Shadow

கன்னி மாடம் – ஆட்டோ டிரைவர்களின் வாழ்க்கை

Kanni-maadam-audio-launch

முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார் போஸ் வெங்கட். அவர் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து, தனக்கென ஒரு தனித்த இடத்தைப் பிடித்திருப்பவர். தற்போது புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார்.

விழாவில் பேசிய ரோபோ சங்கர், “நான் பல இசை விழாக்களில் பங்கு கொண்டிருக்கிறேன் ஆனால் இந்த மேடை எனக்கு மிக நெருக்கமானது. முதல் முறையாகப் பாடகராக இங்கு மேடையேறியுள்ளேன். என்னைப் பாடகராக அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர் ஹரி சாய்க்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு அண்ணன் போஸ் வெங்கட்டுக்கு நன்றி. அவர் என் வாழ்வில் ஒவ்வொரு படியிலும் பேருதவியாக நின்றிருக்கிறார். பல வருடங்கள் முன்பாகவே இந்தக் கதையை என்னிடம் கூறியுள்ளார். ஒரு அற்புதமான படைப்பாக இப்படம் இருக்கும். தான் முதன் முதலாகப் பணிபுரிந்த ஆட்டோ டிரைவர் தொழிலை மறக்காமல் இந்தப் படத்தில் அவர்களுக்கு மரியாதை செய்துள்ளார். அவர் இன்னும் பல வெற்றிப் படங்களை இயக்கி பெரிய இயக்குநராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி, “நடிகர் போஸ் வெங்கட் சிறப்பான ஆளுமையாளர். அவரை மெட்டி ஒலி தொலைக்காட்சி தொடரில் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது முகத்தைப் பார்த்தாலே நம்முள் ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் கொண்ட நம்பிக்கை பிறக்கும். நாம் சோர்வாகும் போது, தோல்வி எண்ணங்கள் வரும்போது அவரது முகத்தைப் பார்த்தாலே போதும் பெரும் நம்பிக்கையை அந்த முகம் தரும். கன்னி மாடம் வெற்றிப்படமாக அமைய வாழ்த்துகள்” என்றார்.

இயக்குநர் விக்ரமன், “சமீப காலங்களில் சினிமாவில் சிறு பட்ஜெட்டில் தயாராகும் தரமான படங்களே, சினிமாவின் அனைத்துத் தரப்பினருக்கும் லாபகரமானதாக அமைகிறது. பெரிய முதலீட்டு படங்கள் வெற்றியடைவது அனைவரையும் இக்கட்டில் வைக்கும் சவாலானாதாக இருக்கிறது. கன்னிமாடம் தரத்தில் உயர்ந்து விளங்குகிற படைப்பாக இருக்கிறது” என வாழ்த்தினார்.

திண்டுக்கல் லியோனி பேசியது, “தமிழ் சினிமா வெகு அரிதாகவே ஆட்டோ, ரிக்ஷா டிரைவர்கள் பற்றிப் படம் எடுத்துள்ளது. கடந்த காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி இருவரும் ரிக்ஷா ஓட்டுநராக நடித்துள்ளனர் ரஜினி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். போஸ் வெங்கட் ஆட்டோ டிரைவர்கள் மீது உள்ள அன்பில் அவர்களைப் பற்றி அழகாக படம் எடுத்துள்ளார்” என்றார்.

நாயகன் ஶ்ரீராம் கார்த்திக், “நானும் போஸ்வெங்கட் சாரும் சில காலம் முன் ஒரு படப்பிடிப்பில் இருந்தபோது என்னை ஹீரோவாக வைத்து படம் எடுப்பதாகச் சொன்னார். சொன்னது போலவே இப்படத்தில் எனக்கு ஹீரோ சான்ஸ் தந்தார்” என்றார்.

ஒளிப்பதிவாளர் இனியன், “இப்படம் சின்ன பட்ஜெட்டில் வெகு திட்டமிடலுடன் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டது. படப்பிடிப்பு தளத்தில் ஒரு முறை மிகவும் பரபரப்பாக இருந்த போது தயாரிப்பாளர் ஹஷீர் இருந்தார். அவரை யார் எனத் தெரியாமல் வேகமாக ஒதுங்கிப் போகச் சொல்லி சத்தமாகச் சொன்னேன். அவரும் ஒதுங்கிப் போய்விட்டார். பின் தான் அவர் தயாரிப்பாளர் என்பதே தெரிய வந்தது. அந்த நிகழ்வுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அவரது நட்பான சுபாவம் போலவே படமும் இனிமையாக வந்துள்ளது” என்றார்.

ரூபி ஃப்லிம்ஸ் தயாரிப்பாளர் ஹஷீர், “போஸ் வெங்கட் முதல் முறையாக கதை கூறியபோதே மிக நல்ல படமாக இப்படம் வரும் எனத் தோன்றியது. உடனடியாக படம் தயாரிக்க ஒப்புக் கொண்டேன். நல்ல படங்களைத் தருவது என்பதே எங்கள் நிறுவனத்தின் குறிக்கோள். ‘கன்னி மாடம்’ தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படைப்பாக இருக்கும். இப்படத்தைப் பெரிய அளவில் ரிலீஸ் செய்யும் செண்பகமூர்த்தி அவர்களுக்கு நன்றி” என்றார்.

ஸ்ரீ ராம் மற்றும் காயத்ரி இப்படத்தின் மூலம் கதாநாயகன், கதாநாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படம் சென்னையில் உள்ள சூளைமேடு, மேட்டுக் குப்பம் மற்றும் விஜய ராகவா புறம் போன்ற இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோனி தாசன் இப்படத்தில் பாடல்கள் பாடியது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. ஹரிஷ் J இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஷல் ஜெய்னி எடிட்டிங், சிவ ஷங்கர் ஆர்ட், விவேகா பாடல், தினேஷ் சுப்புராயன் சண்டை இயக்கம் செய்துள்ளார்.