
ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரம்மாண்ட சரித்திரக் காவியம் ‘கண்ணப்பா’ ஆகும். இதில், பிநடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவ்வாண்டு ஏப்ரல் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.
நடிகர் சரத்குமார், “பெங்களூரில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ‘இந்தக் காலகட்ட தலைமுறைக்கு சரித்திரம், இதிகாசங்களை நினைவுப்படுத்த வேண்டும். கண்ணப்பாவை ஒரு கதை என்று நினைக்க கூடாது. அது ஒரு வரலாறு, சரித்திரம். அதைப் பற்றி நிச்சயம் நாம் மக்களுக்குச் சொல்ல வேண்டும்’ என்று இயக்குநர் சொன்னார். அது தான் இந்தப் படத்திற்கும், தற்போதைய தலைமுறையினருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். இந்தப் படத்தை உருவாக்குவதற்குக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். உண்மையாக, நேர்மையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களது உண்மையான உழைப்புக்கு ஏற்ற வெற்றி கிடைக்க வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். கண்ணப்பா ஒரு வரிக் கதை தான், கண்ணப்பா யார் என்பது தெரியும், அவர் என்ன செய்தார் என்பது தெரியும். கண்ணப்பா தான் கண் தானத்திற்கு முதலில் வித்திட்டவர் என்று தொகுப்பாளினி சொன்னார்கள். அதுவும் உண்மை தானே! ஆனால் அதை எல்லாம் தாண்டி, கண்ணப்பா கதையை, உண்மைச் சரித்திரத்தை மிகப் பிரமாண்டமான முறையில் விஷ்ணு கொடுத்திருக்கிறார். இந்தப் படத்திற்காக விஷ்ணு நிறைய ஆய்வுகள் செய்திருக்கிறார். இந்தப் படத்திற்காக எதைச் செய்தாலும், அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் என்னை வியக்க வைத்தது. மிகப்பெரிய குழுவை நியூசிலாந்துக்கு அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்துவது என்பது சாதாரண விசயம் இல்லை. பொருளாதார ரீதியாகவும், மெனக்கெடல் ரீதியாகவும் சாதாரன விசயம் இல்லை. அதை விஷ்ணு மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். அதிகமான குளிர் இருந்தாலும் மேக்கப் போட்டு 7 மணிக்கு அனைவரும் படப்பிடிப்பில் பங்கேற்பது சாதாரண விசயம் இல்லை. சிவன் மீது பக்தி இருக்கிறதோ இல்லையோ, அவரைப் பற்றிய படத்தில் மிகவும் பயபக்தியுடன் ஒட்டுமொத்த படக்குழுவும் பணியாற்றினார்கள்.
என்னைப் பொறுத்தவரை பிரம்மாண்டம் ஒரு பக்கம், நடித்தவர்கள் அனைவரும் முன்னணி கலைஞர்கள். அக்ஷய் குமார், பிரபாஸ், மோகன்லால், மோகன் பாபு சார் என பெரிய பெரிய நட்சத்திரங்கள் இருக்கும் படம். அதே சமயம், பெரிய நட்சத்திரங்களுக்காக எடுக்கப்பட்ட படம் இல்லை. அந்த அந்தக் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைத்திருக்கிறார்கள். இயக்குநர் முகேஷ் குமார் சிங் பிரம்மாண்டமாக படத்தை எடுத்திருக்கிறார். அவருக்கு இந்தி, ஆங்கிலம் தெரிகிறது. ஆனால் தெலுங்கு திரைப்படத்தை, பான் இந்தியா அளவில் கொண்டு செல்வதற்கான நுணுக்கங்களுடன் இந்தப் படத்தைச் சிறப்பாக இயக்கியிருக்கிறார். ‘முன்னணி கலைஞர்களுடன் பணியாற்றியது பெருமை’ என்கிறார். அவருடன் பணியாற்றியதை நானும் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.