
பாவகி என்டர்டெயின்மென்ட் சார்பில் ஜெயச்சந்தர் பின்னாம்னேனி, பாலாஜி மாதவன் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி மாதவன் எழுத்து இயக்கத்தில், நடிகர் சிபி, பவ்யா த்ரிகா, யாஸ்மின் பொன்னப்பா நடிப்பில், மாறுபட்ட திரைக்கதையில் பரபரப்பான எமோஷனல் டிரமாவாக உருவாகியுள்ள படம் ‘இடி மின்னல் காதல்’ ஆகும். வரும் மார்ச் 29 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
தயாரிப்பாளரும் இயக்குநருமான பாலாஜி மாதவன், “பி.வாசு அங்கிள் குடும்பத்திலிருந்து மூன்றாவது தலைமுறையாக சினிமாவில் வந்துள்ளோம். சினிமாவுக்குள் அறிமுகமாக வேண்டும் என நினைத்த போது, மிஷ்கின் சாரிடமிருந்தது தான் என் திரைப்பயணம் ஆரம்பமானது. அவரிடம் அஸிஸ்டென்டாக வேலை பார்த்தேன். பின்பு மாதவன் சாரிடம். அவரை நடிகராகத் தான் அணுகினேன், ராக்கெட்டரி ஸ்கிரிப்ட் தந்தார். அப்போது அவர் இயக்குநர் என்பதே தெரியாது. ஆனால் பிறகு அந்தப் படத்தில் இணைந்தேன். அந்தப் படம் என்னை மாற்றியது. அவர் இயக்குநராகப் பிரமிப்பைத் தந்தார். அந்தப் படம் மிகப் பெரிய அனுபவம். மிஷ்கின் சாரிடமும், மாதவன் சாரிடமும் முழுமையாக முழுப்படத்திலும் வேலை பார்த்தேன். பின் என் திரைக்கதையை எழுத ஆரம்பித்த போது, என் நண்பர் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒளிப்பதிவாளர் பெரும் துணையாக இருந்தார். அவர் தான் நாமே பண்ணலாம் எனச் சொன்னார் அங்கிருந்துதான் எங்கள் பாவகி கம்பெனி உதயமானது. அந்த ரெண்டு பேருக்கும் இந்நேரத்தில் நான் நன்றி கூறிக் கொள்கிறேன். அந்த நிலையிலிருந்து பலரும் எங்களுக்கு உதவினார்கள். யாருமே, ‘உங்களால் முடியுமா?’ எனக் கேட்கவில்லை. முழு ஆதரவு தந்தார்கள். ராதாரவி சார், பாலாஜி சக்திவேல் சார், ஆண்டனி சார் எல்லோரும் முழு ஆதரவைத் தந்தார்கள். இந்தப் படத்தின் கதை முடிந்த போது, சிபியை அணுகினேன். அவர் கதை மட்டுமல்ல, திரைக்கதையும் கொடுங்கள் படிக்கிறேன் என்றார். அங்கிருந்தே அவரை எனக்குப் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. இசையமைப்பாளர் சாம். மாதவன் சாருக்குச் செய்த கதைக்கும் சாம் தான் மியூசிக் என்று இருந்தது. இப்போதும் அவர் அந்தப் படத்தை, ‘நாம் கண்டிப்பாகச் செய்கிறோம்’ என்று சொல்வார். இந்தப் படத்தில் அசத்தலாக மியூசிக் தந்துள்ளார். நாங்கள் எடுத்துக் குடுத்த விஷுவலுக்கு மியூசிக் போட்டு அசத்தினார். ஒரு பாடல் எழுத மிஷ்கின் சாரை அணுகினேன். ஆனால் அவர் கபிலன் தான் இதற்கு சரியாக வருவார் என்றார். கபிலன் சாருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில், எல்லோரும் படத்தை நம்பி படத்திற்காக வேலை பார்த்தார்கள். படத்தில் நிறைய செட் இருக்கிறது. பாலசுப்பிரமணியம், படத்தின் ப்ரொடக்சன் டிசைனை மிக அருமையாகச் செய்து தந்தார். காக்கா முட்டை வசனகர்த்தா ஆனந்த் முருகேசன் ராக்கெட்ரியில் பழக்கம். அவர் தான் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். அவரை