும், அவரது பட்டத்து யானையான அவரது அமைச்சர் வஞ்சமாகக் கொல்ல, அஸ்வத்தமானும் வீரபத்திரனும் ஆவி ரூபத்தில் அக்கற்களைப் பாதுகாத்து வருகின்றனர்.
அக்கற்களை எடுக்க நினைக்கின்றார் இனிகோ பிரபாகர். நாக வம்சத்தவரான அவர் அக்கற்களைக் கைப்பற்றியதும், அவரைக் கொன்று நாகரத்தினக்கற்களை அபகரிக்க, ஆயிரம் வருஷமாகக் காத்துள்ளார் கருட வம்சத்தைச் சேர்ந்த சாந்தினி. நாகரத்தினக் கற்கள் யாருக்குக் கிடைக்கின்றது என்பதுதான் படத்தின் கதை.
இந்தக் கதையில் மிகப் பரிதாபமாக காட்டுக்குள் உலா வருகின்றனர் யோகிபாபுவும், மொட்டை ராஜேந்திரனும். மருந்துக்கு மறந்து கூட நகைச்சுவை புரியாமல் நேரத்தைக் கடத்த மட்டுமே உதவியுள்ளனர். படத்தில், இத்தனை கதை, கதாபாத்திரங்கள் இருந்தும், இலக்கற்ற பயணமாக நீள்கிறது திரைக்கதை. யானை, யாளி, புலி, அரண்மனைகள், கிளைக்கதை அனிமேஷன் என படத்தில் நிறைய VFX காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சில இடங்களில் அசத்தினாலும், படத்தின் பட்ஜெட்டை பல இடத்தில் பிரதிபலித்துவிடுகின்றது.
நாகமலை பற்றி 1971 இல் தனது புத்தகத்தில் எழுதிய ஹரீஷ் பேராடியைச் சந்திக்கிறார் தொல்பொருள் ஆராய்ச்சியாளரான வேதிகா. கதை கேட்டும், படித்துக் கொண்டிருக்கும் வேதிகா தான் கஜானா 2-வின் நாயகி.
(பிற்சேர்க்கை: யுத்தம் காரணமாக ‘கஜானா’ படத்தின் திரையரங்க வெளியீட்டை நிறுத்தியுள்ளனர். ‘கஜானா’ படத்தை இன்று மாலை (மே 10) காட்சியோடு நிறுத்த முடிவு செய்துள்ளது படக்குழு. மக்களிடம் தற்போது திரைப்படம் பார்க்கும் மனநிலை இல்லை என்பதாலும், அனைவரும் போர் குறித்த செய்திகளை அறியவே விருப்பம் காட்டுவதாலும், திரையரங்குகளுக்கு மக்களின் வருகை மிக மிகக் குறைவாகவே உள்ளதால், யுத்தம் தொடர்பான பதற்றம் தணிந்த பிறகு வேறு ஒரு நல்ல தருணத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளது.)