நடிக்கவும் வைத்துள்ளேன்” என்றார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ், “பாலாஜி வேறொரு கதை தான் முதலில் சொன்னார். அப்புறம் தான் இந்தப் படம் வந்தது. ராக்கெட்ரி படத்திலிருந்தே அவரைத் தெரியும். அதில் நடித்திருப்பார். இவர் எப்படி படம் இயக்குவார் என நினைத்தேன். ஆனால் முதலில் அவர் இயக்குநர் தான் என்பது பின் தான் தெரிந்தது. அவர் இப்படத்தை எப்படி செய்துள்ளார், என்பது இங்கு பேசியவர்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் இவ்வளவு கான்ஃபிடண்டாக பேசுகிறார்கள் என்றால் கதை அவ்வளவு சிறப்பாக வந்துள்ளது. பாலாஜி கதைகள் நிறைய வைத்துள்ளார் எல்லாமே அருமையாக இருக்கும். தமிழில் சிறப்பான கதைகள் இருக்கிறது. ஆனால் ஒரு ஹீரோ இருந்தால் தான் வாய்ப்பு கிடைக்கிறது. மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை. இங்கு கடந்த வருடம் ஜெயித்த படங்கள் எல்லாம் கன்டென்ட் நன்றாக இருந்த படங்கள் தான்” என்றார்.
நடிகர் சிபி, “இந்தப் படத்தின் கதை கேட்டபோது எனக்கு முக்கியமாகப் பட்டது, மென்டல் ஹெல்த். நமக்கு மென்டல் ஹெல்த் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். அதைப் பற்றி இப்படம் அழுத்தமாகப் பேசுகிறது. பிக்பாஸ் முடித்து வெளியில் வந்தவுடன் மூன்று மாதம் தான் அந்த பிரபலம் இருக்கும் என எனக்கு முன்னமே தெரியும். அதன் பிறகு நம் உழைப்பு தான் பேசும். பிக்பாஸ் வந்த பிறகு பல கதைகள் வந்தது. ஆனால் நாம் ஒரு படத்திற்குள் போகிறோம் என்றால் அது கண்டிப்பாக ஒரு சிறந்த படைப்பாக இருக்க வேண்டும். இப்படம் அப்படியானதொரு படம்” என்றார்.
இயக்குநர் வாசு, “பாலாஜி என்னிடம் கதையே சொல்லவில்லை. ஆனால் சைக்கலாஜிகலாக இருக்குமென்பது, இங்குப் பேசியவர்களை வைத்துத் தெரிகிறது. ஒரு நல்ல கதையை எடுத்துள்ளனர். இங்கு எல்லோருமே இப்படத்தின் அனுபவம் பற்றி அதன் கஷ்டம் பற்றிப் பேசினார்கள். இதைக் கேட்ட பிறகு தான் பல படங்கள் எடுத்த எங்கள் அனுபவங்கள் பிரமிப்பு தருகிறது. இசையமைப்பாளர் சாம் மிக அருமையாகப் பேசினார். பல விசயங்கள் குறித்துத் தெளிவாகப் பேசினார். யார் ஹிரோ எனக் கேட்காமல் என்ன கதை எனக் கேட்க வேண்டும் எனச் சொன்ன போது, எனக்குக் கைதட்டத் தோன்றியது. நாங்கள் ஒரு பொற்காலத்தில் படம் எடுத்தோம். சின்னத்தம்பி படத்தில் பிரபுவிற்குக் கதையே தெரியாது. ரஜினி சாரும் அப்படித்தான் ஒரு முறை கதை கேட்டால் அதன் பிறகு எதுவும் கேட்க மாட்டார். இன்று நிலைமை மாறிவிட்டது. பாலாஜி என்ன கஷ்டப்பட்டாலும் கண்டிப்பாக சினிமாவை விட்டுப் போக மாட்டார் அவரிடம் திறமை இருக்கிறது. என் மகன் இந்தப் படம் பார்த்து அழுதுவிட்டேன் எனச் சொன்னான். மாமாவாக பாலாஜியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்றார்.
இப்படம் வரும் மார்ச் 29 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.